பாடல் 642 - கதிர்காமம் - திருப்புகழ்

ராகம் - காபி;
தாளம் - ஆதி - கண்டநடை - 20
- எடுப்பு - அதீதம்
- எடுப்பு - அதீதம்
தனத்தா தனத்தா தனத்தா தனத்தா தனத்தா தனத்தா ...... தனதான |
சரத்தே யுதித்தா யுரத்தே குதித்தே சமர்த்தா யெதிர்த்தே ...... வருசூரைச் சரிப்போன மட்டே விடுத்தா யடுத்தாய் தகர்த்தா யுடற்றா ...... னிருகூறாச் சிரத்தோ டுரத்தோ டறுத்தே குவித்தாய் செகுத்தாய் பலத்தார் ...... விருதாகச் சிறைச்சேவல் பெற்றாய் வலக்கார முற்றாய் திருத்தா மரைத்தா ...... ளருள்வாயே புரத்தார் வரத்தார் சரச்சே கரத்தார் பொரத்தா னெதிர்த்தே ...... வருபோது பொறுத்தார் பரித்தார் சிரித்தா ரெரித்தார் பொரித்தார் நுதற்பார் ...... வையிலேபின் கரித்தோ லுரித்தார் விரித்தார் தரித்தார் கருத்தார் மருத்தூர் ...... மதனாரைக் கரிக்கோல மிட்டார் கணுக்கான முத்தே கதிர்க்காம முற்றார் ...... முருகோனே. |
நாணல் காட்டிலே பிறந்தவனே (சரவணபவனே), வலிமையோடு குதித்து சாமர்த்தியமாய் எதிர்த்துவந்த சூரனை ஒழுங்காக நடந்துகொண்ட வரைக்கும் விட்டுவைத்தாய், சரியில்லாத போது அடுத்து வந்து அவனை நெருக்கினாய், உடலை இரு கூறுகள் ஆகுமாறு பிளந்தாய், தலையையும் மார்பையும் அறுத்துக் குவித்தாய், கொன்றெறிந்தாய், பல மாலைகளை விருதுகளாகவும், சிறகுடைய சேவல் ஒன்றையும் பரிசாகப் பெற்றாய், வெற்றியை அடைந்தாய், உனது அழகிய தாமரைப் பாதங்களைத் தந்தருள்க. திரிபுரத்தில் இருந்த வரம்பெற்ற மூன்று அசுரர்களும் அம்புக் கூட்டங்கள் கொண்டவர்களாக சண்டை செய்யவே எதிர்த்து வரும்போது முதலில் பொறுமையோடு இருந்தார், பிறகு போர்க்கோலம் தரித்தார், பின்பு சிரித்தார், திரிபுரத்தை எரித்தார், பொரிபடச் செய்தார் தனது நெற்றிக்கண் பார்வையாலேயே. பின்பு (கஜமுகாசுரனான) யானையின் தோலை உரித்தார், அதனை விரித்து ஆடையாக அணிந்து கொண்டார். (தேவர்கள் கேட்டுக்கொண்டபடி தம்மீது அம்பு எய்யும்) கருத்தோடு தென்றலைத் தேராகக்கொண்டு ஊர்ந்துவந்த மன்மதனை சாம்பல் அலங்காரமாக ஆக்கிய பரமசிவனாரின் கண்மணியான முத்தையனே, கதிர்காமம் என்ற தலத்தில் சென்று விளங்கிய முருகனே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 642 - கதிர்காமம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தா, பின்பு, தரித்தார், பெற்றாய், குவித்தாய்