பாடல் 530 - வள்ளிமலை - திருப்புகழ்

ராகம் - தர்பாரி
கானடா; தாளம் - ஆதி
தய்யதன தான தய்யதன தான தய்யதன தானத் ...... தனதான |
அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு மல்லல்பட ஆசைக் ...... கடலீயும் அள்ளவினி தாகி நள்ளிரவு போலு முள்ளவினை யாரத் ...... தனமாரும் இல்லுமிளை யோரு மெல்ல அயலாக வல்லெருமை மாயச் ...... சமனாரும் எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில் உய்யவொரு நீபொற் ...... கழல்தாராய் தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர் சொல்லுமுப தேசக் ...... குருநாதா துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண வெள்ளிவன மீதுற் ...... றுறைவோனே வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ வல்லைவடி வேலைத் ...... தொடுவோனே வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு வள்ளிமண வாளப் ...... பெருமாளே. |
தாமரை இதழ் போன்ற கண்களாலும், முல்லை அரும்பை நிகர்த்த பற்களாலும், துயரத்தை அடையும்படி ஆசையைக் கடல் போலத் தருபவர்களும், அள்ளி எடுக்கலாம் போல இனிதாக அமைந்து நடு இரவு போன்று இருண்ட வினைகளை உடைய விலைமாதரும், அந்தச் செல்வம் மிகுந்த வீடும், மக்களாகிய இளைஞரும், அனைவருமே மெல்ல மெல்ல வேறாகும்படி, வலிய எருமையை வாகனமாகக் கொண்ட மாயக்கார யமனும் என்னை இகழ்ந்து, என் உயிரைக் கொள்ளை அடித்துக் கொண்டு போகும் அந்த நாளில் அடியேன் உய்யும் பொருட்டு ஒப்பற்ற உனது அழகிய திருவடியைத் தந்தருள்வாயாக. பழமையான வேதங்கள் தேடிப்பார்த்து காண முடியவில்லை என்று முறையிடுகின்ற சிவபிரானுக்கு உபதேச மொழியைச் சொல்லி அருளிய குருநாதனே, துள்ளி ஓடி விளையாடுகின்ற புள்ளிமான் வெட்கப்படும்படி அதனை இகழ்கிற வள்ளி வாழும் வள்ளிமலைக் காட்டிற்கு வலியச் சென்று வாழ்கின்றவனே, வலிமையான அசுரர்கள் மாளவும், நற்குணமுள்ள தேவர்கள் வாழவும், மிக விரைவாக கூரிய வேலைச் செலுத்தியவனே, வள்ளிக்கொடி படர்ந்திருக்கின்ற, சாரலுடன் கூடிய வள்ளிமலையில்* எழுந்தருளியுள்ள வள்ளியின் மணவாளனே, பெருமாளே.
* வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராய வேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது.வள்ளி தேவியர் அவதரித்த தலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 530 - வள்ளிமலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தய்யதன, மெல்ல, வள்ளி, பெருமாளே, நாளில், யாலு, வள்ளிமலை