பாடல் 607 - கொல்லிமலை - திருப்புகழ்

ராகம் -
பிருந்தாவன சாரங்கா; தாளம் - கண்டசாபு - 2 1/2
தய்யதன தானந்த தய்யதன தானந்த தய்யதன தானந்த ...... தனதான |
தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள் சொல்லுகுண மூவந்த ...... மெனவாகி துய்யசதுர் வேதங்கள் வெய்யபுல னோரைந்து தொய்யுபொரு ளாறங்க ...... மெனமேவும் பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள் பல்குதமிழ் தானொன்றி ...... யிசையாகிப் பல்லுயிரு மாயந்த மில்லசொரு பாநந்த பெளவமுற வேநின்ற ...... தருள்வாயே கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு கல்வருக வேநின்று ...... குழலூதுங் கையன் மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை கைதொழமெய்ஞ் ஞானஞ்சொல் ...... கதிர்வேலா கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று கொள்ளைகொளு மாரன்கை ...... யலராலே கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த கொல்லிமலை மேனின்ற ...... பெருமாளே. |
பழமையானதும் முதலானதும் தான் ஒன்றாக விளங்குவதாய், சக்தி - சிவன் என்ற மென்மையான இரண்டு பேதங்களாக விளங்குவதாய், சொல்லப்படுகின்ற மூன்று குணங்களின் (ஸத்வம், ரஜோ, தமஸ்) முடிவாக விளங்கும் மும்மூர்த்திகளாய், தூய்மையான நான்கு வேதங்கள் ஆகி, கொடிய புலன்களாகிய (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற) ஐந்து ஆகி, சோர்வடையச் செய்யவல்ல பொருள் விளக்கங்களைக் கொண்ட ஆறு வேதாங்கங்களாகி(*1), பலப்பல நாதங்களிடையே தங்குவதாய், உயிர்த்தளைகள் நீங்க பசு, பாசம் ஆகியவற்றில் தங்குவதாய், பெருகிவரும் தமிழ் மொழியில் பொருந்தி, இன்னிசையின் வடிவாகி, பலவித உயிர்களுமாகி, முடிவில்லாத ஆனந்த உருவ சமுத்திரத்தில் மூழ்கும்படி எது செய்யவல்லதோ, அந்தப் பொருளை நீ அருள்வாயாக. கல்லும் உருகும்படியான இனிமையுடன் புல்லாங்குழல் வாசிக்க, துன்பம் அடைந்திருந்த பசுக்கள் அழகிய புகும் இடத்துக்கு வரும்படியாக, நின்று குழலூதிய கண்ணனாகிய திருமால் (முன்பொருநாள்) ரிஷபமாகிய போது அதன் மீது வாகனமாக(*2) ஏறிய பெரியவரும், தாழ்ந்த சடையருமாகிய எங்கள் தந்தை சிவபிரான் கை குவித்துத் தொழ, உண்மையான ஞானத்தை உபதேசித்த ஒளிமிக்க வேலாயுதனே, தினைக் கொல்லையில் வாழ்ந்திருந்த வள்ளியின் புனத்தில் சென்று, உயிரைக் கொள்ளை கொள்ளும் மன்மதனின் கை மலர் அம்புகளின் செயலாலே, தழைகளைக் கொய்து சென்ற(*3) கட்டழகுக் கந்தனே, கொல்லிமலை(*4) மீது நின்றருளும் பெருமாளே.
(*1) ஆறங்கம் - வேத புருஷனுக்கு ஆறு அங்கங்கள் உண்டு. அவை:சி¨க்ஷ, வ்யாகரணம், சந்தஸ், ந்ருத்தம், ஜ்யோதிஷம், கல்பம் - இவை முறையே நாசி, வாய், கால், காது, கண், கை என்பர்.
(*2) சிவபிரான் திரிபுரத்துக்கு போரிடக் கிளம்புமுன்பு விநாயகரை வேண்டாததால் அத்தேரின் அச்சு முறிந்தது.அப்போது திருமாலே சிவனுக்கு ரிஷப வாகனமாக வந்த வரலாறு குறிப்பிடப்படுகிறது.
(*3) தமிழ்நாட்டில் குறிஞ்சி நிலப் பெண்கள் தழையை உடுத்திக் கொள்வர். அகத்துறையில் தழை கொண்டு சேரல் என்ற ஒரு துறை உண்டு.அதன்படி தலைவன் தலைவிக்கு உடுக்கத் தழை கொண்டு செல்ல வேண்டும்.வள்ளிக்காக முருகன் தழை கொண்டு சென்றது குறிப்பிடப்படுகிறது.
(*4) கொல்லிமலை சேலம் மாவட்டத்தில் நாமக்கல்லுக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 607 - கொல்லிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தய்யதன, கொண்டு, கொல்லிமலை, தானந்த, சிவபிரான், உண்டு, குறிப்பிடப்படுகிறது, வாகனமாக, தங்குவதாய், வேதங்கள், பெருமாளே, விளங்குவதாய், மீது