பாடல் 641 - கதிர்காமம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனதனன தானத்த தனதனன தானத்த தனதனன தானத்த ...... தனதான தானனா |
சமரமுக வேலொத்த விழிபுரள வாரிட்ட தனமசைய வீதிக்குள் ...... மயில்போலு லாவியே சரியைக்ரியை யோகத்தின் வழிவருக்ரு பாசுத்தர் தமையுணர ராகத்தின் ...... வசமாக மேவியே உமதடிய னாருக்கு மனுமரண மாயைக்கு முரியவர்ம காதத்தை ...... யெனுமாய மாதரார் ஒளிரமளி பீடத்தி லமடுபடு வேனுக்கு முனதருள்க்ரு பாசித்த ...... மருள்கூர வேணுமே இமகிரிகு மாரத்தி யநுபவைப ராசத்தி யெழுதரிய காயத்ரி ...... யுமையாள்கு மாரனே எயினர்மட மானுக்கு மடலெழுதி மோகித்து இதணருகு சேவிக்கு ...... முருகாவி சாகனே அமரர்சிறை மீள்விக்க அமர்செய்துப்ர தாபிக்கு மதிகவித சாமர்த்ய ...... கவிராஜ ராஜனே அழுதுலகை வாழ்வித்த கவுணியகு லாதித்த அரியகதிர் காமத்தி ...... லுரியாபி ராமனே. |
போர்முகத்துக்கு என்ற கூர்மை நிறைந்த வேல் போன்ற கண்கள் புரள, கச்சு அணிந்த மார்பகங்கள் அசைய, தெருவில் மயில் உலவுவது போல, சரியை, கிரியை, யோகம், (ஞானம்) என்னும் நான்கு வழிகளில்* நிற்கின்ற, அருளும் பரிசுத்தமும் வாய்ந்த பெரியோர்களும் தம்மை மோகிக்கும்படியாக ஆசை காட்டும் வழிகளில் பொருந்தி, உமது திருவடியை நினையாதவருக்கும், மரணத்தோடு கூடிய மாயையின் வசப்பட்டவருக்கும் உரியவராய், சிறந்த கிளிகள் எனப்படும் மாயைகளில் வல்ல விலைமாதர்களுடைய ஒளி மிகுந்த படுக்கையிடத்தே சிக்கிக் கொண்ட எனக்கும் உமது திருவருள் பிரசாதத்தை அருள் கூர்ந்து அளிக்க வேண்டும். இமய மலை அரசனுடைய மகள், எப்போதும் இன்ப அனுபவத்தைத் தருபவள், பராசக்தி, எழுதற்கரிய காயத்திரி மந்திரத்தின் உருவினள் (ஆகிய) உமாதேவியின் மகனே, வேடர்களின் அழகிய மான் போன்ற வள்ளிக்காக மடல் எழுதி* ஆசைப்பட்டு, அவள் இருந்த பரண் அருகே சேவித்து நின்ற முருகனே, விசாகனே, தேவர்களைச் சிறையினின்றும் மீட்கும் பொருட்டுப் போரிட்டு, கீர்த்தியுற்ற, மிக மேலான திறமை வாய்ந்த ராஜகவிகளுக்குள் சக்கரவர்த்தியே, அழுது (திருஞான சம்பந்தராகத் தோன்றி பார்வதி தேவியின் திருமுலைப்பால் உண்டு) தேவாரப் பாடல்களால் உலகை வாழ்வித்த கவுணிய குலத்தைச் சார்ந்த ஞான சூரியனே, அருமை வாய்ந்த கதிர்காமத்துக்கு உரிய அழகனே.
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம்.
** மடல் ஏறுதல்: காமத்தால் வாடும் தலைவன் பனங்கருக்கால் குதிரை முதலிய வடிவங்கள் செய்து அவற்றின் மேலே ஏறி ஊரைச் சுற்றி, தன் காதலை ஊரிலுள்ள பிறருக்குத் தெரிவிப்பான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 641 - கதிர்காமம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வாய்ந்த, மார்க்கம், தனதனன, ஞானம், தானத்த, இடுதல், தொழில், மடல், உமது, யோகம், சரியை, வாழ்வித்த, கிரியை