பாடல் 632 - கழுகுமலை - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தனன தனதனா தனத்த தானன தனன தனதனா தனத்த தானன தனன தனதனா தனத்த தானன ...... தனதான |
குதலை மொழியினார் நிதிக்கொள் வாரணி முலையை விலைசெய்வார் தமக்கு மாமயல் கொடிது கொடிததால் வருத்த மாயுறு ...... துயராலே மதலை மறுகிவா லிபத்தி லேவெகு பதகர் கொடியவா ளிடத்தி லேமிக வறுமை புகல்வதே யெனக்கு மோஇனி ...... முடியாதே முதல வரிவிலோ டெதிர்த்த சூருடல் மடிய அயிலையே விடுத்த வாகரு முகிலை யனையதா நிறத்த மால்திரு ...... மருகோனே கதலி கமுகுசூழ் வயற்கு ளேயளி யிசையை முரலமா வறத்தில் மீறிய கழுகு மலைமகா நகர்க்குள் மேவிய ...... பெருமாளே. |
மழலைச் சொல் போலப் பேசுபவர்கள், பிறரது பொருளைப் பறிப்பவர்கள், அழகிய மார்பகத்தை விலைக்கு விற்பவர்கள் (ஆகிய விலைமாதர்கள்) மீது உள்ள பெரிய மயக்கம் மிகவும் பொல்லாதது. அந்த மயக்கத்தால் ஏற்படும் வருத்தம் தரும் துன்பத்தால் சிறு பிள்ளையாகிய நான் கலக்கம் உற்று, இளமையில் மிக பாபிகளாகிய கொடியவர்களிடம் சென்று, என்னுடைய தரித்திர நிலையைக் கூறி நிற்பது என்னால் இனி முடியாது. முதல்வனே, கட்டப்பட்ட வில்லோடு எதிர்த்த சூரனுடைய உடல் அழிய வேலைச் செலுத்தியவனே. கரிய மேகத்தை ஒத்த நிறம் உடைய திருமாலின் திரு மருகனே, வாழை, கமுகு இவைகள் சூழ்ந்துள்ள வயலில் வண்டுகள் இசைகளை எழுப்ப, பெரிய தருமச் செயல்களில் மேம்பட்டு விளங்கும் கழுகு மலை* என்ற சிறந்த நகரில் விரும்பி எழுந்தருளி இருக்கும் பெருமாளே.
* கழுகுமலை கோவில்பட்டிக்கு அருகில் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழியில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 632 - கழுகுமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனா, தானன, தனத்த, பெரிய, கழுகு, பெருமாளே