பாடல் 680 - திருவேற்காடு - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தானந்தா தனதான தானந்தா தனதான தானந்தா தனதான ...... தனதான |
ஆலம்போ லெழுநீல மேலங்காய் வரிகோல மாளம்போர் செயுமாய ...... விழியாலே ஆரம்பால் தொடைசால ஆலுங்கோ புரவார ஆடம்பார் குவிநேய ...... முலையாலே சாலந்தாழ் வுறுமால ஏலங்கோர் பிடியாய வேளங்கார் துடிநீப ...... இடையாலே சாரஞ்சார் விலனாய நேகங்கா யமன்மீறு காலந்தா னொழிவேது ...... உரையாயோ பாலம்பால் மணநாறு காலங்கே யிறிலாத மாதம்பா தருசேய ...... வயலூரா பாடம்பார் திரிசூல நீடந்தா கரவீர பாசந்தா திருமாலின் ...... மருகோனே வேலம்பார் குறமாது மேலும்பார் தருமாதும் வீறங்கே யிருபாலு ...... முறவீறு வேதந்தா வபிராம நாதந்தா வருள்பாவு வேலங்கா டுறைசீல ...... பெருமாளே. |
ஆலகால விஷத்தைப் போல் எழுந்து நீலோற்பல மலருக்கும் மேலானதாக அங்கு அமர்ந்து, ரேகைகள் கொண்டு அழகு வாய்ந்து, கண்டோர் இறந்து போகும்படிச் சண்டை செய்ய வல்ல மாயம் நிறைந்த கண்களாலே, முத்து ஆரம் தம்மேல் மாலையாக மிகவும் அசைகின்ற, கோபுரம் போல் எழுந்து ஆடம்பரமாகக் குவிந்துள்ள, அன்புக்கு இடமான மார்பகங்களாலே, மிகவும் இளைத்திருப்பதும், ஆசை தரக் கூடியதாகப் பொருந்தி அங்கு ஒரு பிடி அளவே இருப்பதும், விருப்பத்துக்கு அங்கு இடமாய் நிறைந்ததும், உடுக்கை போன்றதுமான இடுப்பாலே, (என்னை வாழவிடாமல் செய்யும் விலைமாதரை விட்டு) வேறு புகலிடம் இல்லாதவனாய் இருக்கும் எனக்கு, நிறைய பிறப்புகளில் என் உயிரைக் கவர்ந்து சென்ற யமன் என்னை அதிகாரம் செய்து வென்று செல்லும் காலம் தான் நீங்குதல் என்றைக்கு எனச் சொல்ல மாட்டாயோ? பூமியின் இடமெல்லாம் கடல் நீரால் சேர்க்கை தோன்றுங்கால் (பிரளய காலத்தில்), அப்போதும் அழிவில்லாத தேவி அம்பிகை பெற்ற குழந்தையே, வயலூரில் குடிகொண்டுள்ள தெய்வமே, பெருமை வாய்ந்த அம்பு போல கூர்மை வாய்ந்த முத்தலைச் சூலத்தால், மேம்பட்டு நின்ற அந்தகாசுரனை* வருத்தின வீரனாகிய சிவன் மீது அன்பைப் பொழியும் திருமாலின் மருகனே, வேல் போலவும் அம்பு போலவும் (உள்ள கண்களைக் கொண்ட) குறப் பெண்ணாகிய வள்ளியும், தேவர்கள் வளர்த்த தேவயானை அம்மையும் பெருமிதத்துடன் அங்கே இரண்டு புறமும் பொருந்த விளங்க வேதத்தின் முடிவில் இருப்பவனே, அழகனே, ஒலியின் முடிவில் இருப்பவனே, திருவருளைப் பரப்பும் திருவேற்காட்டில்** வீற்றிருக்கும் தூயவனே, பெருமாளே.
* அந்தகாசுரன் அரக்கன் இரணியனுக்கு மைந்தன், பிரகலாதனுக்குத் தம்பி. இவன் தேவர்களை வருத்த, சிவபெருமான் பைரவ மூர்த்தியை ஏவினார். அவர் சூலத்தினால் அந்தகாசுரனைக் குத்தி அடக்கினார்.
** திருவேற்காடு, சென்னையின் அருகிலுள்ள ஆவடி ரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கில் 4 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 680 - திருவேற்காடு - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதான, தானந்தா, அங்கு, அம்பு, போலவும், முடிவில், இருப்பவனே, வாய்ந்த, என்னை, போல், எழுந்து, திருமாலின், மிகவும், பெருமாளே