பாடல் 597 - திருச்செங்கோடு - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன ...... தனதான |
ஆல காலப டப்பைம டப்பியர் ஈர வாளற வெற்றும்வி ழிச்சியர் யாவ ராயினு நத்திய ழைப்பவர் ...... தெருவூடே ஆடி யாடிந டப்பதொர் பிச்சியர் பேசி யாசைகொ டுத்தும ருட்டிகள் ஆசை வீசிய ணைக்குமு லைச்சியர் ...... பலரூடே மாலை யோதிவி ரித்துமு டிப்பவர் சேலை தாழநெ கிழ்த்தரை சுற்றிகள் வாசம் வீசும ணத்தில்மி னுக்கிகள் ...... உறவாலே மாயை யூடுவி ழுத்திய ழுத்திகள் காம போகவி னைக்குளு னைப்பணி வாழ்வி லாமல்ம லச்சன னத்தினி ...... லுழல்வேனோ மேலை வானொரு ரைத்தச ரற்கொரு பால னாகியு தித்தொர்மு நிக்கொரு வேள்வி காவல்ந டத்திய கற்குரு ...... அடியாலே மேவி யேமிதி லைச்சிலை செற்றுமின் மாது தோள்தழு விப்பதி புக்கிட வேறு தாயட விக்குள்வி டுத்தபி ...... னவனோடே ஞால மாதொடு புக்கவ னத்தினில் வாழும் வாலிப டக்கணை தொட்டவ னாடி ராவண னைச்செகு வித்தவன் ...... மருகோனே ஞான தேசிக சற்குரு உத்தம வேல வாநெரு வைப்பதி வித்தக நாக மாமலை சொற்பெற நிற்பதொர் ...... பெருமாளே. |
ஆலகால விஷத்தை உடைய பாம்பின் படம் போன்ற பெண்குறியை உடைய இளம் மாதர்கள். கொழுப்பு ஈரம் கொண்ட வாள் போல மிகவும் தாக்க வல்ல கண்களை உடையவர். யாராக இருந்தாலும் விரும்பி அழைப்பவர்கள். தெருவின் மத்தியில் ஆடி ஆடி நடக்கும் பித்துப் பிடித்தவர்கள். தங்கள் பேச்சு வன்மையால் ஆசை காட்டி மயக்குபவர்கள். ஆசை வலையை வீசி அணைக்கின்ற மார்பினர். பலர் மத்தியிலும் மாலை அணிந்த கூந்தலை அவிழ்த்து முடிப்பவர். புடவை கீழே தாழும்படி தளர்த்தி இடுப்பில் சுற்றுபவர்கள். வாசனை வீசும் நறுமணம் கொண்டு மினுக்குபவர்கள். இத்தகைய விலைமாதர்களின் தொடர்பால், மாயையின் உள்ளே விழும்படிச் செய்து அழுத்துபவர்களின் காம போகச் செயல்களில் ஈடுபட்டதாலே, உன்னைப் பணியும் நல் வாழ்வு இல்லாமல் மும்மலங்களுக்கு ஈடான பிறப்பில் அலைவேனோ? மேல் உலகத்தில் உள்ள தேவர்கள் புகழ்ந்த தசரதற்கு ஒரு குழந்தையாகப் பிறந்து, ஒப்பற்ற விசுவாமித்திர முனிவருக்கு ஒரு யாகத்தில் காவல் புரிந்து, அந்த கல்லைத் திருவடியினால் (மிதித்துப்) பழைய வடிவத்தை (அகலிகை) எய்தும் படிச் செய்து, மிதிலையில் சனகர் முன் (சிவதனுசு என்ற) வில்லை முறித்து ஒளி பொருந்திய சீதையை மணம் புரிந்து அயோத்தி நகருக்குத் திரும்பி வந்து, மாற்றாந் தாயாகிய கைகேயி காட்டுக்குள் போகும்படிச் செய்ய, தம்பியாகிய இலக்குவனுடன் பூதேவி மகளாம் சீதையோடு சென்று, அந்தக் காட்டில் வாழ்ந்த வாலி இறக்கும்படி அம்பைச் செலுத்தியவனும், தேடிச் சென்று இராவணனை அழித்தவனுமாகிய ராமனின் மருகனே, ஞான தேசிகனே, சற் குருவே, உத்தமனனாவனே, வேலவனே, நெருவூரில் வீற்றிருக்கும் ஞான மூர்த்தியே, திருச்செங்கோட்டில்** புகழ் பெற விளங்கி நிற்கும் பெருமாளே.
* நெருவைப்பதி என்பது நெருவூர். கருவூருக்கு அருகே உள்ளது.
** திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது.மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 597 - திருச்செங்கோடு - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தன, தானன, சென்று, உள்ளது, இருப்பதால், என்றும், அந்த, திருச்செங்கோடு, செய்து, மாலை, பெருமாளே, உடைய, பாம்பின், புரிந்து