பாடல் 655 - வயிரவிவனம் - திருப்புகழ்

ராகம் - ஸரஸ்வதி ;
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தனத்த தான தனதன தனத்த தான தனதன தனத்த தான ...... தனதான |
அருவரை யெடுத்த வீர னெரிபட விரற்க ளூணு மரனிட மிருக்கு மாயி ...... யருள்வோனே அலைகட லடைத்த ராமன் மிகமன மகிழ்ச்சி கூரு மணிமயில் நடத்து மாசை ...... மருகோனே பருதியி னொளிக்கண் வீறும் அறுமுக நிரைத்த தோள்ப னிருகர மிகுத்த பார ...... முருகாநின் பதமல ருளத்தி னாளு நினைவுறு கருத்தர் தாள்கள் பணியவு மெனக்கு ஞானம் ...... அருள்வாயே சுருதிக ளுரைத்த வேத னுரைமொழி தனக் குளாதி சொலுவென வுரைத்த ஞான ...... குருநாதா சுரர்பதி தழைத்து வாழ அமர்சிறை யனைத்து மீள துணிபட அரக்கர் மாள ...... விடும்வேலா மருமலர் மணக்கும் வாச நிறைதரு தருக்கள் சூழும் வயல்புடை கிடக்கு நீல ...... மலர்வாவி வளமுறு தடத்தி னோடு சரஸ்வதி நதிக்கண் வீறு வயிரவி வனத்தில் மேவு ...... பெருமாளே. |
அரியதான கயிலை மலையை அசைத்து எடுக்க முயன்ற வீரனான ராவணன் நெரிபடும்படி தமது விரல்களை ஊன்றிய சிவபிரானின் இடது பாகத்தில் உள்ள அன்னை பார்வதி பெற்றருளிய குழந்தையே, அலை வீசும் கடலை அணையிட்டு அடைத்த ஸ்ரீராமன் மிக்க மனமகிழ்ச்சி கொள்ளும், அழகிய மயிலை வாகனமாகக் கொண்டு எட்டுத் திக்கிலும் நடத்திச் செல்லும், மருமகனே, சூரியனது ஒளி தம்மிடத்தே விளங்கும் முகங்கள் ஆறும், வரிசையான தோள்களும், பன்னிரண்டு கரங்களும் உடையவனே, மிகுந்த பெருமை வாய்ந்த முருகனே, உன் திருவடி மலரை உள்ளத்தில் தினமும் நினைத்துத் தொழுதிருக்கும் கருத்தை உடைய அடியார்களின் தாள்களைப் பணிந்திடவும் எனக்கு ஞானத்தைத் தந்தருள்வாயாக. வேதங்களை ஓதும் பிரமன் சொன்ன மொழிகளுள் முதலாவதான ஓம் என்ற பிரணவத்தின் பொருளை எனக்கு நீ சொல்லுக என தந்தை சிவனார் கேட்க அவ்வாறே பொருள் உரைத்த ஞான குரு நாதனே, தேவர்களுக்குத் தலைவனான இந்திரன் செழிப்புடன் வாழவும், இருந்த சிறையினின்றும் தேவர்கள் யாவரும் மீளவும், வெட்டுண்டு அசுரர்கள் இறந்தொழியவும், வேலாயுதத்தைச் செலுத்திய வீரனே, வாசனை மலர்கள் மணம் வீசும் நறுமணம் நிறைந்துள்ள மரங்கள் சூழ்ந்த வயல்கள் பக்கத்தில் உள்ள நீலோத்பல மலர்கள் மலர்ந்துள்ள நீர்நிலைகளின் செழிப்பு வாய்ந்த கரைகளோடு ஸரஸ்வதி என்னும் ஆற்றினிடத்தே விளங்குகின்ற வயிரவிவனம்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* இது பஞ்சாப் மாநிலத்தில் ஸரஸ்வதி நதிக்கரையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 655 - வயிரவிவனம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - ஸரஸ்வதி, தனதன, தனத்த, எனக்கு, என்னும், மலர்கள், வாய்ந்த, உள்ள, தகதிமி, பெருமாளே, வீசும்