பாடல் 70 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - கோதார
கெளளை; தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12
தான தந்த தான தான - தான தந்த தான தான தான தந்த தான தான ...... தனதான |
நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாகி நாரி யென்பி லாகு மாக ...... மதனூடே நாத மொன்ற ஆதி வாயில் நாட கங்க ளான ஆடி நாட றிந்தி டாம லேக ...... வளராமுன் நூல நந்த கோடி தேடி மால்மி குந்து பாரு ளோரை நூறு செஞ்சொல் கூறி மாறி ...... விளைதீமை நோய்க லந்த வாழ்வு றாமல் நீக லந்து ளாகு ஞான நூல டங்க வோத வாழ்வு ...... தருவாயே காலன் வந்து பால னாவி காய வென்று பாசம் வீசு காலம் வந்து வோல மோல ...... மெனுமாதி காம னைந்து பாண மோடு வேமி னென்று காணு மோனர் காள கண்ட ரோடு வேத ...... மொழிவோனே ஆல மொன்று வேலை யாகி யானை யஞ்சல் தீரு மூல ஆழி யங்கை ஆயன் மாயன் ...... மருகோனே ஆர ணங்கள் தாளை நாட வார ணங்கை மேவு மாதி யான செந்தில் வாழ்வ தான ...... பெருமாளே. |
ஒன்பது* வாசல்களைப் பிளந்து வைத்த, அவதூறுக்கு இடமான, இவ்வுடம்பு கால்களும் கரங்களும் கொண்டு, நரம்புகள், எலும்புகள் இவைகளால் ஆகிய சா£ரம். அந்த உடம்பினுள் ஒலி என்னும் இந்திரியம் பொருந்த, எல்லாத் தொழில்களுக்கும் மூல காரணமான ஐம்பொறிகள் கொண்டு பல வகையான கூத்துக்களை இவ்வுலகில் ஆடி, இவ்வாறு உயிர் போயிற்று என்று உலகில் யாரும் அறியாதபடி உயிர் பிரியும் வரை இந்த உடம்பு வளர்வதற்கு முன்பு, பல கோடி நூல்களைத் தேடிப் படித்து மயக்கத்தை அடைந்து, உலகில் உள்ள செல்வந்தரை நூறு செவ்வையான சொற்களால் பாடி, புத்தி மாறி, அதனால் தீமை விளைந்து, பலவிதமான பிணிகளுடன் கலந்த துன்ப வாழ்வை அடையாமல், நீ எனது அறிவில் கலந்து உள்ளத்தில் பொருந்தும் ஞான சாஸ்திரங்கள் முழுவதும் ஓதி உணரக் கூடிய வாழ்வைத் தந்தருள்வாயாக. யமன் வந்து இளைஞன் மார்க்கண்டேயனின் உயிரை வருத்த பாசக்கயிறை வீசுகின்ற சமயத்திலே வெளிப்பட்டு அஞ்சேல் அஞ்சேல் என்று அருளிய ஆதி முதல்வரும், மன்மதனை நீ உனது ஐந்து மலர்க் கணைகளோடு எரிவாயாக என்று நெற்றிக் கண்ணால் பார்த்த மெளன மூர்த்தியும், நீலகண்டருமாகிய சிவபெருமானுக்கு வேத முதலாகிய பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசித்தவனே, ஆலகாலம் தோன்றிய பாற்கடலில் பள்ளிகொண்டு, கஜேந்திரன் என்னும் யானையின் அச்சத்தைத் தீர்த்த ஆதிமூலப் பொருளும், சக்ராயுதத்தை அழகிய கரத்தில் ஏந்துபவரும், ஆயர் குலத்தில் தோன்றியவருமான மாயன் திருமாலின் மருகோனே, வேதங்களெல்லாம் உனது திருவடிகளைத் துதிக்க, சேவற் கொடியைக் கரத்திலே தாங்கிய ஆதிப் பரம் பொருளாகி, திருச்செந்தூரில் வாழ்கின்ற பெருமாளே.
* ஒன்பது வாசல்கள்: இரு கண்கள், இரு செவிகள், இரு நாசிகள், ஒரு வாய், இரு கழிவுப் பாதைகள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 70 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வந்து, தந்த, கொண்டு, என்னும், உயிர், உனது, அஞ்சேல், உலகில், பெருமாளே, மாயன், கோடி, யாகி, நூறு, மாறி, வாழ்வு, மருகோனே