பாடல் 650 - திருக்கோணமலை - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனத்த தானன தனத்தான தானன தனத்த தானன தனத்தான தானன தனத்த தானன தனத்தான தானன ...... தனதான |
விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை தரித்த வாடையு மணிப்பூணு மாகவெ மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெ ...... மயலூறி மிகுத்த காமிய னெனப்பாரு ளோரெதிர் நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுல வெறுப்ப தாகியெ யுழைத்தேவி டாய்படு ...... கொடியேனைக் கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு ...... மொருவாழ்வே கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் ...... தரவேணும் மலைக்கு நாயக சிவக்காமி நாயகர் திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ் ...... தருவேளே வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர் அகத்ய மாமுநி யிடைக்காடர் கீரனும் வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு ...... முருகோனே நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர் திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் ...... வருவோனே நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி நினைத்த காரிய மநுக்கூல மேபுரி ...... பெருமாளே. |
தக்க விலை பெறும் பொருட்டு, உடலில் அழகிய வடங்களும், இடுப்பில் ஒட்டியாணமும் அணிந்து, ஆடையுடனும் ரத்தின ஆபரணங்களுடனும் மினுக்குகின்ற விலைமாதர்களிடம் காம மயக்கில் மூழ்கி, மோகத்தில் அழுந்தி, பெரிய காம லோலன் என்று உலகில் உள்ளவர்கள் என் எதிரே சிரிப்பதற்காகவே இந்த உடலை எடுத்து, துன்பமும் வெறுப்பும் கொண்டு உழைத்து களைப்புக் கொள்ளும் கொடியவனாகிய என்னை, கலக்க நெஞ்சினனாய், (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலக் கூடாகிய இந்த உடலில் நிரம்ப நோய்களுக்குள்ளாகி தவிக்க வைக்காமல், உன்னை பாட்டில் அமைத்து ஈடேறச் செய்யும் ஒப்பற்ற அருள் செல்வமாகிய வாழ்வைத் தந்து, நற்கதியை தருகின்ற நாதன் நீ, உன்னைத் தேடி உனது திருப்புகழை உரைக்கும் நாய் போன்ற சிறியேனை உன் அருள் பார்வையால் உன் திருவடியைக் கூடுவதற்காகவே சிறந்ததான தாய் அன்பை எனக்கு அருள் புரிய வேண்டும். எல்ல மலைகளுக்கும் தலைவனே, சிவகாமி அம்மையின் தலைவராகிய சிவபெருமானின் அழகிய குமாரனே, ஆறு திரு முகங்களை உடைய குருமூர்த்தியே, வடிவழகுள்ள மாதாகிய குறப் பெண் வள்ளி மகிழும் வேளே, வசிஷ்டர், காசியப்பர், தவத்தில் சிறந்த யோகிகள், அகத்திய மாமுனிவர், இடைக்காடர், நக்கீரர் ஆகியோர் அமைத்த பாடல்களில் பொருள் உருவாய் வரும் முருகோனே, அழியாது நிலைத்து நிற்கும் நான்கு வேதங்களைப் பயின்ற சிறந்த அந்தணர்கள் திருக்கோணமலை* என்னும் தலத்தில் விளங்கும் கோபுர நிலையின் வாசலில் கிளிப்பாடு பூதி என்னும் இடத்தில் எழுந்தருளி வருபவனே, நிகழ்கின்ற ஏழு பிறப்பு என்னும் கடல் வற்றிப் போய் அழிய, திருக்கரத்தில் எடுத்த வேலைக் கொண்டு (பகைவர்களைப்) பொடிப்பொடியாகப் போகும்படிச் செலுத்தி, நினைத்த காரியங்களெல்லாம் நன்மையாகக் கைகூடும்படி அருளும் பெருமாளே.
* திருக்கோணமலை இலங்கையில் உள்ளது. தட்சிண கயிலாயங்கள் மூன்று - திருக்காளத்தி, திருச்சிராப்பள்ளி, திருக்கோணமலை.கிளிப்பாடு பூதி என்பது திருக்கோணமலைக் கோயில் கோபுர நிலையில் உள்ள ஓரிடத்துக்குப் பெயர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 650 - திருக்கோணமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, கிளிப்பாடு, தனத்த, அருள், கோபுர, என்னும், தனத்தான, கொண்டு, திருக்கோணமலை, பூதி, அழகிய, சிறந்த, நினைத்த, கலக்க, மாகவெ, யாகவெ, முருகோனே, பெருமாளே, உடலில்