பாடல் 673 - திருவாலங்காடு - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனதானந் தானன தானன தனதானந் தானன தானன தனதானந் தானன தானன ...... தனதான |
கனவாலங் கூர்விழி மாதர்கள் மனசாலஞ் சால்பழி காரிகள் கனபோகம் போருக மாமிணை ...... முலைமீதே கசிவாருங் கீறுகி ளாலுறு வசைகாணுங் காளிம வீணிகள் களிகூரும் பேயமு தூணிடு ...... கசுமாலர் மனவேலங் கீலக லாவிகள் மயமாயங் கீதவி நோதிகள் மருளாருங் காதலர் மேல்விழு ...... மகளீர்வில் மதிமாடம் வானிகழ் வார்மிசை மகிழ்கூரும் பாழ்மன மாமுன மலர்பேணுந் தாளுன வேயரு ...... ளருளாயோ தனதானந் தானன தானன எனவேதங் கூறுசொல் மீறளி ததைசேர்தண் பூமண மாலிகை ...... யணிமார்பா தகரேறங் காரச மேவிய குகவீரம் பாகும ராமிகு தகைசாலன் பாரடி யார்மகிழ் ...... பெருவாழ்வே தினமாமன் பாபுன மேவிய தனிமானின் தோளுட னாடிய தினைமாவின் பாவுயர் தேவர்கள் ...... தலைவாமா திகழ்வேடங் காளியொ டாடிய ஜெகதீசங் கேசந டேசுரர் திருவாலங் காடினில் வீறிய ...... பெருமாளே. |
பெருத்த, கொடிய விஷம் மிக்குள்ள கண்களை உடைய விலைமாதர்கள், மனத்தில் வஞ்சனையுடன் பசப்பி நடிப்பு வண்ணம் மிகுந்த பழிகாரிகள். மிகுந்த போக சுகத்தைத் தரக் கூடியதும், தாமரை மொட்டுக்கு ஒப்பதானதுமான மார்பின் மீதே அன்பு மிகுதிக்கு அடையாளமாக கீறல்களாலும் கிள்ளுதலின் குறிகளாலும் பழிப்புக்கு இடம் தரும் களிம்பைத் தடவும் வீணிகள். ஆவேசத்தைத் தருகின்ற, தீய வெறித் தன்மையைக் கொடுக்கும் மாமிச உணவைத் தருகின்ற, அசுத்தர்கள். மனத்தில் பொருந்திய சூழ்ச்சி நிறைந்த அழகிய தந்திரவாதிகள், மாயம் நிறைந்த இசையில் இன்பம் கொள்பவர்கள். காம மயக்கம் நிறைந்த காதல் செய்பவர்கள். தம் மீது மோகம் கொண்டு வந்தவர்கள் மேலே விழுகின்ற பொது மகளிர். ஒளி பொருந்திய மேல் மாடம் உள்ள (உப்பரிகை உள்ள) வீடுகளில் நிலவையும் வானத்தையும் அளாவி விளங்க இருப்பவர்கள் மீது மகிழ்ச்சி நிரம்பக் கொள்ளும் பாழான மனம் இது. உன்னுடைய தாமரை மலரை ஒத்த திருவடியை தியானிக்கவே உனது திருவருளைப் பாலிக்க மாட்டாயோ? தனதானந் தானன தானன என்று வேதம் ஓதுவோரது சொல்லொலியினும் மிகுந்ததான ஒலியுடன் வண்டுகள் நிறைந்து சேர்ந்துள்ள குளிர்ந்த பூக்களாலான நறு மணம் கொண்ட மாலைகளை அணிந்த மார்பனே, நொறுங்குதலும் அழிவும் அப்போது நிறையச் செய்த ஆட்டின் மேல் வாகனமாக ஏறி அமர்ந்த குக வீரனே, தேவி பார்வதியின் குமாரனே, மிக்க மேம்பாடு நிறைந்த அடியார்கள் மகிழ்கின்ற பெரும் செல்வமே, தினந்தோறும் உன் மீது கொண்ட அன்புடன் தினைப் புனத்தில் இருந்த ஒப்பற்ற மான் போன்ற (வள்ளியின்) தோளுடன் விளையாடியவனே, தினை மாவில் விருப்பம் உள்ளவனே, தேவர்களின் தலைவனான அழகனே, திகழ்கின்ற வேடத்துடன் காளியுடன் நடனம் ஆடின உலகத்துக்கு ஈசனும் சங்க மேசனும் ஆகிய நடேசப் பெருமானுடைய தலமாகிய திருவாலங்காட்டில்* விளங்கி நிற்கும் பெருமாளே.
* திருவாலங்காடு சென்னைக்கு மேற்கே 37 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 673 - திருவாலங்காடு - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தனதானந், நிறைந்த, மீது, உள்ள, கொண்ட, பொருந்திய, மேல், தாமரை, மேவிய, வீணிகள், பெருமாளே, மனத்தில், மிகுந்த, தருகின்ற