பாடல் 446 - திருக்காளத்தி - திருப்புகழ்

ராகம் -
கல்யாணி;தாளம் - அங்கதாளம் - 8 1/2
தகிடதக-2 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தகிடதக-2 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனத்தா தத்தத் தனனா தந்தத் தனத்தா தத்தத் தனனா தந்தத் தனத்தா தத்தத் தனனா தந்தத் ...... தனதான |
சரக்கே றித்தப் பதிவாழ் தொந்தப் பரிக்கா யத்திற் பரிவோ டைந்துச் சதிக்கா ரர்ப்புக் குலைமே விந்தச் ...... செயல்மேவிச் சலித்தே மெத்தச் சமுசா ரம்பொற் சுகித்தே சுற்றத் தவரோ டின்பத் தழைத்தே மெச்சத் தயவோ டிந்தக் ...... குடிபேணிக் குரக்கோ ணத்திற் கழுநா யுண்பக் குழிக்கே வைத்துச் சவமாய் நந்திக் குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப் ...... படுவேனைக் குறித்தே முத்திக் குமறா வின்பத் தடத்தே பற்றிச் சகமா யம்பொய்க் குலக்கால் வற்றச் சிவஞா னம்பொற் ...... கழல்தாராய் புரக்கா டற்றுப் பொடியாய் மங்கக் கழைச்சா பத்தைச் சடலா னுங்கப் புகைத்தீ பற்றப் புகலோ ரன்புற் ...... றருள்வோனே புடைத்தே யெட்டுத் திசையோ ரஞ்சத் தனிக்கோ லத்துப் புகுசூர் மங்கப் புகழ்ப்போர் சத்திக் கிரையா நந்தத் ...... தருள்வோனே திருக்கா னத்திற் பரிவோ டந்தக் குறக்கோ லத்துச் செயலா ளஞ்சத் திகழ்ச்சீ ரத்திக் கழல்வா வென்பப் ...... புணர்வோனே சிவப்பே றுக்குக் கடையேன் வந்துட் புகச்சீர் வைத்துக் கொளுஞா னம்பொற் றிருக்கா ளத்திப் பதிவாழ் கந்தப் ...... பெருமாளே. |
பொருள் மிகுந்த இந்தப் பூமியில் வாழ்கின்ற சம்பந்தத்தை வகிக்கின்ற இவ்வுடலில் அன்பு பூண்டவர் போன்று உள்ள ஐந்து (பொறிகளாகிய) மோசக்காரர்கள் புகுந்து, அழிவுக்குக் காரணமான இத்தகைய தொழில்களை விரும்பி மேற்கொண்டு, சஞ்சலப்பட்டு, மிகவும் குடும்பம், செல்வம் ஆகியவற்றைச் சுகத்துடன் அனுபவித்து, சுற்றத்தாருடன் மகிழ்ச்சி மிகுந்து புகழும்படி அன்புடனே இந்த வாழ்விடத்தை விரும்பி, (இறுதியில்) பிளவுபட்ட கூர்மையான மூக்கை உடைய கழுகும், நாயும் உண்ணும்படி குழியில் வைத்துப் பிணமாய்க் கெடுகின்ற இந்தக் குடிசையாகிய உடலையே விரும்பி, பயனற்று அழிதல் உறுகின்ற என்னை, குறிக் கொண்டு, முக்திக்கு மாறுதல் இல்லாத இன்ப வழியைக் கைப்பற்றி, உலக மாயை, பொய், குலம், குடி என்கின்ற பற்றுக் கோடுகள் வற்றிப்போக, சிவ ஞானமாகிய உனது அழகிய திருவடியைத் தந்து அருளுக. திரி புரம் என்னும் காடு அழிந்து பொடியாய் மறையவும், கரும்பு வில்லை ஏந்தியவனும் அழகிய உடலை உடையவனுமான மன்மதன் அழியவும், புகை கொண்ட தீயை (நெற்றிக் கண்ணால்) பற்றச் செய்த அந்த வெற்றியாளராகிய சிவபிரானால் அன்பு கொண்டு அருளப்பட்டவனே, அடித்து வீழ்த்தியே எட்டுத் திக்குகளிலும் உள்ளோர்களும் பயப்படும்படி, தனிப்பட்ட உருவத்துடன் புகுந்த சூரன் அழியும்படி அவனை போரில் புகழ் கொண்ட சக்தி வேலாயுதத்துக்கு உணவாக மகிழ்ச்சியுடன் அருளியவனே, அழகிய வள்ளி மலைக் காட்டில் நீஅன்பு பூண்டு செல்ல, அந்தக் குறக்கோலம் பூண்டிருந்த இலக்குமி போன்ற வள்ளி (யானையைக் கண்டு) பயப்பட்டதும் விளங்கும் சீர் பெற்ற (இந்த) யானைக்கு பயந்து அழ வேண்டாம், வா என்று சொல்லி, அவளை அணைந்தவனே, சிவகதி அடையும் பேற்றுக்கு, கடையவனாகிய நான் வந்து உட்சேருவதற்கு வேண்டிய சிறப்பினைத் தந்து என்னை ஏற்றுக் கொள்வாயாக. ஞானமும் பொலிவும் அழகும் நிறைந்த திருக் காளத்தி* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.
* திருக்காளத்தி என்னும் 'காளஹஸ்தி' ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் ரேணுகுண்டாவுக்கு வடகிழக்கில் 15 மைலில் உள்ளது. பஞ்சபூதத் தலங்களுள் ஒன்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 446 - திருக்காளத்தி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - விரும்பி, என்னும், அழகிய, தகதிமி, தந்தத், தனத்தா, தத்தத், தனனா, கொண்டு, என்னை, கொண்ட, வள்ளி, தந்து, கந்தப், பரிவோ, பதிவாழ், மங்கப், னம்பொற், பெருமாளே, பொடியாய், அன்பு