பாடல் 540 - வள்ளிமலை - திருப்புகழ்

ராகம் - ...; தாளம்
-
தனதன தந்தன தந்த தந்தன தனதன தந்தன தந்த தந்தன தனதன தந்தன தந்த தந்தன ...... தனதான |
வரைவில்பொய் மங்கையர் தங்க ளஞ்சன விழியையு கந்துமு கந்து கொண்டடி வருடிநி தம்பம ளைந்து தெந்தென ...... அளிகாடை மயில்குயி லன்றிலெ னும்பு ளின்பல குரல்செய்தி ருந்துபி னுந்தி யென்கிற மடுவில்வி ழுந்துகி டந்து செந்தழல் ...... மெழுகாகி உருகியு கந்திதழ் தின்று மென்றுகை யடியின கங்கள்வ ரைந்து குங்கும உபயத னங்கள்த தும்ப அன்புட ...... னணையாமஞ் சுலவிய கொண்டைகு லைந்த லைந்தெழ அமளியில் மின்சொல்ம ருங்கி லங்கிட உணர்வழி யின்பம றந்து நின்றனை ...... நினைவேனோ விரவி நெருங்குகு ரங்கி னங்கொடு மொகுமொகெ னுங்கட லுங்க டந்துறு விசைகொடி லங்கைபு குந்த ருந்தவர் ...... களிகூர வெயில்நில வும்பரு மிம்ப ரும்படி ஜெயஜெய வென்றுவி டுங்கொ டுங்கணை விறல்நிரு தன்தலை சிந்தி னன்திரு ...... மருகோனே அருகர்க ணங்கள்பி ணங்கி டும்படி மதுரையில் வெண்பொடி யும்ப ரந்திட அரகர சங்கர வென்று வென்றருள் ...... புகழ்வேலா அறம்வளர் சுந்தரி மைந்த தண்டலை வயல்கள்பொ ருந்திய சந்த வண்கரை யரிவைவி லங்கலில் வந்து கந்தருள் ...... பெருமாளே. |
(பொருள் கொடுப்பின் வேண்டியவர், வேண்டாதோர் என்னும்) அளவு இல்லாமல் அன்பு காட்டும் பொய்யே பேசும் பொது மகளிர்களுடைய மை தீட்டிய கண்களில் மகிழ்ந்தும், அந்த இன்பத்தைப் பருகியும், அவர்களுடைய காலைப் பிடித்துத் தடவியும், புணர்ச்சி இன்பத்தை அனுபவித்தும், இவ்வாறு வண்டு, காடை, மயில், குயில், அன்றில் என்னும் பறவைகளின் பல ஒலிகளை எழுப்பி, பின்னர் கொப்பூழ் என்னும் மடுவில் விழுந்தும் கிடந்தும், நெருப்பில் இடப்பட்ட மெழுகு போல் ஆகி, உருகிக் களித்து அதர பானம் செய்தும், தின்றும், மென்று உண்டும், கையடியிலுள்ள நகங்களால் குறி இட்டும், குங்குமம் உள்ள இரண்டு மார்பகங்களும் அசைய அன்புடன் தழுவி, அழகு விளங்கும் கூந்தல் அவிழ்ந்து அலைச்சல் உற, படுக்கையில் மின்னல் என்று சொல்லத் தக்க இடை விளக்கம் தர, நல்லறிவை அழிக்கும் அந்த இன்பத்தை மறந்து உன்னை நினைக்க மாட்டேனோ? தன்னுடன் கலந்து கூடி நெருங்கி வந்த குரங்குகளின் கூட்டத்துடன் சென்று, மொகுமொகு என்று ஒலிக்கும் கடலையும் கடந்து சென்று, பொருந்திய வேகத்துடன் இலங்கையில் புகுந்து, தவப் பெரியோர்கள் மகிழ்ச்சி மிகக் கொள்ள, சூரியன், சந்திரன் முதலான தேவர்களும் இவ்வுலகோரும் பூமியில் ஜெய ஜெய என்று மகிழ்ந்து ஒலி செய்ய, செலுத்திய கொடிய அம்பால் வீரமுள்ள அசுரனாகிய ராவணனின் தலையை அறுத்துத் தள்ளிய ராமனாகிய திருமாலின் மருகனே, சமணர்களின் கூட்டங்கள் கலங்கி நிற்க, மதுரை நகரில் திருநீறு பரவ, ஹர, ஹர சங்கரா என்று போற்றப்பெற வெற்றி அடைந்து அருளிய புகழ் கொண்ட (திருஞான சம்பந்தராக வந்த) வேலனே, (காமாட்சியாக வந்து முப்பத்திரண்டு) அறங்களைக் கச்சியில் வளர்த்த அழகியாகிய பார்வதியின் மகனே, குளிர்ந்த சோலைகளும் வயல்களும் பொருந்திய, அழகிய வளப்பமுள்ள நீர்க்கரைகளும் உள்ள, வள்ளி மலையில்* வந்து மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும் பெருமாளே.
* வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராய வேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியர் அவதரித்த தலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 540 - வள்ளிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தன, தனதன, என்னும், வந்து, தந்த, பொருந்திய, சென்று, வள்ளி, வந்த, அந்த, பெருமாளே, இன்பத்தை, உள்ள