பாடல் 606 - கொல்லிமலை - திருப்புகழ்

ராகம் -...; தாளம்
-
தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய ...... தனதான |
கட்ட மன்னு மள்ளல் கொட்டி பண்ணு மைவர் கட்கு மன்னு மில்ல ...... மிதுபேணி கற்ற விஞ்ஞை சொல்லி யுற்ற வெண்மை யுள்ளு கக்க எண்ணி முல்லை ...... நகைமாதர் இட்ட மெங்ங னல்ல கொட்டி யங்ங னல்கி யிட்டு பொன்னை யில்லை ...... யெனஏகி எத்து பொய்ம்மை யுள்ள லுற்று மின்மை யுள்ளி யெற்று மிங்ங னைவ ...... தியல்போதான் முட்ட வுண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள முட்ட நன்மை விள்ள ...... வருவோனே முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி முத்தி விண்ண வல்லி ...... மணவாளா பட்ட மன்ன வல்லி மட்ட மன்ன வல்லி பட்ட துன்னு கொல்லி ...... மலைநாடா பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள பச்சை மஞ்ஞை வல்ல ...... பெருமாளே. |
கஷ்டங்கள் நிறைந்த சேறு போன்றதும், கொடு கொட்டி என்னும் ஆடல்போலக் கூத்தாட்டி வைத்து ஐம்புலன்களுக்கும் இருப்பான வீடு ஆகியதுமான இந்த உடலை விரும்பி, நான் கற்ற வித்தைகளைச் சொல்லி, சுலபமாக நிறைவேறும் என்று மனதில் நினைத்து, மகிழலாம் எனக் கருதி முல்லை மலர் போன்ற பற்களை உடைய விலைமாதர்களின் விருப்பத்துக்கு அப்படியே இணங்கி, நல்ல பொருள்களை எல்லாம் கொட்டிக் கொடுத்து, அவர்களிடம் கொடுத்த பின்னர், மேலும் கொடுப்பதற்குப் பொருள் இல்லை என்று சொல்லி வெளி வந்து, ஏமாற்றும் பொருட்டு பொய் வழிகளை யோசிக்கலுற்றும், பொன் இல்லாமையை நினைத்து இரக்கமுற்றும், இவ்வாறு மனம் வருந்துதல் தக்கதாமோ? முழு உண்மையைச் சொன்ன ருத்திர சன்மன்* என்னும் செட்டியாக அவதரித்து, சண்டையிட்ட புலவர்கள் உறுதிப் பொருளை அறிந்துகொள்ள, முழுவதும் சமாதானம் விளையும்படியாக வந்தவனே, முத்து நிற வல்லிக் கொடி போன்றவளும், அழகிய சித்ர நிற வல்லியும், முக்தி தரவல்ல விண்ணுலக வல்லியுமான தேவயானையின் மணவாளனே, வழியில் அமைக்கப்பட்டிருந்த மோகினிப் பெண், மது மயக்கம் போல மயக்கம் தரும் மோகினிப் பெண்** ஆகிய கொல்லிப் பாவை இருக்கும் நெருங்கிய காடு அடர்ந்த கொல்லி மலை*** நாடனே, பச்சை நிறமான வன்னி, அல்லி, வெட்சி இவைகளைத் தலையில் அணிந்தவனே, பச்சை நிறமுடைய மயிலைச் செலுத்த வல்ல பெருமாளே.
* மதுரையில் 49 சங்கப்புலவர்கள் இறையனார் அகப் பொருளுக்கு உரை எழுதினர். சிறந்த உரை எது என்பதில் விவாதம் ஏற்பட, மதுரை செட்டி குலத்தில் ஊமைப்பிள்ளை ருத்திரசன்மன் என்ற பெயரில் அவதரித்த முருகன் அனைவரது உரையையும் கேட்டு, நக்கீரன், கபிலன், பரணன் ஆகிய புலவர்களின் உரைகளைக் கேட்கும்போது மட்டும் வியப்பையும், கண்ணீரையும் காட்ட, இம் மூவரின் உரையே உண்மைப் பொருள் என்று புலவர்கள் உணர்ந்து கலகம் தீர்த்தனர் - திருவிளையாடல் புராணம்.
** இது கொல்லி மலையில் உள்ள ஒரு பெண்வடிவப் பதுமை. மோகினி வடிவம் உடையது. முனிவர்களைத் துன்புறுத்த வரும் அசுரர்கள் அப்பாவையின் நகையைக் கண்டு மயங்கி உயிர் விடும்படி தேவ தச்சன் ஆக்கி வைத்தது.
*** கொல்லிமலைக்குச் சதுரகிரி என்றும் பெயர் உண்டு. நாமக்கல் அருகே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 606 - கொல்லிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வல்லி, பச்சை, தத்த, சொல்லி, கொல்லி, தன்ன, தய்ய, கொட்டி, வன்னி, பெருமாளே, வல்ல, புலவர்கள், மயக்கம், ஆகிய, மோகினிப், பொருள், நினைத்து, என்னும், சித்ர, யுள்ள, முல்லை, கற்ற, மன்னு, முட்ட, செட்டி, பட்ட, வண்ண, முத்து, மன்ன