பாடல் 662 - வெள்ளிகரம் - திருப்புகழ்

ராகம் -
குமுதக்ரியா; தாளம் - ஆதி
தய்யதன தான தய்யதன தான தய்யதன தான ...... தனதான |
இல்லையென நாணி யுள்ளதின் மறாம லெள்ளினள வேனும் ...... பகிராரை எவ்வமென நாடி யுய்வகையி லேனை யெவ்வகையு நாமங் ...... கவியாகச் சொல்லவறி யேனை யெல்லைதெரி யாத தொல்லைமுத லேதென் ...... றுணரேனைத் தொய்யுமுடல் பேணு பொய்யனைவி டாது துய்யகழ லாளுந் ...... திறமேதோ வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ மையவரை பாகம் ...... படமோது மையுலவு சோலை செய்யகுளிர் சாரல் வள்ளிமலை வாழுங் ...... கொடிகோவே வெல்லுமயி லேறு வல்லகும ரேச வெள்ளிலுட னீபம் ...... புனைவோனே வெள்ளிமணி மாட மல்குதிரு வீதி வெள்ளிநகர் மேவும் ...... பெருமாளே. |
இல்லை என்று கூற வெட்கப்பட்டு, உள்ள பொருளின் அளவுக்கு மறுக்காமல், ஓர் எள்ளின் அளவாவது பகிர்ந்து கொடுக்காதவர்களை, வெறுக்கத்தக்கவர்கள் என்று ஆராய்ந்தறிந்து பிழைக்கும் வழி இல்லாத என்னை, எந்த வகையிலாவது உன் திருநாமங்களைக் கவிதையாக அமைத்துச் சொல்லும் அறிவில்லாத என்னை, முடிவெல்லை காண முடியாத பழைய மூலப்பொருள் இன்னது என்று உணரும் அறிவில்லாத என்னை, இளைத்துத் துவளும் உடம்பைப் போற்றும் பொய்யனாகிய என்னை, புறக்கணித்து விட்டுவிடாமல் பரிசுத்தமான உன் திருவடிகளால் ஆண்டருளும் வழி ஏதேனும் உண்டோ, யான் அறியேன். வலிமை பொருந்திய அசுரர்கள் மாளவும், நல்ல தேவர்கள் வாழவும், குற்றமுள்ள கிரெளஞ்சகிரி கூறுபட்டழிய மோதியவனே, இருண்ட சோலைகள், செவ்விய குளிர்ந்த மலைகள் உடைய வள்ளிமலையில் வாழும் குறக்குலக் கொடியாகிய வள்ளியின் மணாளனே, வெல்லும் திறல் படைத்த மயில் மீது ஏறவல்ல குமரேசா, விளாத் தளிருடன் கடப்பமலரை அணிபவனே, வெண்ணிற அழகிய மாடங்கள் நிறைந்த செல்வச் செழிப்புள்ள வீதிகளை உடைய வெள்ளிகரம் என்ற வெள்ளிநகரில் அமர்ந்த பெருமாளே.
* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கில் 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்தினின்று மேற்கே 10 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 662 - வெள்ளிகரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்னை, தய்யதன, வெள்ளிகரம், மைலில், உடைய, அறிவில்லாத, உள்ள, பெருமாளே