பாடல் 476 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய ...... தனதான |
அத்த னன்னை யில்லம் வைத்த சொன்னம் வெள்ளி அத்தை நண்ணு செல்வ ...... ருடனாகி அத்து பண்ணு கல்வி சுற்ற மென்னு மல்ல லற்று நின்னை வல்ல ...... படிபாடி முத்த னென்ன வல்லை யத்த னென்ன வள்ளி முத்த னென்ன வுள்ள ...... முணராதே முட்ட வெண்மை யுள்ள பட்ட னெண்மை கொள்ளு முட்ட னிங்ங னைவ ...... தொழியாதோ தித்தி மன்னு தில்லை நிர்த்தர் கண்ணி னுள்ளு தித்து மன்னு பிள்ளை ...... முருகோனே சித்தி மன்னு செய்ய சத்தி துன்னு கைய சித்ர வண்ண வல்லி ...... யலர்சூடும் பத்த ருண்மை சொல்லு ளுற்ற செம்மல் வெள்ளி பத்தர் கன்னி புல்லு ...... மணிமார்பா பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள பச்சை மஞ்ஞை வல்ல ...... பெருமாளே. |
தந்தை, தாய், வீடு, வைத்துள்ள பொன், வெள்ளி, தந்தையின் சகோதரி, பொருந்திய பிள்ளைகள் இவர்களுடன் கூடியவராய், செய்தொழிலால் (போதாத) வருமானம், கற்று (முடிவுறாத) கல்வி, (அல்லல் தரும்) உறவினர் என்று சொல்லப்படும் துன்பங்கள் நீங்கி, உன்னை இயன்ற வகையினால் பாடி, முக்தி தர வல்லவன் (நீ ஒருவனே) என்றும், திருவலம் என்னும் தலத்தின் பெருமான் என்றும், வள்ளியின் காதலன் என்றும் என்னுடைய உள்ளத்தில் நான் உணராமல், முழுமையான அறியாமை நிறைந்த புலவனும் எளிமை கொண்ட மூடனுமாகிய நான் இப்படி வருந்தி இரங்குவது நீங்காதோ? தித்தி என்னும் தாள ஜதி ஒலிக்கும் தில்லையில் நடனமாடும் நடராஜரின் கண்களினின்றும் தோன்றி நிலை பெற்றுள்ள மகனாகிய முருகனே, பல சித்திகளுக்கு இடமாய் விளங்கும் வேலாயுதம் விளங்கும் திருக்கரத்தோனே, அழகிய திருவுருவம் வாய்ந்த வள்ளி மலர் சூட்டிப் பணியும், பக்தர்களுடைய மெய் பொருந்திய திருவாக்கில் விளங்கும், செம்மலே, வெள்ளை யானையை (ஐராவதத்தை) உடைய இந்திரனின் பெண் (தேவயானை) தழுவும் அழகிய மார்பனே, பச்சை நிறமான வன்னி, அல்லி, வெட்சி இவைகளைத் தலையில் அணிந்தவனே, பச்சை நிறமுடைய மயிலைச் செலுத்த வல்ல பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 476 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பச்சை, தத்த, என்றும், மன்னு, விளங்கும், னென்ன, வல்ல, தய்ய, தன்ன, வெள்ளி, பொருந்திய, அழகிய, பெருமாளே, நான், என்னும், யுள்ள, முத்த, கல்வி, வள்ளி, முட்ட, தித்தி, வன்னி