பாடல் 678 - பாக்கம் - திருப்புகழ்

ராகம் - ...; தாளம்
-
தாத்தத்த தானதன தாத்தத்த தானதன தாத்தத்த தானதன ...... தனதான |
கார்க்கொத்த மேனிகடல் போற்சுற்ற மானவழி காய்த்தொட்டொ ணாதவுரு ...... ஒருகோடி காக்கைக்கு நாய்கழுகு பேய்க்கக்க மானவுடல் காட்டத்தி னீளெரியி ...... லுறவானிற் கூர்ப்பித்த சூலனத னாற்குத்தி யாவிகொடு போத்துக்க மானகுறை ...... யுடையேனைக் கூப்பிட்டு சாவருளி வாக்கிட்டு நாமமொழி கோக்கைக்கு நூலறிவு ...... தருவாயே போர்க்கெய்த்தி டாமறலி போற்குத்தி மேவசுரர் போய்த்திக்கெ லாமடிய ...... வடிவேலாற் பூச்சித்தர் தேவர்மழை போற்றுர்க்க வேபொருது போற்றிச்செய் வார்சிறையை ...... விடுவோனே பார்க்கொற்ற நீறுபுனை வார்க்கொக்க ஞானபர னாய்ப்பத்தி கூர்மொழிகள் ...... பகர்வாழ்வே பாக்கொத்தி னாலியலர் நோக்கைக்கு வேல்கொடுயர் பாக்கத்தில் மேவவல ...... பெருமாளே. |
கருமேகத்துக்கு நிகரான உடல் நிறத்தை உடைய கடல் போலப் பரந்த சுற்றத்தார்கள் பொருந்திய இடத்திலே பிறந்து தோன்றி, நிலைத்து நிற்காத வடிவம் இந்த உடல் ஆகும். ஒரு கோடிக் கணக்கான காக்கைகளுக்கும் நாய்களுக்கும், கழுகுகளுக்கும், பேய்களுக்கும் உணவுத் தானியமாக ஆகப்போவது இந்த உடல். சுடுகாட்டில் பெரு நெருப்பில் சேரும்படி, ஆகாயத்தில் இருந்து கூர்மை கொண்ட சூலாயுதத்தை உடைய யமன் சூலத்தால் என்னைக் குத்தி என் ஆவியைக் கொண்டு போகின்ற துக்கமான ஒரு குறைபாட்டை உடைய என்னை, அருகே அழைத்து, விசாரித்துத் திருவருள் பாலித்து, (உன்னைப் பாடும்படியான) வாக்கை எனக்கு அருளி, உன் திரு நாமங்களைச் சொற்களில் பாடலாக அமைப்பதற்கு வேண்டிய நூல் அறிவைத் தந்து அருளுக. சண்டைக்குச் சளைக்காத யமனைப் போல எதிர்த்து வந்த அசுரர்கள் கூடிப் போய் திசை தோறும் இறக்கும்படியாக, கூரிய வேலினால் குத்தி, சித்தர்களும் தேவர்களும் மழை போல பூக்களை (போர்க்களத்தில்) மிகப் பொழிய உக்கிரமாகச் சண்டை செய்து, போற்றி வணங்கும் தேவர்களுடைய சிறையை நீக்கியவனே, பூமியில் வெற்றி தருகின்ற திருநீற்றை அணிகின்ற சிவபெருமானுக்கு, மிக்க ஞானத்தில் சிறந்தவனாக, பக்தியை நன்கு வளர்க்க வல்ல உபதேச மொழிகளைக் கூறிய குரு மூர்த்தியாகிய செல்வமே, பாமாலைகளால் இயற்றமிழ் வல்ல புலவர்கள் விரும்பிப் பார்ப்பதற்காக, வேல் ஏந்தி, சிறந்த பாக்கம்* என்னும் தலத்தில் வீற்றிருக்க வல்ல பெருமாளே.
* பாக்கம், சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் வழியில் தின்னனூர் ரயில் நிலையத்துக்கு 3 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 678 - பாக்கம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடைய, வல்ல, தாத்தத்த, உடல், தானதன, குத்தி, பெருமாளே