பாடல் 565 - இரத்னகிரி - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான |
கயலைச் சருவிப் பிணையொத் தலர்பொற் கமலத் தியல்மைக் ...... கணினாலே கடிமொய்ப் புயலைக் கருதிக் கறுவிக் கதிர்விட் டெழுமைக் ...... குழலாலே நயபொற் கலசத் தினைவெற் பினைமிக் குளநற் பெருசெப் ...... பிணையாலே நலமற் றறிவற் றுணர்வற் றனனற் கதியெப் படிபெற் ...... றிடுவேனோ புயலுற் றியல்மைக் கடலிற் புகுகொக் கறமுற் சரமுய்த் ...... தமிழ்வோடும் பொருதிட் டமரர்க் குறுதுக் கமும்விட் டொழியப் புகழ்பெற் ...... றிடுவோனே செயசித் திரமுத் தமிழுற் பவநற் செபமுற் பொருளுற் ...... றருள்வாழ்வே சிவதைப் பதிரத் தினவெற் பதனிற் றிகழ்மெய்க் குமரப் ...... பெருமாளே. |
கயல் மீனோடு போர் செய்து, பெண் மானை ஒத்து, மலராகிய அழகிய தாமரையின் தன்மையைக் கொண்ட, மை தீட்டிய கண்களாலும், விளக்கமுற்று நெருங்கிய கருமேகத்தை நோக்கிக் கோபித்து, ஒளி வீசி எழுந்துத் திகழும் கரிய கூந்தலாலும், இனிமையும் அழகும் கொண்ட குடத்தையும், மலையையும் விட மேம்பாடு உள்ள நல்ல பெரிய இரு மார்பகங்களாலும், இன்பம், அழகு முதலிய நலன்களை இழந்து, அறிவு போய், உணர்வையும் இழந்த நான் நற் கதியை எவ்வாறு பெறுவேன்? மேகம் படியும் தன்மை வாய்ந்த கருங் கடலில் புகுந்து நின்ற மாமரமாகிய சூரன் வேரோடு சாயும்படி முன்பு வேலாயுதத்தை விட்டு அடக்கி ஆழ்த்திய ஆற்றலோடு, சண்டை செய்து தேவர்களுக்கு இருந்த துன்பத்தை விட்டு நீங்கச் செய்த புகழைப் பெற்றவனே, வெற்றியைத் தரும் அழகிய முத்தமிழ்ப் பாக்கள் மூலமாக வெளித்தோன்றும் சிறந்த தேவார மந்திரங்களையும், மேலான பொருளையும் அனுபவித்து (சம்பந்தராக வந்து) உலகுக்கு அருளிய செல்வமே, சிவாயம்* எனப்படும் ரத்தின கிரியில் விளங்கும் உண்மை வடிவாகிய குமரப் பெருமாளே.
* ரத்னாசலம், சிவாயம், மணிக்கிரி என்பன வாட்போக்கித் தலமாகிய ரத்தினகிரியின் பிற பெயர்கள். தேவாரம் பெற்ற திருத்தலம். திருச்சி மாவட்டம் குளித்தலை ரயில் நிலையத்தில் இருந்து 8 மைல் தொலைவில் இருக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 565 - இரத்னகிரி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனத், கொண்ட, விட்டு, அழகிய, செய்து, குமரப், பெருமாளே