பாடல் 72 - திருச்செந்தூர் - திருப்புகழ்

பாடல் 72
- திருச்செந்தூர்
ராகம் - பாகேஸ்ரீ; தாளம் - மிஸ்ரசாபு - விலோமம் - 3 1/2
தகதிமி-2, தகிட-1 1/2
ராகம் - பாகேஸ்ரீ; தாளம் - மிஸ்ரசாபு - விலோமம் - 3 1/2
தகதிமி-2, தகிட-1 1/2
தனனாத் தனன தனனாத் தனன தனனாத் தனன ...... தனதான |
நிலையாப் பொருளை யுடலாக் கருதி நெடுநாட் பொழுது ...... மவமேபோய் நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள் நிறைவாய்ப் பொறிகள் ...... தடுமாறி மலநீர்ச் சயன மிசையாப் பெருகி மடிவேற் குரிய ...... நெறியாக மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு மலர்தாட் கமல ...... மருள்வாயே கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி குளமாய்ச் சுவற ...... முதுசூதம் குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு கொதிவேற் படையை ...... விடுவோனே அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர அழியாப் புநித ...... வடிவாகும் அரனார்க் கதித பொருள்காட் டதிப அடியார்க் கெளிய ...... பெருமாளே. |
நிலையில்லாத பொருட்களை பொன்னாக மதித்து, நீண்ட நாட்களெல்லாம் வீணாக்கி, மனத்திண்மை போய், செவிடாகி, குருடாகி, நோய்கள் மிகுந்து, ஐம்பொறிகளும் தடுமாற்றம் அடைந்து, மலமும், சிறுநீரும் படுக்கை மேலேயே (தன்னிச்சையின்றி) பெருகி, இறந்து படுவேனுக்கு, கடைத்தேறுவதற்கு உரிய முக்தி நெறியாக, வேதங்களாலும் போற்றுதற்கு அரியதான ஒளியாக விரிந்துள்ள நின்மலர்த் தாமரையை தந்தருள்வாயாக. கொலையே செய்து வருகின்ற அசுரர்கள் அழிய, பெருங்கடல் சிறு குளம் போல் வற்றிப்போக, முற்றிய மாமரம் (வடிவில் நின்ற சூரன்) குறிவைத்தபடி பட்டு, பிளவுபட, மேலே பற்றும்படியாக பிடியுள்ள எரிவீசும் வேற்படையை செலுத்தியவனே, திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) கடற்கரையில் மகிழ்ச்சியோடு கோலம் கொண்ட குமரனே, அழியாத பரிசுத்த வடிவில் உள்ள சிவனார்க்கு யாவும் கடந்த ஓம் என்னும் பொருளை விளக்கிய அதிபனே, அடியவர்களுக்கு எளிதான பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 72 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனாத், பெருமாளே, வடிவில், நெறியாக, பெருகி, பொருளை, திருச்செந்தூர்