பாடல் 605 - திருச்செங்கோடு - திருப்புகழ்

ராகம் -
சந்தர கெளன்ஸ்; தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான |
கொடிய மறலியு மவனது கடகமு மடிய வொருதின மிருபதம் வழிபடு குதலை யடியவ னினதருள் கொடுபொரு ...... மமர்காண குறவர் மகள்புணர் புயகிரி சமுகமு மறுமு கமும்வெகு நயனமும் ரவியுமிழ் கொடியு மகிலமும் வெளிபட இருதிசை ...... யிருநாலும் படியு நெடியன எழுபுண ரியுமுது திகிரி திகிரியும் வருகென வருதகு பவுரி வருமொரு மரகத துரகத ...... மிசையேறிப் பழய அடியவ ருடனிமை யவர்கண மிருபு டையுமிகு தமிழ்கொடு மறைகொடு பரவ வருமதி லருணையி லொருவிசை ...... வரவேணும் சடில தரவிட தரபணி தரதர பரசு தரசசி தரசுசி தரவித தமரு கமிருக தரவனி தரசிர ...... தரபாரத் தரணி தரதநு தரவெகு முககுல தடினி தரசிவ சுதகுண தரபணி சயில விதரண தருபுர சசிதரு ...... மயில்வாழ்வே நெடிய வுடலுரு இருளெழ நிலவெழ எயிறு சுழல்விழி தழலெழ எழுகிரி நெரிய அதிர்குரல் புகையெழ இடியெழ ...... நெடுவானும் நிலனும் வெருவர வருநிசி சரர்தள நிகில சகலமு மடியவொர் படைதொடு நிருப குருபர சுரபதி பரவிய ...... பெருமாளே. |
கொடியவனான யமனும், அவனது யமப்படையும் இறக்க, ஒருநாள் உன் இரண்டு திருவடிகளையும் வழிபட்டு நிற்கும் மழலைச் சிறுவனாகிய நான் உன் திருவருளையே துணையாகக்கொண்டு யமனோடு சண்டை செய்யும் போரினைக் காண்பதற்கு, குறமகள் வள்ளி கட்டித் தழுவும் பன்னிரு புயமலைகளும், ஆறு திருமுகங்களும், பலவான (பதினெட்டு)* கண்களும், சூரியனைக் கூவி வெளிப்படுத்தும் சேவல் இருக்கும் கொடியும், இவையாவும் பிரத்யக்ஷமாக, மேல் கீழ் என்ற இரு திசைகளோடு எட்டுத் திசைகளையும், பூமியையும், நீண்ட ஏழு கடல்களையும், பழமையான சக்ரவாளகிரியையும், வலம் செய்து வருக என்று ஆணையிட்டதும் உடனேயே ஆடிவந்து கூத்தாடுகின்ற ஒரு பச்சைமயில் வாகனத்தின் மீது ஏறி, பழமையான அடியார்களுடன், தேவர் கூட்டம் இருபுறமும் மிகுந்த தமிழ்ப் பாடல்களையும் வேதகீதங்களையும் பாடி வணங்க, முன்னொருமுறை திருவண்ணாமலையில் என்முன் வந்ததுபோல இன்னொரு முறை வந்தருளல் வேண்டும். ஜடாமுடியைத் தாங்குபவரும், ஆலகால விஷத்தைக் கண்டத்தில் தரித்தவரும், பாம்புகளை ஆபரணங்களாகப் பூண்டவரும், மேன்மையான மழுவைத் தாங்கியவரும், சந்திரனை முடியில் தரித்தவரும், தூய்மையே உருவாக நிற்பவரும், இதமாய் ஒலிக்கும் உடுக்கையையும், மானையும் திருக்கரங்களில் ஏந்தியவரும், பார்வதிதேவியை இடப்பாகத்தில் தாங்கியவரும், பிரம்மனின் சிரத்தைத் தாங்கியவரும், சுமையான இந்த பூமியைத் தாங்கியவரும், மேருமலையையே வில்லாகத் தரித்தவரும், ஆயிரம் முகங்களை உடைய சிறந்த கங்காதேவியைச் சிரத்தில் தாங்கியவரும் ஆகிய சிவ பெருமானுடைய திருப்புதல்வனே, அரும் குணங்களை உடையவனே, நாகமலை** என்ற திருச்செங்கோட்டில் எழுந்தருளி இருப்பவனே, தயாள மூர்த்தியே, கற்பகத் தருவுள்ள தேவநாட்டின் இந்திராணி மகள் மயிலை ஒத்த அழகி தேவயானையின் வாழ்வாக இருப்பவனே, அசுரர்களின் நீண்ட உடம்பின் கரிய வடிவத்திலிருந்து இருள் வீசவும், அவர்களின் பற்களிலிருந்து ஒளி வீசவும், சுழல்கின்ற கண்களிலிருந்து நெருப்புப் பொறி பறக்கவும், ஏழு குலகிரிகள் நெரிந்து பொடிபடவும், அதிர்கின்ற குரலிலிருந்து புகை எழவும், இடி போன்ற பேரொலி எழவும், விசாலமான ஆகாயமும், பூமியும் அச்சப்படவும் வருகின்ற அசுரர்களின் சேனைகள் சிறிதும் மீதமில்லாமல் முழுவதும் அழிந்தொழிய ஒப்பற்ற சர்வ சம்கார வேற்படையை ஏவிய தலைவனே, மேலான குருநாதனே, தேவர் கோமான் இந்திரனால் துதிக்கப் பெற்ற பெருமாளே.
குறிப்பு: இப்பாடலில் 'தர' என்னும் சொல் 13 முறையும் 'எழ' என்னும் சொல் 6 முறையும் வந்திருப்பது சிறப்பு.
* 'சூரியன், 'சந்திரன்', 'அக்கினி' என மூன்று கண்கள் வீதம் முருகனின் ஆறு முகங்களுக்கு 18 கண்கள் உள்ளன.இதைத்தான் ஆதி சங்கரர் சுப்ரமண்ய புஜங்கத்தில் 'அஷ்டாதச விலோசனே' என்று கூறுகிறார்.
** திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது.மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 605 - திருச்செங்கோடு - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தாங்கியவரும், தரித்தவரும், தகதிமி, என்னும், சொல், கண்கள், என்றும், இருப்பதால், திருச்செங்கோடு, எழவும், முறையும், இருப்பவனே, பெருமாளே, தரபணி, நீண்ட, பழமையான, அசுரர்களின், தேவர், வீசவும்