பாடல் 53 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - கரஹரப்ரியா;
தாளம் - சதுஸ்ர ரூபகம் - 6 - ஏடுப்பு 3/4 இடம்
தந்தன தானான தானன தந்தன தானான தானன தந்தன தானான தானன ...... தனதான |
கொம்பனை யார்காது மோதிரு கண்களி லாமோத சீதள குங்கும பாடீர பூஷண ...... நகமேவு கொங்கையி னீராவி மேல்வளர் செங்கழு நீர்மாலை சூடிய கொண்டையி லாதார சோபையில் ...... மருளாதே உம்பர்கள் ஸ்வாமிந மோநம எம்பெரு மானேந மோநம ஒண்டொடி மோகாந மோநம ...... எனநாளும் உன்புக ழேபாடி நானினி அன்புட னாசார பூசைசெய் துய்ந்திட வீணாள்ப டாதருள் ...... புரிவாயே பம்பர மேபோல ஆடிய சங்கரி வேதாள நாயகி பங்கய சீபாத நூபுரி ...... கரசூலி பங்கமி லாநீலி மோடிப யங்கரி மாகாளி யோகினி பண்டுசு ராபான சூரனொ ...... டெதிர்போர்கண் டெம்புதல் வாவாழி வாழியெ னும்படி வீறான வேல்தர என்றுமு ளானேம நோகர ...... வயலூரா இன்சொல்வி சாகாக்ரு பாகர செந்திலில் வாழ்வாகி யேயடி யென்றனை யீடேற வாழ்வருள் ...... பெருமாளே. |
பூங்கொடி போன்ற மாதர்களின் காதுவரை நீண்டு அதை மோதும் இரண்டு கண்களிலும், வாசம் மிக்கதும், குளிர்ந்த செஞ்சாந்து, சந்தனம், நகைகள் அணிந்ததுமான மலை போன்ற மார்பகங்களிலும், நீர்த் தடாகத்தின் மேல் வளரும் செங்கழுநீர் மலர்மாலையைச் சூடிய கூந்தலிலும், உடலின் அழகிலும் மயங்காமல், தேவர்களின் ஸ்வாமியே போற்றி, போற்றி, எங்கள் பெருமானே போற்றி, போற்றி, ஒளி பொருந்திய வளையல்களை அணிந்த வள்ளியிடம் மோகம் கொண்டவனே போற்றி, போற்றி, என்று தினமும் உனது புகழையே பாடி யான் இனி அன்புடனே ஆசாரமான பூஜையைச் செய்து பிழைத்திடவும், என் வாழ்நாள் வீண் நாளாகப் போகாதபடியும் அருள் புரிவாயாக. பம்பரம் போலவே சுழன்று நடனம் ஆடும் சங்கரி, வேதாளங்களுக்கெல்லாம் (சிவ கணங்களுக்கு) தலைவி, தாமரை போன்ற திரு நிறைந்த பாதங்களில் சிலம்பை அணிந்தவள், திருக்கரத்தில் சூலத்தைத் தரித்தவள், குற்றமில்லாத கருநீல நிறத்தவள், காட்டைக் காக்கும் வன துர்க்கை, பயத்தைத் தருபவள் (தந்த பயத்தைப் போக்குபவள்) மகா காளி, யோகத்தின் தலைவியாகிய அன்னை பார்வதி, முன்பு மதுபானம் செய்திருந்த சூரனோடு நீ எதிர்த்துப் போர் செய்யவேண்டி, என் மகனே நீ வாழ்க, வாழ்க என்று ஆசி கூறும் வகையில் வெற்றியைத் தரும் வேலாயுதத்தைத் தரப்பெற்ற, என்றும் அழியாது விளங்கும் மூர்த்தியே, மனத்துக்கு இன்பம் தருபவனே, வயலூர்ப் பெருமானே, இனிய சொற்களை உடைய விசாகப் பெருமானே, கருணை நிறைந்தவனே, திருச்செந்தூரில் வீற்றிருக்கும் செல்வமாகி அடியேனை உய்விக்கும்படியாக வாழ்வை எனக்கு அருளும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 53 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - போற்றி, பெருமானே, தந்தன, மோநம, தானன, தானான, வாழ்க, பெருமாளே, சங்கரி, சூடிய