பாடல் 601 - திருச்செங்கோடு - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தத்த தாத்தத் தத்த தாத்தத் தத்த தாத்தத் ...... தனதான |
அத்த வேட்கைப் பற்றி நோக்கத் தத்தை மார்க்குத் ...... தமராயன் பற்ற கூட்டத் திற்ப ராக்குற் றச்சு தோட்பற் ...... றியவோடும் சித்த மீட்டுப் பொய்த்த வாழ்க்கைச் சிக்கை நீக்கித் ...... திணிதாய சித்ர வாக்குப் பெற்று வாழ்த்திச் செச்சை சாத்தப் ...... பெறுவேனோ கொத்து நூற்றுப் பத்து நாட்டக் கொற்ற வேத்துக் ...... கரசாய குக்கு டாத்தச் சர்ப்ப கோத்ரப் பொற்ப வேற்கைக் ...... குமரேசா தத்வ நாற்பத் தெட்டு நாற்பத் தெட்டு மேற்றுத் ...... திடமேவும் தர்க்க சாத்ரத் தக்க மார்க்கச் சத்ய வாக்யப் ...... பெருமாளே. |
பொருளின் மேல் மட்டும் ஆசைகொண்டு என் மீது விருப்பம் வைக்கும் அந்தக் கிளிபோன்ற விலை மகளிருக்கு வேண்டியவனாய், அன்பு இல்லாத அவர்களின் கூட்டத்தில் மட்டும் என் கவனத்தை வைத்து, உருவமைந்த அவர்கள் தோளை அணைக்க அலை பாயும் மனத்தை அவ்வழியினின்றும் திருப்பி, பொய்யான வாழ்க்கை என்னும் நிலையில் சிக்கிக்கொண்டதை நீக்கி, வன்மை வாய்ந்த அழகிய வாக்கை நான்அடைந்து, உன் வெட்சி மாலையை அணியப்பெறும் பாக்கியம் எனக்குக் கிட்டுமோ? நெருக்கமான (100 மடங்கு 10=1000) ஆயிரம் கண்களை உடலில் உடைய வீர வேந்தனாகிய இந்திரனுக்கு* அரசனாகிய, கோழி (க்கொடி) ஏந்திய கையனே, பாம்பு மலை எனப்படும் திருச்செங்கோட்டு** அழகனே, வேலாயுதத்தை ஏந்தும் திருக்கரத்தனே, குமரேசனே, தொண்ணூற்றாறு (48 + 48) தத்துவங்களையும்*** பொருந்தி, திடமான தர்க்க சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட தக்க நீதி வழிகளில் உள்ள சத்தியமான சொற்களைப் பேசும் பெருமாளே.
* கெளதம முநிவரின் சாபத்தால் அவரது மனைவி அகல்யையைக் காமுற்ற இந்திரனுக்கு உடலில் ஆயிரம் கண்கள் ஏற்பட்டன.
** திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது.மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
*** 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 601 - திருச்செங்கோடு - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்த, தாத்தத், தத்துவம், திருச்செங்கோடு, இருப்பதால், தத்துவங்கள், புறநிலை, உடலில், என்றும், மட்டும், தெட்டு, நாற்பத், தர்க்க, தக்க, பெருமாளே, ஆயிரம்