பாடல் 656 - வெள்ளிகரம் - திருப்புகழ்

ராகம் - சாமா;
தாளம் - அங்கதாளம் - 15
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தனதன தனன தனதன தனன தய்ய தனத்த தந்த ...... தனதானா |
அடலரி மகவு விதிவழி யொழுகு மைவ ருமொய்க்கு ரம்பை ...... யுடனாளும் அலைகட லுலகி லலம்வரு கலக வைவர் தமக்கு டைந்து ...... தடுமாறி இடர்படு மடிமை யுளமுரை யுடலொ டெல்லை விடப்ர பஞ்ச ...... மயல்தீர எனதற நினது கழல்பெற மவுன வெல்லை குறிப்ப தொன்று ...... புகல்வாயே வடமணி முலையு மழகிய முகமும் வள்ளை யெனத்த யங்கு ...... மிருகாதும் மரகத வடிவு மடலிடை யெழுதி வள்ளி புனத்தில் நின்ற ...... மயில்வீரா விடதர திகுணர் சசிதரர் நிமலர் வெள்ளி மலைச்ச யம்பு ...... குருநாதா விகசித கமல பரிபுர முளரி வெள்ளி கரத்த மர்ந்த ...... பெருமாளே. |
வலிமை வாய்ந்த திருமாலின் பிள்ளையாகிய பிரமன் எழுதிவிட்ட விதியின் வழியின்படி செல்லுகின்ற சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய ஐந்து உணர்ச்சிகளும் நெருங்கி (வேலை செய்யும்) குடிலாகிய உடலுடன் நாள்தோறும் அலைகளை உடைய கடல் சூழ்ந்த உலகத்தில் துன்பம் உண்டாக்கி கலகம் செய்யும் ஐந்து (மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய) இந்திரியங்களால் மனம் உடைந்து தடுமாற்றம் அடைந்து, வருத்தங்களுக்கு ஆளான அடிமையாகிய நான் மனம், வாக்கு, காயம் இவை மூன்றும் உலகத்தில் ஈடுபடுதலில் இருந்து விடுபடவும், மயக்கம் தீரவும், எனது எனப்படும் பாசம் (மமகாரம்) நீங்கவும், உனது திருவடியைப் பெறவும், மோன வரம்பைக் குறிப்பதாகிய ஓர் உபதேசத்தை அருள்புரிவாயாக. (வள்ளியின்) மணி வடம் அணிந்த மார்பும், அழகான முகமும், வள்ளைக் கொடி போல விளங்கும் இரண்டு காதுகளும், மரகத நிறமும், படத்தில் எழுதி வள்ளியினுடைய தினைப்புனத்தில் நின்ற மயில் வீரனே, விஷத்தைக் கண்டத்தில் தரித்தவர், மேலான குணத்தை உடையவர், சந்திரனைச் சடையில் தரித்தவர், பரிசுத்தமானவர், வெள்ளி மலையாகிய கயிலையில் வீற்றிருக்கும் சுயம்பு மூர்த்தியான சிவபெருமானுக்கு குருநாதனே, மலர்ந்த தாமரை போன்ற, சிலம்பணிந்த தாமரை மலர் போன்ற, திருவடியை உடையவனே, வெள்ளிகரம்* என்னும் தலத்தில் அமர்ந்த பெருமாளே.
* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கில் 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்தினின்று மேற்கே 10 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 656 - வெள்ளிகரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தகிட, வெள்ளி, தகதிமி, உலகத்தில், மனம், தரித்தவர், மைலில், தாமரை, செய்யும், பெருமாளே, முகமும், தனதன, மரகத, நின்ற, ஆகிய, ஐந்து