பாடல் 55 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - .....;தாளம்
- .....
தந்தனா தந்தனத் தந்தனா தந்தனத் தந்தனா தந்தனத் ...... தனதான |
சங்குபோல் மென்கழுத் தந்தவாய் தந்தபற் சந்தமோ கின்பமுத் ...... தெனவானிற் றங்குகார் பைங்குழற் கொங்கைநீள் தண்பொருப் பென்றுதாழ் வொன்றறுத் ...... துலகோரைத் துங்கவேள் செங்கைபொற் கொண்டல்நீ யென்றுசொற் கொண்டுதாய் நின்றுரைத் ...... துழலாதே துன்பநோய் சிந்தநற் கந்தவே ளென்றுனைத் தொண்டினா லொன்றுரைக் ...... கருள்வாயே வெங்கண்வ்யா ளங்கொதித் தெங்கும்வே மென்றெடுத் துண்டுமே லண்டருக் ...... கமுதாக விண்டநா தன்திருக் கொண்டல்பா கன்செருக் குண்டுபே ரம்பலத் ...... தினிலாடி செங்கண்மால் பங்கயக் கண்பெறா தந்தரத் தின்கணா டுந்திறற் ...... கதிராழித் திங்கள்வா ழுஞ்சடைத் தம்பிரா னன்புறச் செந்தில்வாழ் செந்தமிழ்ப் ...... பெருமாளே. |
சங்கைப் போன்ற மெல்லிய கழுத்து, அந்த வாயிலுள்ள பற்கள் மோக இன்பத்தைத் தரும் முத்துக்கள் என்றும், ஆகாயத்தில் தங்கியுள்ள கார்மேகம் கருங்குழல் என்றும், மார்பகங்கள் நீண்ட குளிர்ந்த மலை என்றும் (மாதர்களைப் பற்றி உவமை கூறி) வெட்கம் என்பதையே விட்டு சொல்லித் திரியாமலும், உலகில் பொருள் உள்ளவர்களிடம் போய் சிறந்த வேந்தன் நீ என்றும், செங்கைக் கொடைத் திறத்தில் அழகிய மேகத்தை ஒப்பாய் நீ என்றும் புகழ்ந்து பேசி, அவர்களிடம் தாவி வேகத்துடன் போய்த் திரியாமலும், (எனது) துன்ப நோய் ஒழிய, நல்ல கந்த வேளே என்று உன்னை, தொண்டு செய்யும் வழியில் நின்று பொருந்தி துதி ஒன்றைக் கூற அருள்வாயாக கொடிய கண்களை உடைய (வாசுகி என்ற) பாம்பு மனம் கொதித்து (விஷத்தை உமிழ), அது எங்கும் வேகச் செய்யும் என்று கருதி அந்த விஷத்தை எடுத்து அருந்தி, பின்னும் தேவர்களுக்கு ஆகும்படி அமுதத்தை வெளிவரச் செய்தவன், அழகிய மேக வண்ணனாகிய திருமாலைத் தனது பாகத்தில் கொண்டவன்*, ஆனந்தம் கொண்டு பேரம்பலமாகிய சிதம்பரத்தில் கூத்தாடுபவன், சிவந்த கண்களை உடைய திருமால் தனது தாமரைக் கண்ணால் காணக் கூடாத வகையில் வெட்ட வெளியில் ஆடும் வல்லமை பெற்றவன், ஒளி பொருந்திய கடலில் பிறந்த சந்திரன் பொருந்தி வாழ்கின்ற சடையை உடைய தலைவன் ஆகிய சிவபெருமான், பேரன்பு கொள்ளும்படியாக திருச்செந்தூரில் வாழ்கின்ற செந்தமிழ்ப் பெருமாளே.
* சிவபெருமான் திருமாலைப் பாகமாகக் கொண்டவர் என்பது கருத்து.சங்கரன்கோவில் என்ற தலத்தில் 'சங்கரநாராயணன்' என்ற பெயர் பெற்றவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 55 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்றும், தந்தனா, உடைய, தந்தனத், விஷத்தை, தனது, சிவபெருமான், வாழ்கின்ற, கண்களை, அழகிய, பெருமாளே, செந்தமிழ்ப், அந்த, திரியாமலும், செய்யும், பொருந்தி