பாடல் 651 - காசி - திருப்புகழ்

ராகம் - சந்த்ர
கெளன்ஸ்; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகிட-1 1/2, தகதிமி-2
தகிட-1 1/2, தகதிமி-2
தான தத்தன தான தானன தான தத்தன தான தானன தான தத்தன தான தானன ...... தனதான |
தார ணிக்கதி பாவி யாய்வெகு சூது மெத்திய மூட னாய்மன சாத னைக்கள வாணி யாயுறு ...... மதிமோக தாப மிக்குள வீண னாய்பொரு வேல்வி ழிச்சிய ராகு மாதர்கள் தாமு யச்செயு மேது தேடிய ...... நினைவாகிப் பூர ணச்சிவ ஞான காவிய மோது தற்புணர் வான நேயர்கள் பூசு மெய்த்திரு நீறி டாஇரு ...... வினையேனைப் பூசி மெய்ப்பத மான சேவடி காண வைத்தருள் ஞான மாகிய போத கத்தினை யேயு மாறருள் ...... புரிவாயே வார ணத்தினை யேக ராவுமு னேவ ளைத்திடு போதுமேவிய மாய வற்கித மாக வீறிய ...... மருகோனே வாழு முப்புர வீற தானது நீறெ ழப்புகை யாக வேசெய்த மாம திப்பிறை வேணி யாரருள் ...... புதல்வோனே கார ணக்குறி யான நீதிய ரான வர்க்குமு னாக வேநெறி காவி யச்சிவ நூலை யோதிய ...... கதிர்வேலா கான கக்குற மாதை மேவிய ஞான சொற்கும ராப ராபர காசி யிற்பிர தாப மாயுறை ...... பெருமாளே. |
இந்த உலகிலேயே அதிக பாவியாய், மிக்க சூது நிறைந்த மூடனாய், மனத்திலே அழுந்திய திருட்டுப் புத்தியை உடையவனாய், மிகுந்த காம மயக்கத்தில் தாகம் மிக்க வீணனாய், போருக்கு உற்ற வேல் போன்ற கண்களை உடைய பொது மகளிர் தாம் பிழைப்பதற்கு உதவும் செல்வத்தை தேடித் தரும் நினைவையே கொண்டு, பரிபூரணமான சிவஞான நூல்களை ஓதுதலில் விருப்பம் கொண்டுள்ள அன்பர்கள் பூசுகின்ற மகிமை வாய்ந்த திருநீற்றை இட்டுக் கொள்ளாத இருவினையாளனாகிய (புண்ணிய பாப வினையாளனாகிய) அடியேனை திருநீற்றைப் பூசவைத்து, உண்மைப்பதவியாகிய உன் திருவடிகளை தரிசனம் செய்வித்து திருவருள்மயமான ஞானம் என்ற தூய அறிவும் எனக்குக் கிட்டுமாறு அருள் புரிவாயாக. கஜேந்திரன் என்ற யானையை முதலை முன்னொருநாள் வளைத்து இழுத்த போது அங்கு வந்து உதவிய மாயவன் திருமாலுக்கு மனம் மகிழச்செய்யும்படி விளங்கும் மருமகனே, பெருவாழ்வு வாழ்ந்த திரிபுரங்களின் பொலிவெல்லாம் சாம்பலாகப் போகுமாறு புகை எழச் செய்த சிறந்த திங்கட்பிறை அணிந்த சடைப் பெருமான்சிவபிரான் அருளிய புதல்வனே, யாவற்றிற்கும் மூல காரணனாகவும், இலக்காகவும் உள்ள நீதிப் பெருமான் சிவபிரானது சந்நிதிகளில் அறநெறியை ஓதும் பிரபந்தங்களான சிவநூலாகிய தேவாரத்தை, திருஞானசம்பந்தராக அவதரித்து, ஓதின ஒளி வேலனே, காட்டில் குறப்பெண் வள்ளியை விரும்பி அடைந்த ஞான மொழி பேசும் குமரனே, யாவர்க்கும் மேலானவனே, காசித்தலத்தில்* பிரபலமாக வீற்றிருக்கும் பெருமாளே.
* காசி என்ற 'வாரணாசி' கங்கைக் கரையில் உத்தரப் பிரதேசத்தில் உள்ளது.ஏழு முக்தித் தலங்களுள் காசியும் ஒன்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 651 - காசி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தன, தானன, மிக்க, பெருமாளே, சூது, காசி