பாடல் 465 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த தனனந் தனத்த தந்த ...... தனதான |
பருவம் பணைத்தி ரண்டு கரிகொம் பெனத்தி ரண்டு பவளம் பதித்த செம்பொ ...... னிறமார்பிற் படருங் கனத்த கொங்கை மினல்கொந் தளித்து சிந்த பலவிஞ் சையைப்பு லம்பி ...... யழகான புருவஞ் சுழற்றி யிந்த்ர தநுவந் துதித்த தென்று புளகஞ் செலுத்தி ரண்டு ...... கயல்மேவும் பொறிகண் சுழற்றி ரம்ப பரிசம் பயிற்றி மந்த்ர பொடிகொண் டழிக்கும் வஞ்ச ...... ருறவாமோ உருவந் தரித்து கந்து கரமும் பிடித்து வந்து உறவும் பிடித்த ணங்கை ...... வனமீதே ஒளிர்கொம் பினைச்ச வுந்த ரியவும் பலைக்கொ ணர்ந்து ஒளிர்வஞ் சியைப்பு ணர்ந்த ...... மணிமார்பா செருவெங் களத்தில் வந்த அவுணன் தெறித்து மங்க சிவமஞ் செழுத்தை முந்த ...... விடுவோனே தினமுங் களித்து செம்பொ னுலகந் துதித்தி றைஞ்சு திருவம் பலத்த மர்ந்த ...... பெருமாளே. |
இளமையான, பருத்த, இரு யானைத் தந்தங்கள் என்று சொல்லும்படி திரட்சியுற்று, பவளம் பதித்தது போன்ற செவ்விய பொன்னிறமான மார்பில் பரந்துள்ள கனம் கொண்ட மார்பகங்கள் மின்னல் மின்னி எழுந்தது போல ஒளி வீச, பல மாய வித்தைப் பேச்சுக்களைப் பலமாகப் பேசி, தமது அழகான புருவங்களைச் சுழற்றி, வானவில் வந்து தோன்றியது போலப் புளகம் தருகின்ற இரண்டு கயல் மீன் போல் உள்ள உறுப்பாகிய கண்களைச் சுழற்றி, நிரம்பவும் தொட்டுப் பயின்று, சொக்குப் பொடி கொண்டு அழிக்கின்ற வஞ்சகர்களாகிய பொது மகளிருடைய உறவு நல்லதாகுமோ? மாறுவேடம் பூண்டு, ஆசையுடன் (வளைச் செட்டியாய் வள்ளியின்) கைகளைப் பற்றி மகிழ்ந்து, அவளது உறவையும் கொண்டு, வள்ளிமலைக் காட்டில் விளங்கும் கொம்பினை உடைய அழகிய (கணபதியாகிய) யானையை வரவழைத்து, விளங்கும் வஞ்சிக்கொடி போன்ற வள்ளியைக் கலந்த அழகிய மார்பனே, போர் நடந்த கொடிய போர்க்களத்தில் வந்த சூரன் பிளவுபட்டு அழிய (நமசிவாய என்ற) பஞ்சாக்ஷரத்தின் ஆற்றலைக் கொண்ட வேலை வேகமாகச் செலுத்தியவனே, நாள்தோறும் மகிழ்ச்சியுடன் செவ்விய பொன்னுலகத்தினரான தேவர்கள் துதித்து வணங்கும் திரு அம்பலத்தில் (சிதம்பரத்தில்) வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 465 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - சுழற்றி, தனனந், ரண்டு, தந்த, தனத்த, கொண்ட, கொண்டு, அழகிய, செவ்விய, விளங்கும், வந்து, பவளம், செம்பொ, வந்த, பெருமாளே