பாடல் 545 - பேறைநகர் - திருப்புகழ்

ராகம் - ...; தாளம்
-
தானதன தான தந்த தானதன தான தந்த தானதன தான தந்த ...... தனதான |
நீலமயில் சேரு மந்தி மாலை நிக ராகி யந்த காரமிக வேநி றைந்த ...... குழலாலும் நீடுமதி ரேக இன்ப மாகியச லாப சந்த்ர னேர்தருமு கார விந்த ...... மதனாலும் ஆலினிக ரான வுந்தி யாலுமட வார்கள் தங்கள் ஆசைவலை வீசு கெண்டை ...... விழியாலும் ஆடியக டாமி சைந்த வார்முலைக ளாலு மந்த னாகிமயல் நானு ழன்று ...... திரிவேனோ கோலவுரு வாயெ ழுந்து பாரதனை யேயி டந்து கூவிடு முராரி விண்டு ...... திருமார்பன் கூடமுறை நீடு செம்பொன் மாமதலை யூடெ ழுந்த கோபவரி நார சிங்கன் ...... மருகோனே பீலிமயில் மீது றைந்து சூரர்தமை யேசெ யங்கொள் பேர்பெரிய வேல்கொள் செங்கை ...... முருகோனே பேடைமட ஓதி மங்கள் கூடிவிளை யாடு கின்ற பேறைநகர் வாழ வந்த ...... பெருமாளே. |
நீல நிறமான மயில்கள் சேர்ந்து விளையாடும் மாலைப் பொழுதுக்கு ஒப்பதாகி, பேரிருள் மிக்கு நிறைந்துள்ள கூந்தலாலும், நீடித்துள்ள மிக்க இன்பம் தருவதாகி இன்பமாய்ப் பேசத் தக்க, சந்திரனுக்கு ஒப்பான முகத் தாமரையாலும், ஆலிலைக்கு ஒப்பான வயிற்றாலும், பெண்களின் மோக வலையை வீசுகின்ற கெண்டை மீன் போன்ற கண்களாலும், கடைந்து எடுத்த குடம் போன்ற, கச்சு அணிந்த மார்பகங்களினாலும் கண்கள் மங்கி அறிவும் மயங்கியவனாகி, காம மயக்கத்தில் நானும் கலங்கித் திரிவேனோ? பன்றியின்* உருவோடு அவதரித்து, மண்ணைத் தோண்டிச் சென்று பூமியை மீட்டு வந்தவனும், முரன் என்னும் அசுரனுக்குப் பகைவனுமான முராரியாகிய திருமால், லக்ஷ்மியை மார்பில் வைத்தவன், கூடத்தில் இருந்த பெரிய செம் பொன்னாலாகிய உயர்ந்த தூணில் தோன்றி எழுந்த, கோபம் நிறைந்த, நரசிங்க மூர்த்தியின் மருகனே, தோகை நிறைந்த மயில் மீது வீற்றிருந்து, சூரர்களை வென்ற, புகழ் மிக்க வேலாயுதத்தை ஏந்திய திருக்கையை உடைய முருகனே, இளம் பெண் அன்னங்கள் ஒன்று சேர்ந்து விளையாடும் பேறை நகர்** என்னும் ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே.
* இரணியாக்ஷன் என்னும் அசுரன் பூமியைப் பாய் போலச் சுருட்டி எடுத்துக் கொண்டு பாதளத்தில் ஒளிந்து கொண்டான். திருமால் வராக அவதாரம் கொண்டு அவனை அழித்துப் பூமியை மேலே கொணர்ந்தார்.
** பேறைநகர் செங்கல்பட்டு மாவட்டத்தில் தொழுப்பேடு என்ற தலத்தின் அருகே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 545 - பேறைநகர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, என்னும், தந்த, பூமியை, ஒப்பான, திருமால், கொண்டு, நிறைந்த, மிக்க, சேர்ந்து, திரிவேனோ, கெண்டை, மீது, பேறைநகர், பெருமாளே, விளையாடும்