பாடல் 426 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ஆனந்த
பைரவி ; தாளம் - அங்கதாளம் - 9
தகதிமி-2, தகதகிட-2 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தகதிமி-2, தகதகிட-2 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனன தனந்தனந் தான தத்த தந்த தனன தனந்தனந் தான தத்த தந்த தனன தனந்தனந் தான தத்த தந்த ...... தனதனத் தனதான |
தமர குரங்களுங் காரி ருட்பி ழம்பு மெழுகிய அங்கமும் பார்வை யிற்கொ ளுந்து தழலுமிழ் கண்களுங் காள மொத்த கொம்பு ...... முளகதக் கடமாமேல் தனிவரு மந்தகன் பாசம் விட்டெ றிந்து அடவரு மென்றுசிந் தாகு லத்தி ருந்து தமரழ மைந்தருஞ் சோக முற்றி ரங்க ...... மரணபக் குவமாநாள் கமல முகங்களுங் கோம ளத்தி லங்கு நகையு நெடுங்கணுங் காதி னிற்று லங்கு கனக குதம்பையுந் தோடும் வஜ்ர அங்க ...... தமுமடற் சுடர்வேலுங் கடிதுல கெங்கணுந் தாடி யிட்டு வந்த மயிலுமி லங்கலங் கார பொற்ச தங்கை கழலொலி தண்டையங் காலு மொக்க வந்து ...... வரமெனக் கருள்கூர்வாய் இமகிரி வந்தபொன் பாவை பச்சை வஞ்சி அகில தலம்பெறும் பூவை சத்தி யம்பை யிளமுலை யின்செழும் பால்கு டுத்தி லங்கு ...... மியல்நிமிர்த் திடுவோனே இறைவ ரிறைஞ்சநின் றாக மப்ர சங்க முரைசெய் திடும்ப்ரசண் டாவி சித்து நின்ற ரணமுக துங்கவெஞ் சூரு டற்பி ளந்த ...... அயிலுடைக் கதிர்வேலா அமண ரடங்கலுங் கூட லிற்றி ரண்டு கழுவி லுதைந்துதைந் தேற விட்டு நின்ற அபிநவ துங்ககங் காந திக்கு மைந்த ...... அடியவர்க் கெளியோனே அமரர் வணங்குகந் தாகு றத்தி கொங்கை தனில்முழு குங்கடம் பாமி குத்த செஞ்சொ லருணை நெடுந்தடங் கோபு ரத்த மர்ந்த ...... அறுமுகப் பெருமாளே. |
ஒலி செய்கின்ற (கால்) குளம்புகளும், கரிய நிறமுடைய இருளின் திரட்சி பூசியது போன்ற உடலும், பார்க்கும் பார்வையில் எரிகின்ற நெருப்பைக் கக்கும் கண்களும், ஊது கொம்பு போன்ற நீண்ட கொம்புகளும் உள்ள, கோபத்தை உடைய மத யானையைப்போன்ற எருமையின் மீது, தனியனாக வரும் யமன் பாசக் கயிற்றை வீசி எறிந்து, கொல்ல வருவான் என்னும் மனக் கவலையில் இருந்து சுற்றத்தார்கள் அழவும், எனது மக்களும் கவலை உற்று வருந்தவும், மரணம் குறுகிக் கூடும் நாளில், தாமரை போன்ற திருமுகங்களும், அவற்றில் அழகுடன் விளங்குகின்ற புன்சிரிப்பும், நீண்ட கண்களும், காதில் விளங்கும் பொன்னாலான காதணியும், தோடும், வைர ரத்தினத்தால் ஆகிய தோள் அணியாகிய வாகுவலயமும், வெற்றி பொருந்திய ஒளி வீசும் வேலாயுதமும், விரைவாக உலக முழுதும் பயணம் சென்று வந்த மயிலும், விளங்கும் அலங்காரமாய் உள்ள பொன்னாலான சதங்கை, வீரக் கழல்கள், ஒலிக்கும் தண்டைகள் அணிந்த திருவடிகளும், இவை யாவும் ஒன்று படக் கூடி வர, நீ வரத்தை எனக்கு அருள் புரிவாயாக. இமகிரியின் அரசன் பெற்ற அழகிய பதுமையாகிய பார்வதி, பச்சை நிறம் கொண்ட இளங் கொடி, அண்டங்களை எல்லாம் பெற்ற பூவை, சக்தி அம்பை எனப்படும் உமா தேவியின் இளமையான மார்பிலிருந்து தேர்ந்த ஞானமாகிய பாலைக் குடித்து விளங்குகின்ற (சம்பந்தராக வந்து), (பாண்டியனுக்கு) இயற்கையாக அமைந்த கூனை நிமிர்த்தியவனே. சிவபெருமான் வணங்கிக் கேட்க, அவர் முன் நின்று ஆகம ஞான உபதேசம் செய்த வீரனே, பேரணிகளை இறுகக் கட்டி போர் முனைக்கு வந்து எதிர்த்த கொடிய சூரனுடைய உடலைப் பிளந்த வேலாயுதத்தை உடைய ஒளி வீசும் வேலனே, சமணர்கள் அனைவரும் மதுரையில் கூட்டமாக (வாதிட்டுத் தோற்றபின்) ஒவ்வொருவரும் கழுமுனையில் காலூன்றி உதைத்து ஏறி இறக்கும்படி விட்டு நின்ற புதுமைப் பிரானே, பரிசுத்தமான கங்கைநதிக்கு மகனே, அடியவர்களுக்கு எளிமையானவனே, தேவர்கள் தொழும் கந்தனே, குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்புகளில் முழுகிய, கடப்ப மாலை அணிந்தவனே, மிகவும் வல்ல புகழ் விளங்கும் திருவண்ணாமலையின் பெரிய கோபுரத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 426 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வந்து, லங்கு, நின்ற, தகிட, தந்த, தனந்தனந், தத்த, விளங்கும், உள்ள, உடைய, பொன்னாலான, பெற்ற, வீசும், நீண்ட, விளங்குகின்ற, பூவை, தோடும், தாகு, கொம்பு, வந்த, பச்சை, பெருமாளே, விட்டு, கண்களும்