பாடல் 509 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனதன தனதன தான தாத்தன தனதன தனதன தான தாத்தன தனதன தனதன தான தாத்தன ...... தனதான |
மகரமொ டுறுகுழை யோலை காட்டியு மழைதவழ் வனைகுழல் மாலை காட்டியும் வரவர வரஇத ழூற லூட்டியும் ...... வலைவீசும் மகரவி ழிமகளிர் பாடல் வார்த்தையில் வழிவழி யொழுகுமு பாய வாழ்க்கையில் வளமையி லிளமையில் மாடை வேட்கையில் ...... மறுகாதே இகலிய பிரமக பால பாத்திர மெழில்பட இடுதிரு நீறு சேர்த்திற மிதழியை யழகிய வேணி யார்த்ததும் ...... விருதாக எழில்பட மழுவுடன் மானு மேற்றது மிசைபட இசைதரு ஆதி தோற்றமு மிவையிவை யெனவுப தேச மேற்றுவ ...... தொருநாளே ஜகதல மதிலருள் ஞான வாட்கொடு தலைபறி யமணர்ச மூக மாற்றிய தவமுனி சகமுளர் பாடு பாட்டென ...... மறைபாடி தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தாவெ னாச்சில சபதமொ டெழுவன தாள வாச்சிய ...... முடனேநீள் அகுகுகு குகுவென ஆளி வாய்ப்பல அலகைக ளடைவுட னாடு மாட்டமு மரனவ னுடனெழு காளி கூட்டமு ...... மகலாதே அரிதுயில் சயனவி யாள மூர்த்தனு மணிதிகழ் மிகுபுலி யூர்வி யாக்ரனு மரிதென முறைமுறை யாடல் காட்டிய ...... பெருமாளே. |
மகர மீன் போன்ற குண்டலங்களையும் காதோலையையும் காட்டியும், மழை போல் அலங்கரிக்கப்பட்ட கூந்தலில் உள்ள மாலையைக் காட்டியும், பழகப் பழக வாயிதழ் ஊறலைக் காட்டியும், (காம) வலையை வீசுகின்ற மகர மீன் போன்ற கண்ணை உடைய பெண்களின் பாடலிலும் பேச்சிலும் ஈடுபட்டு அந்த வழியே நடக்கின்ற தந்திரமான வாழ்க்கையிலும், அவர்களுடைய செல்வத்திலும், இளமையிலும், பொன்னைச் சேர்க்கும் ஆசையிலும் நான் சுழன்று மனம் கலங்காமல், மாறுபட்டுப் பொய் பேசிய பிரமனுடைய மண்டை ஓடாகிய பாத்திரத்தை (சிவபெருமான் ஏந்திய திறமும்), அழகு விளங்க இடப்படுகின்ற திரு நீறு அவர் உடலில் சேர்ந்துள்ள திறமும், கொன்றை மலரை அழகுள்ள சடையில் செருகிச் சேர்த்துள்ள திறமும், வெற்றிக்கு அடையாளமாக அழகு விளங்க மழுவாயுதத்தையும் மானையும் கையில் ஏற்ற தன்மையும், புகழ் விளங்க யாவராலும் சொல்லப்படும் ஆதியாகத் தோன்றிய தோற்றமும், இன்ன இன்ன காரணத்தால் என்று நீ உபதேசித்துப் புலப்படுவதும் ஆகிய ஒரு நாள் எனக்குக் கிட்டுமோ? இப்பூமியில் அருள் நிறந்த ஞானமாகிய வாளைக் கொண்டு, பறித்த தலையை உடைய சமணர்களின் கூட்டத்தை அழித்த (ஞான சம்பந்தப் பெருமானாகிய) தவ முனியே, உலகத்தில் உள்ளவர்கள் பாடுகின்ற பாட்டுக்கள் போன்ற பாடல்களில் வேத சாரங்களை (தேவாரமாக) அமைத்துப் பாடியவனே, தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தா என்று இந்த விதமான ஒலிகளைக் கொண்டு எழுகின்றனவான தாள வாத்தியங்களுடன் நெடு நேரம் அகு குகு குகு இவ்வாறான ஒலியுடன் ஆளியின் வாய் போல பல பேய்கள் முறையுடனே ஆடுகின்ற கூத்தும், சிவபெருமான் ஆடும் போது அவனுடன் எழுந்து ஆடுகின்ற காளிகளின் கூட்டமும் உன்னைச் சூழ, திருமால் உறங்கும் படுக்கையான பாம்பாகிய ஆதி சேஷமூர்த்தியாகிய பதஞ்சலியும், அழகு பொலியும் பேர் பெற்ற புலியூர் என்னும் சிதம்பரத்தில் வியாக்கிர பாதரும், நடராஜப் பெருமானின் நடனம் அருமை வாய்ந்தது என்று வியக்க விதம் விதமான கூத்துக்களை ஆடிக் காட்டிய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 509 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, கிடதரி, தரிகிட, காட்டியும், தாத்தன, திறமும், விளங்க, அழகு, இன்ன, விதமான, ஆடுகின்ற, குகு, கொண்டு, மீன், தாகு, நீறு, டாத்திரி, காட்டிய, உடைய, பெருமாளே, சிவபெருமான்