பாடல் 451 - சிதம்பரம் - திருப்புகழ்
ராகம் - ஆரபி ;
தாளம் - அங்கதாளம் - 9
தகதகிட-2 1/2, தகிட-1 1/2
தகதிமி-2, தகதிமிதக-3
தகதகிட-2 1/2, தகிட-1 1/2
தகதிமி-2, தகதிமிதக-3
தனதனன தனன தந்தத் ...... தனதானா தனதனன தனன தந்தத் ...... தனதானா |
இருவினையின் மதிம யங்கித் ...... திரியாதே எழுநரகி லுழலு நெஞ்சுற் ...... றலையாதே பரமகுரு அருள்நி னைந்திட் ...... டுணர்வாலே பரவுதரி சனையை யென்றெற் ...... கருள்வாயே தெரிதமிழை யுதவு சங்கப் ...... புலவோனே சிவனருளு முருக செம்பொற் ...... கழலோனே கருணைநெறி புரியு மன்பர்க் ...... கெளியோனே கனகசபை மருவு கந்தப் பெருமாளே. |
நல்வினை, தீவினை என்ற இரண்டு வினைகளினால் என்னறிவு மயக்கமடைந்து அலைந்து திரியாமல், ஏழு நரகங்களிலும் கலங்கக்கூடிய நெஞ்சத்தைப் படைத்து நான் அலையாமல், சிறந்த குருவாகிய உன் அருளை நினைவில் வைத்து, ஞானத் தெளிவு பெற்று, போற்றுதற்குரிய உன் தரிசனக் காட்சியை என்றைக்கு எனக்கு அருளப்போகிறாய்? யாவரும் தெரிந்து மகிழும்படி தமிழை ஆராய்ந்து உதவிய சங்கப் புலவனாக* வந்தவனே, சிவபெருமான் பெற்றருளிய முருகனே, செம்பொன்னாலான வீரக் கழலை அணிந்தவனே, அருள் நெறியை அனுஷ்டிக்கும் உன் அன்பர்க்கு எளிமையானவனே, கனகசபையில்** வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.
* உக்கிரபாண்டியனாக முருகன் மதுரையில் அவதரித்து, சங்கப் புலவர்களுடன் தமிழை ஆராய்ந்து உதவிய செய்தி இங்கு குறிப்பிடப்படுகிறது.
** பஞ்ச சபைகளில் ஒன்று கனகசபை (பொன்னம்பலம்) - சிதம்பரம்.மற்ற சபைகள்: ரத்னசபை - திருவாலங்காடு, ரஜதசபை (வெள்ளியம்பலம்) - மதுரை, தாமிரசபை - திருநெல்வேலி, சித்திரசபை - திருக்குற்றாலம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 451 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - சங்கப், தமிழை, ஆராய்ந்து, உதவிய, பெருமாளே, கனகசபை, தந்தத், தனதானா, தனதனன, கந்தப்