பாடல் 541 - திருக்கழுக்குன்றம் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனத்த தத்தம் தத்தன தானன தனத்த தத்தம் தத்தன தானன தனத்த தத்தம் தத்தன தானன ...... தனதான |
அகத்தி னைக்கொண் டிப்புவி மேல்சில தினத்து மற்றொன் றுற்றறி யாதுபின் அவத்துள் வைக்குஞ் சித்தச னாரடு ...... கணையாலே அசுத்த மைக்கண் கொட்புறு பாவையர் நகைத்து ரைக்கும் பொய்க்கடல் மூழ்கியெ அலக்க ணிற்சென் றுத்தடு மாறியெ ...... சிலநாள்போய் இகத்தை மெய்க்கொண் டிப்புவி பாலர்பொன் மயக்கி லுற்றம் பற்றைவி டாதுட லிளைப்பி ரைப்பும் பித்தமு மாய்நரை ...... முதிர்வாயே எமக்க யிற்றின் சிக்கினி லாமுனுன் மலர்ப்ப தத்தின் பத்திவி டாமன திருக்கு நற்றொண் டர்க்கிணை யாகவு ...... னருள்தாராய் புகழ்ச்சி லைக்கந் தர்ப்பனு மேபொடி படச்சி ரித்தண் முப்புர நீறுசெய் புகைக்க னற்கண் பெற்றவர் காதலி ...... யருள்பாலா புவிக்குள் யுத்தம் புத்திரர் சேயர சனைத்து முற்றுஞ் செற்றிட வேபகை புகட்டி வைக்குஞ் சக்கிர பாணிதன் ...... மருகோனே திகழ்க்க டப்பம் புட்பம தார்புய மறைத்து ருக்கொண் டற்புத மாகிய தினைப்பு னத்தின் புற்றுறை பாவையை ...... யணைசீலா செகத்தி லுச்சம் பெற்றம ராவதி யதற்கு மொப்பென் றுற்றழ கேசெறி திருக்க ழுக்குன் றத்தினில் மேவிய ...... பெருமாளே. |
இல்லறத்தைத் தழுவி இந்தப் பூமியில் சில நாட்கள் வேறு ஒரு நல்ல மார்க்கத்தையும் தெரிந்து கொள்ளாமல், பின்பு பயனில்லாத (கேடு தரத்தக்க) மன்மதன் செலுத்தி வருத்தும் அம்பால், அசுத்தமானதும் மை பூசியதுமான கண்களைச் சுழற்றும் பெண்கள் சிரித்துப் பேசும் பொய் என்னும் கடலில் முழுகி, துக்கத்தில் பட்டு நிலை தடுமாறி இங்ஙனம் சில நாட்கள் போக, இம்மை வாழ்வை மெய் என்று எண்ணி, இந்தப் பூமி, குழந்தைகள், பொருள் ஆகிய மாயையில் அகப்பட்டு, அந்த ஆசையை விடாமல் உடலில் சோர்வு, மூச்சு வாங்குதல், பித்தம் முதலிய நோய்கள் மேலிட, தலை மயிர் நரைத்து கிழவனாகி, நமனுடைய பாசக் கயிற்றில் சிக்குண்டு நான் நிற்பதற்கு முன்னதாக, உன்னுடைய மலர் போன்ற திருவடிகளில் பக்தியை விடாதுள்ள மனதைப் பெற்ற நல்ல அடியார்களுக்கு நானும் சமமாகும்படி உன்னுடைய திருவருளைத் தந்தருளுக. யாவரும் புகழும் (கரும்பு) வில்லை ஏந்திய மன்மதனும் எரிந்து போகவும் சிரித்து, தம்மை அணுகி வந்த திரிபுரத்தையும் சாம்பலாக்கிய புகை நெருப்பைக் கொண்ட நெற்றிக்கண்ணை உடையவரான சிவபெருமானுடய காதலியாகிய பார்வதி பெற்றருளின மகனே. பூமியில் போர் வரவும் (திருதராஷ்டிரனின்) பிள்ளைகள், அவர்களின் குழந்தைகள், இதர அரசர்கள் யாவரும் முழுப் பகையாகவும், (மகாபாரதப்) போரைத் துவக்கி வைத்த, சக்ராயுதத்தைக் கையில் ஏந்திய, திருமாலின் மருகனே, விளங்கும் கடப்ப மலர் மாலை நிறைந்த தோள்களை மறைத்து வேறு கோலத்தைப் பூண்டு, அற்புதம் நிறைந்த வள்ளி மலையில் உள்ள தினைப் புனத்தில் இன்பமாக வாழ்ந்த வள்ளியைத் தழுவும் குணவானே, பூமியில் மேலான சிறப்பைப் பெற்று, தேவேந்திரன் தலைநகராகிய அமராவதிக்கு ஒப்பாகும் என்று விளங்கும்படி அழகு நிறைந்த திருக்கழுக் குன்றத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே.
* திருக்கழுக்குன்றத்தின் தலவிருட்சம் வாழையாதலால் இதற்கு கதலிவனம் என்றும் பெயர். இத்தலம் செங்கற்பட்டு ரயில் நிலையத்துக்கு தென்கிழக்கில் 9 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 541 - திருக்கழுக்குன்றம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்த, நிறைந்த, தானன, பூமியில், தத்தன, தத்தம், உன்னுடைய, குழந்தைகள், யாவரும், ஏந்திய, நல்ல, மலர், வேறு, மறைத்து, வைக்குஞ், பெருமாளே, இந்தப், நாட்கள், டிப்புவி