பாடல் 625 - குன்றக்குடி - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனதனன தந்த தானன தனதனன தந்த தானன தனதனன தந்த தானன ...... தனதான |
கடினதட கும்ப நேரென வளருமிரு கொங்கை மேல்விழு கலவிதரு கின்ற மாதரொ ...... டுறவாடிக் கனவளக பந்தி யாகிய நிழல்தனிலி ருந்து தேனுமிழ் கனியிதழை மென்று தாடனை ...... செயலாலே துடியிடைநு டங்க வாள்விழி குழைபொரநி ரம்ப மூடிய துகில்நெகிழ வண்டு கோகில ...... மயில்காடை தொனியெழவி ழைந்து கூரிய கொடுநகமி சைந்து தோள்மிசை துயிலவச இன்ப மேவுத ...... லொழிவேனோ இடிமுரச றைந்து பூசல்செய் அசுரர்கள்மு றிந்து தூளெழ எழுகடல்ப யந்து கோவென ...... அதிகோப எமபடரு மென்செய் வோமென நடுநடுந டுங்க வேல்விடு இரணமுக சண்ட மாருத ...... மயிலோனே வடிவுடைய அம்பி காபதி கணபதிசி றந்து வாழ்தட வயலிநகர் குன்ற மாநக ...... ருறைவோனே வகைவகைபு கழ்ந்து வாசவன் அரிபிரமர் சந்த்ர சூரியர் வழிபடுதல் கண்டு வாழ்வருள் ...... பெருமாளே. |
வலிமையுள்ளதும், அகலமானதும், குடத்துக்கு ஒப்பானதுமான வளர்கின்ற இரண்டு மார்பகங்களின் மேலே விழுகின்ற புணர்ச்சி தருகின்ற விலைமாதருடன் உறவு பூண்டு, கனத்த கூந்தல் கட்டாகிய நிழலில் இருந்து, தேனின் இனிப்பைத் தருகின்ற கொவ்வைக் கனி போன்ற வாயிதழை மென்று, காம சாஸ்திரப்படி தட்டுகை என்னும் செயல் செய்து, உடுக்கை போன்ற இடை துவள, வாள் போன்ற கண்கள் குண்டலங்கள் அளவும் சென்று போர் புரிய, முழுதும் மூடியிருக்கும் புடவை தளர்ந்து விழ, வண்டு, குயில், மயில், காடை இவைகளின் புட்குரல் ஒலிக்க, விரும்பி, கூர்மையான வளைந்த நகக் குறிகளை வைத்து, தோளின் மேல் தூங்கும் மயக்க இன்பத்தை நாடுதலை நான் தவிர்க்க மாட்டேனோ? இடி போல் முழங்கும் பேரிகையை ஒலித்துப் போர் செய்யும் அசுரர்கள் தோல்வி உற்று முறிபட்டுப் பொடியாக, ஏழு கடல்களும் அஞ்சி கோ என்று ஒலிக்க, மிகவும் கோபமுள்ள யம தூதர்களும் என்ன செய்வோம் என்று மிக நடு நடுங்க, வேலைச் செலுத்தி, போர்க்களத்தில் பெருங்காற்று போலச் சிறகை வீசிப் பறக்கும் மயில் மீது அமர்ந்த வீரனே, அழகிய அக்கினீசுரர் என்னும் சிவபெருமானும், பொய்யாக் கணபதியும்* சிறந்து விளங்கும் இடமாகிய வயலூரிலும்*, குன்றக்குடியிலும்** வாழ்பவனே, வித விதமாக உன்னைப் புகழ்ந்து இந்திரன், திருமால், பிரமன் ஆகியோரும் சந்திரனும் சூரியனும் வழிபடுவதைப் பார்த்து அவர்களுக்கு வாழ்வு அருளிய பெருமாளே.
* வயலூர் சிவபெருமானுக்கு 'அக்கினீசுர்' என்று பெயர். கணபதிக்குப் 'பொய்யாக் கணபதி' என்று பெயர்.
** குன்றக்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடிக்கு மேற்கே 7 மைலில் உள்ளது. இதற்கு 'மயூரமலை' என்ற பெயரும் உண்டு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 625 - குன்றக்குடி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, தானன, தந்த, மயில், ஒலிக்க, பெயர், போர், பொய்யாக், தருகின்ற, மென்று, வண்டு, பெருமாளே, என்னும்