பாடல் 483 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் -...; தாளம்
-
தய்ய தானத் தானன தானன தய்ய தானத் தானன தானன தய்ய தானத் தானன தானன ...... தனதான |
கொள்ளை யாசைக் காரிகள் பாதக வல்ல மாயக் காரிகள் சூறைகள் கொள்ளும் ஆயக் காரிகள் வீணிகள் ...... விழியாலே கொல்லும் லீலைக் காரிகள் யாரையும் வெல்லு மோகக் காரிகள் சூதுசொல் கொவ்வை வாய்நிட் டூரிகள் மேல்விழு ...... மவர்போலே உள்ள நோவைத் தேயுற வாடியர் அல்லை நேரொப் பாமன தோஷிகள் உள்வி ரோதக் காரிகள் மாயையி ...... லுழல்நாயேன் உய்ய வேபொற் றோள்களும் ஆறிரு கையு நீபத் தார்முக மாறுமுன் உள்ள ஞானப் போதமு நீதர ...... வருவாயே கள்ள மாயத் தாருகன் மாமுடி துள்ள நீலத் தோகையின் மீதொரு கையின் வேல்தொட் டேவிய சேவக ...... முருகோனே கல்லி லேபொற் றாள்பட வேயது நல்ல ரூபத் தேவர கானிடை கெளவை தீரப் போகுமி ராகவன் ...... மருகோனே தெள்ளி யேமுற் றீரமு னோதிய சொல்வ ழாமற் றானொரு வானுறு செல்வி மார்பிற் பூஷண மாயணை ...... மணவாளா தெள்ளு மேனற் சூழ்புன மேவிய வள்ளி வேளைக் காரம னோகர தில்லை மேலைக் கோபுர மேவிய ...... பெருமாளே. |
பேராசை கொண்டவர்கள், பாபச் செயல்களைச் செய்ய வல்ல மாயக்காரிகள், சூறைக் காற்றைப் போல் கொள்ளை அடிக்கும் வேட்டைக்காரிகள், பயனற்றவர்கள், கண்களால் கொல்லுகின்ற லீலைகள் செய்பவர்கள், யாரையும் மயக்க வல்ல காமாந்தகிகள், சூதான சொற்களைப் பேசும் கொவ்வைக் கனி போன்ற வாயை உடைய பொல்லாதவர்கள், மேலே விழுபவர் போல வெளியன்பு பாராட்டி, மனத்தை நோவச் செய்து உறவாடுபவர்கள், இருட்டுக்கு ஒப்பான மனக் குற்றம் உடையவர்கள், பகைமை எண்ணம் கொண்டவர்கள், அத்தகைய பொது மாதர்களின் மாயைச் சூழலில் சுழல்கின்ற நாயை ஒத்த அடியேன் பிழைக்கும்படி, அழகிய தோள்களும், பன்னிரண்டு கைகளும், கடப்ப மாலையும், ஆறு முகங்களும் முன்னதாக நான் தியானிக்க ஞான அறிவை நீ எனக்குத் தருவதற்கு வந்தருளுக. கள்ளத்தனமும் மாயையும் நிரம்பிய தாருகாசுரனுடைய பெரிய தலை அற்று விழ, நீல மயில் மேல் விளங்கி, ஒப்பற்ற கை வேலைச் செலுத்தி அனுப்பிய வல்லமை வாய்ந்த முருகனே, கல்லின் மீது அழகிய திருவடி பட்டவுடனே அது நல்ல பெண் உருவாய் வர, காட்டில் (அகலிகைக்கு உற்ற) துன்பம் நீங்கும்படி சென்ற ராமனுடைய மருகனே, ஆய்ந்து, இன்பமுற்று, முன்பு செய்த வாக்குறுதி* தப்பாமல், விண்ணுலகில் வளர்ந்த செல்வியாகிய தேவயானையை தன் மார்பில் ஆபரணம் போல் அணைந்த மணவாளனே, நன்கு விளங்கிய தினைப் புனத்தில் இருந்த வள்ளிக்கு காவற்காரனாய் விளங்கும் மனத்துக்கு இனியோனே, தில்லை மேற்குக் கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* முற்பிறப்பில் திருமாலின் மகளாகத் தோன்றிய அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற கன்னிகைகளுக்கு மறுபிறவியில் அவர்கள் முறையே தேவயானை, வள்ளி என்று பிறந்து முருகனை மணந்து கொள்வர் என்று திருமால் வாக்களித்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 483 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, காரிகள், தய்ய, தானத், வல்ல, பெருமாளே, கொண்டவர்கள், அழகிய, போல், தில்லை, உள்ள, கொள்ளை, யாரையும், நல்ல, மேவிய, வள்ளி