பாடல் 459 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் -...; தாளம்
-
தனத்தத் தந்தன தானன தானன தனத்தத் தந்தன தானன தானன தனத்தத் தந்தன தானன தானன ...... தனதான |
சிரித்துச் சங்கொளி யாமின லாமென வுருக்கிக் கொங்கையி னாலுற மேல்விழு செணத்திற் சம்பள மேபறி காரிகள் ...... சிலபேரைச் சிமிட்டிக் கண்களி னாலுற வேமயல் புகட்டிச் செந்துகி லால்வெளி யாயிடை திருத்திப் பண்குழ லேய்முகி லோவிய ...... மயில்போலே அருக்கிப் பண்புற வேகலை யால்முலை மறைத்துச் செந்துவர் வாயமு தூறல்க ளளித்துப் பொன்குயி லாமென வேகுரல் ...... மிடறோதை அசைத்துக் கொந்தள வோலைக ளார்பணி மினுக்கிச் சந்தன வாசனை சேறுட னமைத்துப் பஞ்சணை மீதணை மாதர்க ...... ளுறவாமோ இரைத்துப் பண்டம ராவதி வானவ ரொளித்துக் கந்தசு வாமிப ராபர மெனப்பட் டெண்கிரி ஏழ்கடல் தூள்பட ...... அசுரார்கள் இறக்கச் சிங்கம தேர்பரி யானையொ டுறுப்பிற் செங்கழு கோரிகள் கூளியொ டிரத்தச் சங்கம தாடிட வேல்விடு ...... மயில்வீரா சிரித்திட் டம்புர மேமத னாருட லெரித்துக் கண்டக பாலியர் பாலுறை திகழ்ப்பொற் சுந்தரி யாள்சிவ காமிநல் ...... கியசேயே திருச்சித் தந்தனி லேகுற மானதை யிருத்திக் கண்களி கூர்திக ழாடக திருச்சிற் றம்பல மேவியு லாவிய ...... பெருமாளே. |
சிரித்து, (பற்களின் ஒளியை) சங்கின் ஒளி எனவும், மின்னலின் ஒளி எனவும் சொல்லும்படி வெளிக் காட்டி, (அதனால் காண்போருடைய மனத்தை) உருக்கி மார்பகங்களைக் கொண்டு பொருந்த, மேலே விழுகின்ற அந்த நேரத்தில் பொருளைப் பறிப்பவர்கள். சில பேர்வழிகளை கண்களால் சிமிட்டி, அழுத்தமாகக் காமத்தை ஊட்டி, செவ்விய ஆடையால் வெளித் தோன்றவே (பகிரங்கமாக) இடையைச் சீர்படுத்தி, இசைப் பாட்டுக்களைக் குழல் போல இனிமை பொருந்தப் பாடி, மேகத்தைக் கண்ட அழகிய மயிலைப் போல தமது நடன அருமையைக் காட்டி, ஒழுங்காக ஆடையால் மார்பை மறைப்பது போல ஜாலம் காட்டி, செவ்விய பவழம் போன்ற வாயிதழின் அமுதம் போன்ற நீரூற்றைக் குடிக்கச் செய்து, அழகிய குயில் என்னும்படி குரல் எழக் கண்டத்தில் ஓசையை அசையச் செய்து, காதோலைகளையும் நிறைந்து, அணி கலன்களையும் மினுக்கி ஒளி பெறச் செய்து, சந்தன நறு மணக் கலவையுடன் அலங்கரித்து, பஞ்சு மெத்தையின் மீது சேர்கின்ற பொது மகளிரின் உறவு எனக்குத் தகுமோ? பெரும் இரைச்சலுடன் முன்பு பொன்னுலகத்தில் இருந்த தேவர்கள் (மேரு மலையில்) ஒளித்திருந்து, கந்த சுவாமியே, மேலாம் பொருளே என்று முறையிட, அஷ்ட திக்குகளிலும் உள்ள மலைகளும் பொடிபடவும், ஏழு கடல்களும் தூள்படவும், அசுரர்கள் இறந்துபடவும், சிங்கங்கள் பூட்டப்பட்ட தேர்கள், குதிரைகளும், யானைகளும் போர்க்களத்தில் உறுப்புக்கள் சிதறுண்டு வீழ, செந்நிறக் கழுகுகள், நரிகள், பேய்களோடு ரத்த வெள்ளத்தில் விளையாட வேலாயுதத்தைச் செலுத்திய மயில் வீரனே, சிரித்து அழகிய திரி புரத்தையும் மன்மதனுடைய உடலையும் எரி செய்த, கபாலத்தை ஏந்தும் சிவபெருமானுடைய பக்கத்தில் இருக்கின்ற பொலிவு நிறைந்த அழகு மிக்க சிவகாமி பெற்ற செல்வக் குழந்தையே, உனது அழகிய உள்ளத்தில் குறப் பெண்ணாகிய வள்ளியை இருத்தி கண்ணால் மகிழ்ச்சி அடைந்து, புகழ் மிக்க பொன்கூரை வேய்ந்த பொன்னம்பலத்தே விரும்பி உலவும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 459 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, அழகிய, தனத்தத், காட்டி, செய்து, தந்தன, செவ்விய, ஆடையால், மிக்க, பெருமாளே, னாலுற, லாமென, கண்களி, சந்தன, சிரித்து, எனவும்