பாடல் 575 - விராலிமலை - திருப்புகழ்

ராகம் - பைரவி ;
தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
- எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி
தகிட-1 1/2, தகதிமி-2
- எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி
தகிட-1 1/2, தகதிமி-2
தந்த தானன தான தனதன தந்த தானன தான தனதன தந்த தானன தான தனதன ...... தனதான |
ஐந்து பூதமு மாறு சமயமு மந்த்ர வேதபு ராண கலைகளும் ஐம்ப தோர்வித மான லிபிகளும் ...... வெகுரூப அண்ட ராதிச ராச ரமுமுயர் புண்ட ¡£கனு மேக நிறவனும் அந்தி போலுரு வானு நிலவொடு ...... வெயில்காலும் சந்த்ர சூரியர் தாமு மசபையும் விந்து நாதமு மேக வடிவம தன்சொ ரூபம தாக வுறைவது ...... சிவயோகம் தங்க ளாணவ மாயை கருமம லங்கள் போயுப தேச குருபர சம்ப்ர தாயமொ டேயு நெறியது ...... பெறுவேனோ வந்த தானவர் சேனை கெடிபுக இந்த்ர லோகம்வி பூதர் குடிபுக மண்டு பூதப சாசு பசிகெட ...... மயிடாரி வன்கண் வீரிபி டாரி ஹரஹர சங்க ராஎன மேரு கிரிதலை மண்டு தூளெழ வேலை யுருவிய ...... வயலூரா வெந்த நீறணி வேணி யிருடிகள் பந்த பாசவி கார பரவச வென்றி யானச மாதி முறுகுகல் ...... முழைகூடும் விண்டு மேல்மயி லாட இனியக ளுண்டு காரளி பாட இதழிபொன் விஞ்ச வீசுவி ராலி மலையுறை ...... பெருமாளே. |
மண், நீர், தீ, காற்று, வெளி ஆகிய ஐந்து பூதங்களும், சைவம், வைணவம், காணாபத்யம், கெளமாரம், சாக்தம், செளரம் என்ற ஆறு சமயங்களும், மந்திரங்களும், வேதங்களும், புராணங்களும்*, கலைகளும், ஐம்பத்தொரு விதமான எழுத்துக்களும், அனேக உருவங்களுடன் கூடிய தேவர்கள் முதல் அசைகின்ற, அசையாத உயிர்கள் யாவும், உயர்ந்த பிரமனும், கார்மேக நிறத்துத் திருமாலும், அந்தி வானம் போன்ற செம்மேனியை உடைய ருத்திரனும், நிலவோடு வெயிலை வீசுகின்ற சந்திரனும், சூரியனும், அம்ச மந்திரமும்** சுக்கில சுரோணிதமாக விளங்கும் சிவ சக்தியும், இவை அனைத்தும் கலந்து இருப்பது ஒரே வடிவமாகும். வேறு வேறாகப் பிரிக்காமல் அதன் ஸ்வரூபமாகவே அகண்டாகாரமாக இருக்கும் சிவத்தை அறிந்து அதில் நிலையாக நிற்பதுவே சிவ யோகம் ஆகும். அவரவர்களுக்கு உரிய ஆணவம், மாயை, கன்மம் என்ற மும்மலங்களும் நீங்கப் பெற்று, பரம்பரையாக குருமூர்த்தியிடம் உபதேசம் பெறுகிற வழியில் நின்று, அந்த மரபின் நியமத்துடன் உபதேச நெறியை யானும் பெறக் கடவேனோ? போருக்காக எதிர்த்து வந்த அசுரர் சேனைகள் அச்சம் அடைய, தேவர்கள் இந்திர லோகத்துக்குச் சென்று மீண்டும் குடியேற, நெருங்கி வந்த பூதங்களும் பைசாசங்களும் பசி ஆற, மகிஷாசுரனை அழித்த, கொடுமையும் வீரமும் உடையவளுமான துர்க்கை ஹரஹரா சங்கரா என்று துதி செய்ய, மேரு மலையின் உச்சிச் சிகரத்தில் மிகுந்த புழுதி உண்டாக, வேலாயுதத்தை விடுத்து அருளிய வயலூரனே, நெருப்பில் வெந்த திருநீற்றை அணியும், ஜடாமுடி உடைய ரிஷிகள் பந்தம், பாசம் என்ற கலக்கங்களை நீக்கின வெற்றி நிலையான சமாதி நிலையை திண்ணிய கற்குகையாகும் விராலிமலையில் அடைய, அந்த மலையின் மீது மயில் ஆட, இனிப்பான கள்ளை உண்டு கரிய வண்டுகள் பாட, கொன்றை மரங்கள் (பூவுக்குப் பதிலாக) பொன்னை மிகுதியாகச் சொரியும் விராலி மலையில்*** வீற்றிருக்கும் பெருமாளே.
* புராணங்கள் 18 - சைவம், பெளஷ்யம், மார்க்கண்டேயம், லிங்கம், ஸ்காந்தம், வராகம், வாமனம், மச்சம், கூர்மம், பிரம்மாண்டம், கருடம், நாரதீயம், விஷ்ணு, பாகவதம், பிரமம், பத்மம், ஆக்னேயம், பிரமகைவர்த்தம்.
** அசபை என்ற அம்ச மந்திரம் வடமொழியில் ஸோஹம் என்பது. ஸ + அஹம், அதாவது அவனே நான் என்ற, பரமாத்மா - ஜீவாத்மா ஐக்கியத்தைக் குறிப்பிடும் மந்திரம்.
*** கோனாடு என்பது எறும்பீசர் மலைக்கு மேற்கு, மதிற்கரைக்குக் கிழக்கு, காவிரிக்குத் தெற்கு, பிரான்மலைக்கு வடக்கு என்ற எல்லைக்கு உட்பட்டது. இங்குதான் விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே, உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 575 - விராலிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, வந்த, தனதன, தானன, வழியில், உடைய, அந்த, அம்ச, அடைய, என்பது, மந்திரம், மலையின், தேவர்கள், பெருமாளே, அந்தி, கலைகளும், ஐந்து, மாயை, மண்டு, பூதங்களும், வெந்த, மேரு, சைவம்