பாடல் 538 - வள்ளிமலை - திருப்புகழ்

ராகம் -
அமிர்தவர்ஷணி ; தாளம் - ஆதி - தேசாதி
தனதாத்த தய்ய தனதாத்த தய்ய தனதாத்த தய்ய ...... தனதான |
குடிவாழ்க்கை யன்னை மனையாட்டி பிள்ளை குயில்போற்ப்ர சன்ன ...... மொழியார்கள் குலம்வாய்த்த நல்ல தனம்வாய்த்த தென்ன குருவார்த்தை தன்னை ...... யுணராதே இடநாட்கள் வெய்ய நமனீட்டி தொய்ய இடர்கூட்ட இன்னல் ...... கொடுபோகி இடுகாட்டி லென்னை எரியூட்டு முன்னு னிருதாட்கள் தம்மை ...... யுணர்வேனோ வடநாட்டில் வெள்ளி மலைகாத்து புள்ளி மயில்மேற்றி கழ்ந்த ...... குமரேசா வடிவாட்டி வள்ளி அடிபோற்றி வள்ளி மலைகாத்த நல்ல ...... மணவாளா அடிநாட்கள் செய்த பிழைநீக்கி யென்னை யருள்போற்றும் வண்மை ...... தரும்வாழ்வே அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல அடியார்க்கு நல்ல ...... பெருமாளே. |
இல்லற வாழ்க்கையில் ஏற்பட்ட தாயார், மனைவி, பிள்ளைகள், குயில் போலப் பேசி எதிர்ப்படும் பெண்கள், பிறந்த குலம், கிடைத்த நல்ல செல்வம், எனக்குத் தான் கிடைத்தது என்று ஆணவம் கொண்டு, குருவின் உபதேச மொழிகளை அறியாமல், நாட்கள் வீணாகக் கழிந்திட, கொடிய யமன் இறுதியில் நெருங்கி வந்து சோர்வுறச்செய்யும் துன்பங்களைத் தர, துயரத்துடன் கொண்டுபோய் சுடுகாட்டில் (மயானத்தில்) அடியேனைச் சுட்டெரிப்பதற்கு முன்பாக, உனது இரு திருவடிகளை உணர்ந்து அறிவேனோ? வடநாட்டில் உள்ள வெள்ளியங்கிரியை (கயிலாயத்தை) (கோபுர வாசலில் அமர்ந்து) காவல் செய்து புள்ளியை உடைய மயிலின் மீது விளங்குகின்ற குமரக் கடவுளே வடிவழகியான வள்ளியின் திருவடியைப் புகழ்ந்து, வள்ளிமலையில்* அப்பிராட்டியின் சமயம் பார்த்துக் காத்திருந்த நல்ல (வேளைக்கார) மணவாளனே யான் முன்னாட்களில் செய்த குற்றங்களைப் பொறுத்து, எனக்கு நின் திருவருளைப் போற்றும் வளப்பமான குணத்தைத் தந்தருளிய என் செல்வமே நின் திருவடிகளைத் தொழுது, தாமரை மலரை நின் முடிமேல் சூட்டவல்ல அடியவர்களுக்கு நல்லவனாகத் திகழும் பெருமாளே.
* வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராய வேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது.வள்ளி தேவியர் அவதரித்த தலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 538 - வள்ளிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - நல்ல, நின், தனதாத்த, வள்ளி, தய்ய, பெருமாளே, செய்த, அடிபோற்றி, வடநாட்டில்