பாடல் 677 - திருவாலங்காடு - திருப்புகழ்

ராகம் -
மோஹனம்
தாளம் - சதுஸ்ர ரூபகம் - 6
தாளம் - சதுஸ்ர ரூபகம் - 6
தனனாத் தானன தானம் தனனாத் தானன தானம் தனனாத் தானன தானம் ...... தனதான |
தவர்வாட் டோமர சூலந் தரியாக் காதிய சூருந் தணியாச் சாகர மேழுங் ...... கிரியேழுஞ் சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலு நீலந் தரிகூத் தாடிய மாவுந் ...... தினைகாவல் துவர்வாய்க் கானவர் மானுஞ் சுரநாட் டாளொரு தேனுந் துணையாத் தாழ்வற வாழும் ...... பெரியோனே துணையாய்க் காவல்செய் வாயென் றுணராப் பாவிகள் பாலுந் தொலையாப் பாடலை யானும் ...... புகல்வேனோ பவமாய்த் தாணது வாகும் பனைகாய்த் தேமண நாறும் பழமாய்ப் பார்மிசை வீழும் ...... படிவேதம் படியாப் பாதகர் பாயன் றியுடாப் பேதைகள் கேசம் பறிகோப் பாளிகள் யாருங் ...... கழுவேறச் சிவமாய்த் தேனமுதூறுந் திருவாக் காலொளி சேர்வெண் டிருநீற் றாலம ராடுஞ் ...... சிறியோனே செழுநீர்ச் சேய்நதி யாரங் கொழியாக் கோமளம் வீசுந் திருவோத் தூர்தனில் மேவும் ...... பெருமாளே. |
வில், வாள், தண்டாயுதம், சூலம் இவைகளைத் தரித்து, பல கொலைகளைச் செய்த சூரனும், வற்றாத கடல்கள் ஏழும், மலைகள் ஏழும், சருகு போலக் காய்ந்து போகும்படி எரித்த ஒளிமிக்க வேலும், சண்டை செய்யவல்ல கால்களை உடைய சேவலும், நீல நிறமானதும், நடனம் ஆடவல்லதுமான மயிலாம் குதிரையும், தினைப் புனத்தைக் காத்த, பவளம் போன்ற வாயைக்கொண்ட, வேடர் குலத்து மான் போன்ற வள்ளியும், தேவலோகத்தாளாகிய ஒப்பற்ற தேன் அனைய தேவயானையும், துணையாகக் கொண்டு குறைவின்றி வாழ்கின்ற கோமானே, நீ துணையாகக் காவல் செய்து ரக்ஷிப்பாய் என்று உணராத பாவிகளிடத்தில் சென்று அழிவில்லாத அருமையான பாடல்களை நானும் சொல்லித் திரியலாமோ? பிறப்பை ஒழித்து, ஆணாக இருந்த பனைமரம் காய்த்து நறுமணம் வீசும் பழங்களாக பூமியின் மீது விழும்படியாக,* வேதத்தைப் படிக்காத பாதகர்கள் (1) பாயைத் தவிர வேறு எந்த ஆடையும் உடுக்காத பேதைகள் (2) தலைமயிரைப் பிய்த்துப் பறிக்கும் கூத்தாடிச் சமர்த்தர்கள் (3) ஆகிய சமணர் எல்லாருமாகக் கழுவில் ஏறும்படியாக, சிவமயமானதும், தேனும் அமுதும் ஊறினது போலத் தித்திக்கும் உனது (திருஞானசம்பந்தரது) திருவாக்கினாலும் தேவாரப் பாடல்களினாலும், பெருமை வாய்ந்த வெள்ளைத் திருநீற்றாலும், வாதுப் போர் புரிந்த இளையோனே, செழுமை வாய்ந்த நீரைக் கொண்ட சேயாறு முத்துக்களைக் கரையிலே கொட்டும் அழகு நிறைந்த திருவோத்தூர்** என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* திருவோத்தூரில் பனைமரங்கள் ஆண்பனையாக இருந்தமை கண்டு சமணர்கள் பரிகசிக்க, அவ்வூரில் சிவனைத் தரிசித்த திருஞானசம்பந்தர் (குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர் என்ற) தேவாரத்தைப் பாட, ஆண்பனைகள் யாவும் குலைதள்ளி பனம் பழங்களைக் கொட்டின. பனைகளின் பிறப்பும் ஒழிந்தன.(1) (2) (3) இவையாவும் சமண குருமாரைக் குறிப்பன:(1) சமணர் வேதத்தைப் படித்ததில்லை.(2) சமணர் கோரைப் பாயைத் தவிர வேறு ஆடை உடுப்பதில்லை.(3) சமண குருமார் ஒருவனைக் குருவாக ஆக்கும்போது அவனது தலைமயிரை ஒவ்வொன்றாகப் பிய்த்துப் பறிக்கும் வழக்கம் உண்டு.
** திருவோத்தூர் காஞ்சீபுரத்துக்குத் தென்மேற்கே 19 மைலில் சேயாற்றின் கரையின் உள்ளது.இங்கு சிவபிரான் தேவர்களுக்கும் முநிவர்களுக்கும் வேதத்தை ஓதுவித்ததால் திருவோத்தூர் எனப்படும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 677 - திருவாலங்காடு - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - சமணர், தனனாத், தானம், தானன, பிய்த்துப், வேறு, வாய்ந்த, திருவோத்தூர், தவிர, பறிக்கும், வேதத்தைப், பேதைகள், வேலும், பெருமாளே, ஏழும், துணையாகக், பாயைத்