பாடல் 572 - விராலிமலை - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தத்ததன தந்ததன தத்ததன தந்ததன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தத்ததன தந்ததன தத்ததன தந்ததன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தத்ததன தந்ததன தத்ததன தந்ததன ...... தனதான |
இதமுறு விரைபுனல் முழுகி யகில்மண முதவிய புகையினி லளவி வகைவகை கொத்தலர்க ளின்தொடையல் வைத்துவளர் கொண்டலென அறலென இசையளி யெனந ளிருளென நிறமது கருகிநெ டுகிநெ றிவுபட நெய்த்துமுசு வின்திரிகை யொத்தசுருள் குந்தளமும் இலகிய பிறையென எயினர் சிலையென விலகிய திலதநு தலும திமுகமும் உற்பலமும் வண்டுவடு விற்கணைய மன்படரு ...... முனைவாளும் இடர்படு கவுநடு வனும்வ லடல்பொரு கடுவது மெனநெடி தடுவ கொடியன இக்குசிலை கொண்டமதன் மெய்த்தவநி றைந்தவிழி தளவன முறுவலு மமுத குமுதமும் விளைநற வினியமொ ழியுமி னையதென ஒப்பறுந கங்கள்விரல் துப்பெனவு றைந்துகமு கிடியொடி படவினை செயும்வின் மதகலை நெடியக வுடியிசை முரலு சுரிமுக நத்தனைய கண்டமும்வெண் முத்துவிளை விண்டனைய ...... எழில்தோளும் விதரண மனவித னமதை யருள்வன சததள மறைமுகி ழதனை நிகர்வன புத்தமிர்து கந்தகுடம் வெற்பெனநி ரம்புவன இமசல ம்ருகமத களப பரிமள தமனிய ப்ரபைமிகு தருண புளகித சித்ரவர மங்கலவி சித்ரவிரு துங்ககன விகலித மிருதுள ம்ருதுள நவமணி முகபட விகடின தனமு முயர்வட பத்திரமி ருந்தகடி லொத்தசுழி யுந்தியுள ...... மதியாத விபரித முடையிடை யிளைஞர் களைபட அபகட மதுபுரி யரவ சுடிகைய ரத்நபண மென்பவழ குற்றவரை யும்புதிய நுணியத ளிரெனவு லவிய பரிபுர அணிநட னபதமு முடைய வடிவினர் பொற்கலவி யின்பமதி துக்கமென லன்றியவர் விரகினி லெனதுறு மனம துருகிய பிரமையு மறவுன தருள்கை வரவுயர் பத்திவழி யும்பரம முத்திநெறி யுந்தெரிவ ...... தொருநாளே தததத தததத ததத தததத திதிதிதி திதிதிதி திதிதி திதிதிதி தத்ததத தந்ததத தித்திதிதி திந்திதிதி டகுடகு டிகுடிகு டகுகு டிகுடிகு டிகுடிகு டகுடகு டிகுகு டகுடகு தத்ததிமி டங்குகுகு தித்திதிமி டிங்குகுகு தமிதமி தமிதக தமித திமிதக திமிதிமி செககண திமித திகதிக தத்திமித தந்திமித தித்திமிதி திந்திமிதி ...... யெனவேதான் தபலைகு டமுழவு திமிலை படகம தபுதச லிகைதவில் முரசு கரடிகை மத்தளித வண்டையற வைத்தகுணி துந்துமிகள் மொகுமொகு மொகுவென அலற விருதுகள் திகுதிகு திகுவென அலகை குறளிகள் விக்கிடநி ணம்பருக பக்கியுவ ணங்கழுகு சதிர்பெற அதிர்தர உததி சுவறிட எதிர்பொரு நிருதர்கள் குருதி பெருகிட வப்புவின்மி தந்தெழுப தற்புதக வந்தமெழ ...... வெகுகோடி மதகஜ துரகர தமுமு டையபுவி யதலமு தல்முடிய இடிய நெடியதொர் மிக்கொலிமு ழங்கஇரு ளக்கணம்வி டிந்துவிட இரவியு மதியமு நிலைமை பெறஅடி பரவிய அமரர்கள் தலைமை பெறஇயல் அத்திறல ணங்குசெய சத்திவிடு கந்ததிரு வயலியி லடிமைய குடிமை யினலற மயலொடு மலமற அரிய பெரியதி ருப்புகழ்வி ளம்புவென்மு னற்புதமெ ழுந்தருள்கு ...... கவிராலி மலையுறை குரவந லிறைவ வருகலை பலதெரி விதரண முருக சரவண உற்பவக்ர வுஞ்சகிரி நிக்ரகஅ கண்டமய நிருபவி மலசுக சொருப பரசிவ குருபர வெளிமுக டுருவ வுயர்தரு சக்ரகிரி யுங்குலைய விக்ரமந டம்புரியு மரகத கலபமெ ரிவிடு மயில்மிசை மருவியெ யருமைய இளமை யுருவொடு சொர்க்கதல மும்புலவர் வர்க்கமும்வி ளங்கவரு ...... பெருமாளே. |
இன்பத்தைத் தருகின்ற வாசனை கலந்த நீரில் மூழ்கி, அகிலின் நறு மணம் வீசும் புகையை ஊட்டி, விதவிதமான கொத்து மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளை ஒழுங்கு பெற வைத்து, வளர்கின்ற மேகம் போன்றும், கரு மணல் போன்றும், இசை பாடும் வண்டுகளின் கூட்டம் போன்றும, நள்ளிரவின் இருள் போலவும் நிறமானது கறுத்து நீளமுள்ளதாய், நெருக்கம் உள்ளதாய், வாசனைத் தயிலம் தடவியதால் பளபளப்புள்ளதாய், கருங்குரங்கின் சுருளை ஒத்த வளைவுள்ள கூந்தலும், விளங்கும் பிறைச் சந்திரன் போன்றும், வேடர்களின் வில்லைப் போன்றும், விசாலமான, திலகம் அணிந்த நெற்றியும, திங்களைப் போன்ற முகமும், நீலோற்ப மலரும், வண்டும், மாவடுவும், வில்லம்பும், யம தூதர்களும், கூரிய வாளும் என நின்று துன்பத்தை உண்டாக்கவும், யமனும், மிக்க வலிமை பொருந்திய கொடிய விஷமும் போன்று நீண்ட நேரம் வருத்துவனவாய், பொல்லாதவனவாய், கரும்பை வில்லாகக் கொண்ட மன்மதனது உண்மைத் தவவலிமை முற்றும் நிறைந்துள்ளதாய் விளங்கும் கண்களும், முல்லை அரும்பை ஒத்த பற்களும், அமுதம் போன்றதாய் குமுத மலர் ஒத்த வாயினின்று வரும் தேன் போல் இனிக்கும் சொற்களும், இதற்குத் தான் நிகர் என்று சொல்ல ஒண்ணாத நகங்களோடு கூடிய விரல்கள் பவளம் போல் விளங்கவும், கமுகு இதற்கு நிகராகாது இடி பட்டு ஒடிந்துவிழ, காதல் வினையைத் தூண்டும் கரும்பு வில் ஏந்திய மன்மத நூலுக்குப் பொருந்த அமைந்த பெரிய கெளடி என்ற பண் வகையை இசைத்து ஒலிக்கின்ற சங்குக்கு ஒப்பான கழுத்தும், வெண்மை நிற முத்துக்கள் விளைகின்ற மூங்கில் போன்ற அழகிய தோள்களும், விவேகம் உள்ள மனத்தில் வேதனைத் துயரைத் தருவனவாய், நூற்றிதழ்த் தாமரை மொட்டை ஒப்பனவாய், புதிய அமிர்த வாசனைக் குடம், மலை போல பூரித்து இருப்பவனவாய், பன்னீர், கஸ்தூரி, கலவைச் சந்தனம் இவைகளைக் கொண்டனவாய், நறு மணம் உள்ளனவாய், பொன் ஒளி மிகுந்தனவாய், இளமை கொண்டனவாய், மகிழ்ச்சி தருவனவாய, அழகு, சிறப்பு, பொலிவு, அதிசயம் இவை யாவும் கொண்டனவாய், நவ ரத்ன மாலையையும், மூடும் அலங்காரத் துணியையும் கொண்டவனவாய், திரட்சி உள்ள மார்பகங்களும், உயர்ந்த ஆலிலை போன்ற அடி வயிற்றில் பொருந்திய சுழிவுற்ற கொப்பூழும், உள்ளத்தில் ஆராயாத மாறு பாடான எண்ணத்தை உடையவராய் அத்தகைய எண்ணத்தின் இடையே அகப்பட்ட இளைஞர்கள் சோர்வு அடைய, வஞ்சகம் செய்கின்ற பாம்பின் தலை உச்சியில் உள்ள ரத்ன படம் என்று சொல்லத் தக்க அழகு வாய்ந்த பெண்குறியும், புதிய நுண்ணிய தளிர் போன்று உலவுகின்ற, சிலம்பு அணிந்த, நடனத்துக்கு உற்ற பாதங்களை உடைய உருவத்தினராகிய விலைமாதர்களுடைய அழகிய சேர்க்கை இன்பமானது அதிக துக்கத்தைத் தருவது என்று உணர்தலோடு கூட, அவ்வேசிகளின் தந்திரச் செயல்களில் என்னுடைய மனமானது உருகிடும் மயக்கமும் ஒழிய, உனது திருவருள் கைகூட உயர்ந்த பக்தி வழியும் மேலான முக்தி நெறியும் எனக்குப் புலப்படுவதாகிய ஒரு நாள் உண்டாகுமா? மேற்கூறிய தாள மெட்டுக்கு ஏற்ப தபேலா என்ற ஒரு மத்தள வகை, குடவடிவுள்ள முழவு வாத்திய வகை, திமிலை என்ற ஒருவகைப் பறை, சிறு பறை வகை, முன் இல்லாததான புது வகையான சல்லென்ற ஓசை உடைய சல்லிகை என்னும் பெரும் பறை, தவில் வகை. முரசு, கரடி கத்தினாற் போல் ஓசை உடைய பறை வகை, மத்தள வாத்திய வகை, பேருடுக்கை, நிரம்ப இருந்த தகுணிச்சம் என்ற துந்துமிகள் பேரொலி எழுப்ப, வெற்றிச் சின்னங்கள் திகு திகு என்று எங்கும் விளங்க, பேய்களும், மாய வித்தைக் குறளிப் பிசாசுகளும் விக்கல் வரும் அளவு கொழுப்பை உண்ண, பறவைகளான கருடனும், கழுகும் பேறு பெற்றோம் என்று ஆரவாரிக்க, கடல் வற்றிப் போக, சண்டை செய்யும் அசுரர்களின் இரத்தம் பெருகிட, அந்தச் செந்நீரில் மிதந்து எழுபது கணக்கான அற்புதமான தலையற்ற உடல்கள் (கவந்தங்கள்) எழ, பல கோடிக் கணக்கானமத யானைகளையும், குதிரைகளையும், தேர்களையும உடைய பூமியும், அதலம் முதலான கீழேழ் உலகமும் அதிர்ச்சி உற்று கலங்க, நீண்ட பெருத்த ஒலி முழங்கி எழ, உலகின் துயர் அந்தக் கணத்திலேயே விலகி ஒழிய, சூரியனும் சந்திரனும் பழைய நிலை பெற்று விளங்க, திருவடியைப் போற்றிய தேவர்கள் மேன்மையை அடைய, பொருந்திய அந்த வீர லட்சுமி விளங்கும் வெற்றி வேலைச் செலுத்திய கந்தனே, திரு வயலூரில் (அடியேனுடைய) குடிப் பிறப்பின் துன்பங்கள் நீங்க, மயக்கமும் மும்மலங்களும் அகல, அருமையான பெரிய திருப்புகழைச் சொன்ன என் கண்களின் முன்னே அற்புதக் காட்சியுடன் எழுந்தருளிய குகனே*, விராலி மலையில் வீற்றிருக்கும் பெரியோனே, பெருமை பொருந்திய இறைவனே, உள்ள கலைகள் பலவும் தெரிந்த கருணை வாய்ந்த முருகனே, சரவணப் பொய்கையில் தோன்றினவனே, கிரெளஞ்ச மலையை அழித்தவனே, எங்கும் பூரணமாய் நிறைந்த அரசே, மாசற்றவனே, ஆனந்த வடிவானவனே, பரமசிவனுக்கு குரு மூர்த்தியே, அண்டத்தின் புற எல்லையைத் தாண்டி உயர்ந்து செல்லும், சக்ரவாள கிரியும் நடுக்கம் உற வல்லமை பொருந்திய நடனத்தைச் செய்யும், பச்சை நிறமான தோகைகள் ஒளி வீசும் மயில் மேல் பொருந்தியவனே, அருமை வாய்ந்த இளமை உருவத்தோடு, விண்ணுலகும் புலவர்கள் கூட்டமும சுற்றிலும் விளங்க எழுந்தருளும் பெருமாளே. * 'விகட பரிமள' எனத் துவக்கும் பாடலை அருணகிரியார் வயலூரில் பாட இறைவன் உவந்து அவர் முன் அற்புதக் கோலத்தோடு எழுந்தருளி அவரது இன்னலை ஒழித்து, ஞானோபதேசம் செய்து விராலி மலைக்கு வா என்று அழைத்தார். இதை, 'விராலி மாலையில் நிற்பம், நீ கருதி உற்று வா, என அழைத்து என் மனதாசை மாசினை அறுத்து ஞானமுதளித்த வாரம் இனி நித்தம் மறவேனே' என்று வரும் (திருப்புகழ் - 'தாமரையின் மட்டு') பாடலில் காணலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 572 - விராலிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தந்ததன, தத்ததன, பொருந்திய, போன்றும், உள்ள, உடைய, விளங்கும், ஒத்த, வாய்ந்த, விராலி, விளங்க, கொண்டனவாய், போல், வரும், டகுடகு, டிகுடிகு, திதிதிதி, இளமை, தததத, வாத்திய, மத்தள, ஒழிய, மயக்கமும், முன், எங்கும், அற்புதக், விதரண, வயலூரில், உற்று, பரிமள, செய்யும், திகு, ரத்ன, துந்துமிகள், போன்று, அணிந்த, பெருகிட, வீசும், பெருமாளே, நீண்ட, முரசு, மணம், உயர்ந்த, அழகு, அழகிய, திமிலை, பெரிய, அடைய