பாடல் 452 - சிதம்பரம் - திருப்புகழ்

ராகம் - வஸந்தா ;
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தானன தந்தத் தனன தனதன தானன தந்தத் தனன தனதன தானன தந்தத் ...... தனதான |
குகனெ குருபர னேயென நெஞ்சிற் புகழ அருள்கொடு நாவினி லின்பக் குமுளி சிவவமு தூறுக வுந்திப் ...... பசியாறிக் கொடிய இருவினை மூலமும் வஞ்சக் கலிகள் பிணியிவை வேரொடு சிந்திக் குலைய நமசிவ யோமென கொஞ்சிக் ...... களிகூரப் பகலு மிரவுமி லாவெளி யின்புக் குறுகி யிணையிலி நாடக செம்பொற் பரம கதியிது வாமென சிந்தித் ...... தழகாகப் பவள மனதிரு மேனியு டன்பொற் சரண அடியவ ரார்மன வம்பொற் றருண சரண்மயி லேறியு னம்பொற் ...... கழல்தாராய் தகுட தகுதகு தாதக தந்தத் திகுட திகுதிகு தீதக தொந்தத் தடுடு டுடுடுடு டாடக டிங்குட் ...... டியல்தாளம் தபலை திமிலைகள் பூரிகை பம்பைக் கரடி தமருகம் வீணைகள் பொங்கத் தடிய ழனவுக மாருத சண்டச் ...... சமரேறிக் ககன மறைபட ஆடிய செம்புட் பசிகள் தணிவுற சூரர்கள் மங்கக் கடல்க ளெறிபட நாகமு மஞ்சத் ...... தொடும்வேலா கயிலை மலைதனி லாடிய தந்தைக் குருக மனமுன நாடியெ கொஞ்சிக் கனக சபைதனில் மேவிய கந்தப் ...... பெருமாளே. |
குகனே, மேலான குரு மூர்த்தியே, என்று மனதார நான் புகழவும், உன் திருவருளின் துணைகொண்டு எனது உள் நாவில் இன்பத்தேன் குமிழி பொங்க, சிவ அமுது ஊறுவதால் வயிற்றுப் பசி ஆறி, பொல்லாத இருவினைகளின் மூலப் பகுதியும், கொடிய கேடுகள், நோய்கள் இவை அடியோடு தொலைந்து போகவும், நமசிவய ஓம் என்ற மந்திரத்தை அன்புடன் ஓதி மகிழ்ச்சி நிரம்பவும், பகலும் இரவும் இல்லாத வெளியில் இன்பத்தை அணுகி அடைந்து, ஒப்பிலாத (இறைவனுடைய) ஆனந்த நடனம் நிகழும் செவ்விய அழகிய பரம கதி இதுவேயாகும் என்று உணர்ந்து அழகிய நிலையைப் பெறவும், பவளம் போன்ற திருவுருவத்துடன் அழகிய திருவடியை (அடைந்த) அடியார்கள் பொருந்த உடன் வர, அழகிய பொலிவுள்ள, இளமை வாய்ந்த, அடைக்கலம் தர வல்ல, மயில் மீது ஏறி, உனது அழகிய பொன் அனைய திருவடியைத் தந்து அருளுக. தகுட தகுதகு தாதக தந்தத் திகுட திகுதிகு தீதக தொந்தத் தகுட தகுதகு தாதக தந்தத் திகுட திகுதிகு தீதக தொந்தத் தடுடு டுடுடுடு டாடக டிங்கு என்று ஒலிக்கும் தாளமும், தபலை என்ற மத்தள வகை, திமிலை என்ற பறைவகை, ஊது குழல், பம்பை, கரடி கத்துவது போன்ற பறைவகை, உடுக்கை, வீணைகள் இவை எல்லாம் பேரொலி எழுப்ப, கொல்லப்பட்ட பிணங்கள் சிதறி விழ, வாயு வேகத்துடன் கொடிய போர் செய்யப் புகுந்து, ஆகாயம் வந்து பந்தரிட்டது போலக் கூத்தாடும் செவ்விய பறவைகளின் (செங்கழுகுகளின்) பசிகள் அடங்கவும், சூரர்கள் அழியவும், கடல்கள் அலைபாயவும், அஷ்ட நாகங்களும் பயப்படவும் வேலைச் செலுத்தியவனே, கயிலாய மலையில் திரு நடனம் செய்யும் தந்தையாகிய சிவபெருமானுக்கு மனம் உருகுமாறு அவர் முன்பு விருப்பத்துடன் கொஞ்சி விளையாடி, சிதம்பரத்தில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 452 - சிதம்பரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தத், அழகிய, திகுதிகு, தீதக, தாதக, தகதிமி, தொந்தத், திகுட, தகுதகு, தனதன, கொடிய, தானன, தகுட, பெருமாளே, கந்தப், நடனம், செவ்விய, சூரர்கள், பறைவகை, தடுடு, டுடுடுடு, கொஞ்சிக், டாடக, தபலை, வீணைகள், கரடி, பசிகள்