பாடல் 672 - விரிஞ்சிபுரம் - திருப்புகழ்

ராகம் -
மோஹனம் .
தாளம் - திஸ்ர த்ருவம் - திஸ்ரநடை - 10 1/2
- எடுப்பு - /3/3/3 0
தாளம் - திஸ்ர த்ருவம் - திஸ்ரநடை - 10 1/2
- எடுப்பு - /3/3/3 0
தனன தந்த தான தனன தந்த தான தனன தந்த தான ...... தனதான |
மருவு மஞ்சு பூத முரிமை வந்தி டாது மலமி தென்று போட ...... அறியாது மயல்கொ ளிந்த வாழ்வு அமையு மெந்த நாளும் வகையில் வந்தி ராத ...... அடியேனும் உருகி யன்பி னோடு உனைநி னைந்து நாளும் உலக மென்று பேச ......அறியாத உருவ மொன்றி லாத பருவம் வந்து சேர உபய துங்க பாத ...... மருள்வாயே அரிவி ரிஞ்சர் தேட அரிய தம்பி ரானும் அடிப ணிந்து பேசி ...... கடையூடே அருளு கென்ற போது பொருளி தென்று காண அருளு மைந்த ஆதி ...... குருநாதா திரியு மும்பர் நீடு கிரிபி ளந்து சூரர் செருவ டங்க வேலை ...... விடுவோனே செயல மைந்த வேத தொனிமு ழங்கு வீதி திருவி ரிஞ்சை மேவு ...... பெருமாளே. |
பொருந்திய மண், நீர், தீ, காற்று, வெளி என்ற ஐந்து பூதங்களுக்குச் சொந்தம் ஆகாத வண்ணம் இந்த உடலை அழுக்கு என்று உதறிப் போடத் தெரியாமல் மயக்கம் நிறைந்த இந்த வாழ்வு போதுமே என்று எப்போதும் அவ்வெண்ணம் நன்கு மனத்தில் தோன்றாத நானும், உள்ளம் உருகி அன்போடு தினமும் உன்னை நினைத்து, உலக விஷயங்களைப் பேசும் பேச்சே பேச அறியாத இவ்வடிவம்தான் இது என்ற கூற இயலாத நிலையை நான் அடைய உன் இரண்டு பரிசுத்தமான பாதங்களை எனக்கு நீ தந்தருள்வாயாக. திருமாலும் பிரமனும் தேடுதற்கு அரியவரான தம்பிரான் சிவபிரானும் உனது திருவடிகளில் பணிந்து பேசி, இறுதியில் அந்தப் பிரணவப் பொருளை எனக்கு அருள்க என்று கேட்க இதுதான் பொருள் என்று அவர் உணரும்படியாக உபதேசித்து அருளிய குமரனே, அந்த ஆதிசிவனுக்கும் குருநாதனே, சூரன் செல்லும் இடமெல்லாம் திரியும் விண் அளாவிய நீண்ட ஏழு மலைகளையும் பிளந்து, அசுரர்களின் போர் ஒடுங்குமாறு வேலாயுதத்தைச் செலுத்தியவனே, ஒழுங்காக ஓதப்படும் வேதத்தின் ஒலி முழங்கும் வீதியைக் கொண்ட திரிவிரிஞ்சைத் தலத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே.
* திருவிரிஞ்சைத் தலம் (விரிஞ்சிபுரம்) வேலூருக்கு மேற்கே காட்பாடியிலிருந்து 8 மைல் தொலைவில் உள்ளது.பிரமன் பூஜித்ததால் 'விரிஞ்சன்புரம்' ஆகி, 'விரிஞ்சிபுரம்' என்று பெயர் மருவிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 672 - விரிஞ்சிபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, அருளு, மைந்த, பெருமாளே, விரிஞ்சிபுரம், எனக்கு, பேசி, அறியாத, வந்தி, தென்று, வாழ்வு, நாளும், உருகி