பாடல் 631 - பொதியமலை - திருப்புகழ்

ராகம் - ...; தாளம்
-
தனத்த தானன தனத்த தானன தனத்த தானன தனத்த தானன தனத்த தானன தனத்த தானன ...... தந்ததான |
வெடித்த வார்குழல் விரித்து மேல்விழி விழித்து மேகலை பதித்து வார்தொடு மிகுத்த மாமுலை யசைத்து நூலின்ம ...... ருங்கினாடை மினுக்கி யோலைகள் பிலுக்கி யேவளை துலக்கி யேவிள நகைத்து கீழ்விழி மிரட்டி யாரையு மழைத்து மால்கொடு ...... தந்தவாய்நீர் குடித்து நாயென முடக்கு மேல்பிணி யடுத்து பாதிகள் படுத்த தாய்தமர் குலத்தர் யாவரு நகைக்க வேயுடல் ...... மங்குவேனைக் குறித்து நீயரு கழைத்து மாதவர் கணத்தின் மேவென அளித்து வேல்மயில் கொடுத்து வேதமு மொருத்த னாமென ...... சிந்தைகூராய் உடுட்டு டூடுடு டுடுட்டொ டோவென திகுத்த தீதிகு திகுர்த்த தாவென உடுக்கை பேரிகை தவிற்கு ழாமுமி ...... ரங்குபோரில் உலுத்த நீசர்கள் பதைப்ப மாகரி துடிப்ப நீள்கட லெரித்து சூர்மலை யுடைத்து நீதிகள் பரப்பி யேயவ ...... ரும்பராரை அடைத்த மாசிறை விடுத்து வானுல களிக்கு மாயிர திருக்க ணானர சளித்து நாளுமெ னுளத்தி லேமகி ...... ழுங்குமாரா அளித்த தாதையு மிகுத்த மாமனும் அனைத்து ளோர்களு மதிக்க வேமகிழ் அகத்ய மாமுநி பொருப்பின் மேவிய ...... தம்பிரானே. |
நறுமணம் கமழும் நீண்ட கூந்தலை விரித்து, வேல் போன்ற கண்களை விழித்து, இடுப்பிலே ஒட்டியாணத்தை அணிந்து, கச்சு அணிந்த மிகப் பெரிய மார்பகத்தை அசைத்து, நூல் போல் மெல்லிய இடையில் ஆடையை மினுக்கியும், காதோலைகளைப் போலி ஒளியாகக் காட்டியும், கை வளைகளை ஆட்டி ஒலிக்கச் செய்தும், வெளிப்படையாய்ச் சிரித்தும், கீழ்க் கண்ணால் மிரட்டி யாரையும் வா என அழைத்தும், மோகத்துடன் கொடுத்த வாயிதழ் ஊறலைப் பருகியும், (இவ்வேசைகள் எனக்கு) நாய் போல முடக்கத்தை விளைவிக்கும் நோய்கள் தந்துவிட, வேதனைகள் உண்டாக, தாயும், சுற்றத்தார்களும், குலத்தைச் சேர்ந்தவர் எல்லோரும் பரிகசித்துச் சிரிக்க உடல் வாட்டம் உறுகின்ற என்னை, கவனித்து நீ உன் அருகில் வரச் செய்து பெரிய தவசிகள் கூட்டத்தில் சேர்வாயாக என்று எனக்கு அருள் புரிந்து, வேல், மயில் ஆகிய அடையாளங்களைப் பொறித்து, வேதங்களும் என்னை இவனொரு ஒப்பற்றவன் என்று கூறும்படி மனம் கூர்ந்து அருள்வாயாக. உடுட்டு டூடுடு டுடுட்டொ டோ என்றும், திகுத்த தீதிகு திகுர்த்த தா என்றும் இவ்வாறான ஒலிகளை உடுக்கை, பேரிகை, தவில் இவைகளின் கூட்டங்கள் ஒலிக்கும் போர்க்களத்தில், உலோபிகளும், கீழோரும் ஆகிய அசுரர்கள் பதைபதைக்க, பெரிய யானைகள் துடிக்க, நீண்ட கடலை எரித்து, சூரனையும், கிரவுஞ்ச மலையையும் உடைத்துப் பொடியாக்கி, நீதியை நிலை நிறுத்தி எங்கும் பரப்பி, அந்த அசுரர்கள் தேவர்களை அடைத்து வைத்த பெரிய சிறையினின்றும் விடுவித்து, (தேவர்களுக்குத்) தேவ லோகத்தை அளித்தவனே, ஆயிரம் அழகிய கண்களை உடைய இந்திரனுக்கு அரசாட்சியை அளித்து, நாள் தோறும் என் உள்ளத்தில் இருந்து மகிழும் குமரனே, ஈன்ற தந்தையாகிய சிவபெருமானும், பேர்பெற்ற மாமனாகிய திருமாலும் மற்றும் எல்லோரும் மதிக்கும்படி, மகிழ்ச்சியுடன் அகத்திய முனிவரின் மலையாகிய பொதிய மலையில்* வீற்றிருக்கும் தம்பிரானே.
* பொதிய மலை திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசத்துக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 631 - பொதியமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தனத்த, பெரிய, எனக்கு, கண்களை, நீண்ட, எல்லோரும், வேல், என்னை, அசுரர்கள், பொதிய, என்றும், ஆகிய, அருகில், தம்பிரானே, பேரிகை, மிரட்டி, அளித்து, மிகுத்த, விழித்து, விரித்து, உடுட்டு, டூடுடு, திகுர்த்த, உடுக்கை, தீதிகு, திகுத்த, டுடுட்டொ, பரப்பி