பாடல் 71 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - தந்யாஸி ;
தாளம் - ஸங்கீர்ணசாபு - 4 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தக-1 ; - எடுப்பு - அதீதம்
தகதிமி-2, தகிட-1 1/2, தக-1 ; - எடுப்பு - அதீதம்
தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனம் தனத்தத் தந்தனம் ...... தனதான |
நிதிக்குப் பிங்கலன் பதத்துக் கிந்திரன் நிறத்திற் கந்தனென் ...... றினைவொரை நிலத்திற் றன்பெரும் பசிக்குத் தஞ்சமென் றரற்றித் துன்பநெஞ் ...... சினில்நாளும் புதுச்சொற் சங்கமொன் றிசைத்துச் சங்கடம் புகட்டிக் கொண்டுடம் ......பழிமாயும் புலத்திற் சஞ்சலங் குலைத்திட் டுன்பதம் புணர்க்கைக் கன்புதந் ...... தருள்வாயே மதித்துத் திண்புரஞ் சிரித்துக் கொன்றிடும் மறத்திற் றந்தைமன் ...... றினிலாடி மழுக்கைக் கொண்டசங் கரர்க்குச் சென்றுவண் டமிழ்ச்சொற் சந்தமொன் ...... றருள்வோனே குதித்துக் குன்றிடந் தலைத்துச் செம்பொனுங் கொழித்துக் கொண்டசெந் ...... திலின்வாழ்வே குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங் குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே. |
செல்வத்துக்கு குபேரன் என்றும், நற்பதவிக்கு தேவேந்திரன் என்றும், பொன் போன்ற நிறத்துக்கு கந்தப்பெருமான் என்றும் கொடுப்பதற்கு வருந்தும் செல்வந்தரிடம் சென்று, இந்த உலகத்தில் தன் பெரும் பசியைப் போக்குதற்கு நீயே புகலிடம் என்று கூறி முறையிட்டு, துயரம் மிகுந்த மனதில் தினமும் புதுப்புதுச் சொற்களின் கூட்டத்தால் ஒரு கவிதை பாடி, சங்கடத்தில் சிக்கி உடம்பு அழிந்து மாய்கின்ற புலன்களால் வரும் துன்பங்களைத் தொலைத்து, உன் திருவடியைச் சேர்வதற்கு உரிய அன்பினை வழங்கி அருள்வாயாக. மனத்தில் கருதி, வலிய திரிபுரத்தை புன்னகை செய்தே எரித்த வீரம் மிகுந்த தந்தையாரும், அம்பலத்தில் ஆனந்த நடனம் புரிந்தவரும், மழுவைக் கரத்தில் ஏந்தியவருமான சங்கரற்கு குருவாகச் சென்று, வளமான தமிழ்ச் சொற்களால் வேதப் பொருளை ஓதியவனே, அலைகள் குதித்து, குன்றுகளைத் தோண்டி அலைத்து, சிவந்த பொன்னையும் கொழித்துத் தள்ளுகின்ற திருச்செந்தூரின் செல்வமே, குறவர்களின் பொன்னான குலக்கொடியாகிய வள்ளியை முன்பு தினைப்புனத்தில் செம்மையான கரங்களைக் கூப்பிக் கும்பிட்ட பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 71 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்றும், தனத்தத், மிகுந்த, சென்று, பெருமாளே, தந்தனம்