பாடல் 566 - இரத்னகிரி - திருப்புகழ்

ராகம் - மோஹனம்;
தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்டநடை - 35
- எடுப்பு /4/4/4 0
நடை - தகிட தக
- எடுப்பு /4/4/4 0
நடை - தகிட தக
தத்ததன தானதன தானதன தானதன தத்ததன தானதன தானதன தானதன தத்ததன தானதன தானதன தானதன ...... தனதான |
சுற்றகப டோடுபல சூதுவினை யானபல கற்றகள வோடுபழி காரர் கொலை காரர்சலி சுற்றவிழ லானபவி ஷோடுகடல் மூழ்கிவரு ...... துயர்மேவித் துக்கசமு சாரவலை மீனதென கூழில்விழு செத்தையென மூளுமொரு தீயில்மெழு கானவுடல் சுத்தமறி யாதபறி காயமதில் மேவிவரு ...... பொறியாலே சற்றுமதி யாதகலி காலன்வரு நேரமதில் தத்துஅறி யாமலொடி யாடிவரு சூதரைவர் சத்தபரி சானமண ரூபரச மானபொய்மை ...... விளையாடித் தக்கமட வார்மனையை நாடியவ ரோடுபல சித்துவிளை யாடுவினை சீசியிது நாறவுடல் தத்திமுடி வாகிவிடு வேனொமுடி யாதபத ...... மருள்வாயே தித்திமித தீதிமித தீதிமித தீமிதத தத்ததன தானதன தானனன தானனன திக்குடுடு டூடமட டாடமட டூடுடுடு ...... எனதாளம் திக்குமுகி லாடஅரி யாடஅய னாடசிவ னொத்துவிளை யாடபரை யாடவர ராடபல திக்கசுரர் வாடசுரர் பாடமறை பாடஎதிர் ...... களமீதே எத்திசையு நாடியம னார்நிணமொ டாடபெல மிக்கநரி யாடகழு தாடகொடி யாடசமர் எற்றிவரு பூதகண மாடவொளி யாடவிடு ...... வடிவேலா எத்தியொரு மானைதினை காவல்வல பூவைதனை சித்தமலை காமுககு காநமசி வாயனொடு ரத்நகிரி வாழ்முருக னேயிளைய வாவமரர் ...... பெருமாளே. |
சூழ்ந்துள்ள வஞ்சனைகள் பலவும் சூது நிறைந்த தொழில்கள் பலவும் கொண்டு, கற்ற கள்ளத் தொழிலொடு பழிக்கு இடம் தருபவர்கள், கொலை செய்பவர்கள் இவர்களுடன் கூடிச் சலிப்புற்று, அலைந்து, வீணான பெருமையோடு வாழ்க்கைக் கடலில் மூழ்கி, அதில் உண்டான துன்பங்களை அடைந்து, துக்கம் தரும் சம்சாரம் என்னும் கடலில் வீசப்பட்ட வலையில் சிக்கிய மீன் போல, கூழில் விழுந்த குப்பை போலக் கிடந்து, மூண்டு எரியும் பெரிய நெருப்பில் பட்ட மெழுகுபோல் உருகும் உடல், சுத்தம் என்பதையே அறியாத பாரம் வாய்ந்த உடலில் பொருந்தி வேலை செய்யும் ஐந்து இந்திரியங்களின் காரணமாக, சிறிதேனும் இரக்கமில்லாமல் வருகின்ற, வலியும் செருக்கும் கொண்ட யமன் நெருங்கும் சமயத்தில், ஆபத்து (சாவின் உருவில்) வருகின்றதே என்பதை அறியாமல் ஓடியும் ஆடியும் வருகின்ற சூதாடிகளான ஐவர், சப்தம், தொடுகை, வாசனை, வடிவம், ரசம் எனப்படும் ஐம்புலன்களின் பொய் இன்பங்களில் திளைத்து விளையாடி, இந்த உடலுக்குத் தகுந்த மாதர்களையும், அவர்கள் வீடுகளையும் தேடிச் சென்று, அம்மாதர்களோடு பல (காம) மாய வித்தைகளை விளையாடும் தொழில், சீசீ இது என்று பலரும் வெறுப்புடன் கூறத்தக்கதாய்த் தோன்ற, (என்னுடைய) உடல் நைந்துபோய் இறுதியில் நான் இறந்து படுவேனோ? அதற்குள் உனது அழிவில்லாத திருவடியைத் தந்து அருளுக. தித்திமித தீதிமித தீதிமித தீமிதத தத்ததன தானதன தானனன தானனன (இதே ஒலியில்) தாளம் எல்லா திசைகளிலும் இடியென ஒலிக்க, திருமால் ஆட, பிரமன் ஆட, சிவனும் மகிழ்ந்து களி கூர்ந்து ஆட, தேவியும் உடன் ஆட, சிறந்த முனிவர்கள் ஆட, பல திக்குகளில் இருந்த அசுரர்கள் வாடி மயங்க, தேவர்கள் பாட, வேதங்கள் பாடித் துதிக்கப்பட, எதிர்த்து வந்த போர்க்களத்தில் எல்லாத் திசைகளையும் தேடிச் சென்று, கால தூதுவர்கள் போர்க் களத்தில் கிடந்த மாமிசக் கொழுப்பில் நடை செய்ய, பலம் மிக உள்ள நரி உணவு கிடைக்கின்றது என்று கூத்தாட, பேய்கள் ஆட, காக்கைகள் ஆட, போரில் மோதி வருகின்ற பூத கணங்கள் ஆட, ஒளியை வீசும்படி செலுத்திய கூர்மையான வேலனே, (வேலன், வேங்கை, செட்டி, விருத்தன் ஆகிய வேடங்களைக் காட்டி) ஏமாற்றி, ஒப்பற்ற மான் போன்றவளும் தினைப் புனம் காப்பதில் வல்லவளும் நாகண வாய்ப்புள் போன்றவளுமாகிய வள்ளியின் உள்ளத்தை அலைபாயச் செய்த காதலனே, குகனே, சிவபெருமானோடு ரத்தின கிரி* எனப்படும் வாட்போக்கித் தலத்தில் வாழும் முருகனே, என்றும் இளையவனே, தேவர்கள் பெருமாளே.
* ரத்னகிரி (மணிக்கிரி) - தேவாரம் பெற்ற திருத்தலம். இதற்கு 'வாட்போக்கி' என்றும் பெயர் உண்டு.திருச்சி மாவட்டம் குளித்தலை ரயில் நிலையத்தில் இருந்து 8 மைல் தொலைவில் இருக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 566 - இரத்னகிரி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, தத்ததன, தானனன, தீதிமித, வருகின்ற, எனப்படும், தேடிச், என்றும், உடல், சென்று, தேவர்கள், பெருமாளே, தித்திமித, கொலை, தீமிதத, தாளம், பலவும், கடலில்