பாடல் 424 - திருவருணை - திருப்புகழ்

ராகம் -...; தாளம்
-
தந்தத் தந்தத் தனதன தானன தந்தத் தந்தத் தனதன தானன தந்தத் தந்தத் தனதன தானன ...... தனதான |
செஞ்சொற் பண்பெற் றிடுகுட மாமுலை கும்பத் தந்திக் குவடென வாலிய தெந்தப் பந்தித் தரளம தாமென ...... விடராவி சிந்திக் கந்தித் திடுகளை யாமுன தங்கத் தம்பொற் பெதுவென வோதுவ திண்டுப் புந்தித் திடுகனி தானுமு ...... னிதழாமோ மஞ்சொக் குங்கொத் தளகமெ னாமிடை கஞ்சத் தின்புற் றிடுதிரு வேயிள வஞ்சிக் கொம்பொப் பெனுமயி லேயென ...... முறையேய வந்தித் திந்தப் படிமட வாரொடு கொஞ்சிக் கெஞ்சித் தினமவர் தாடொழு மந்தப் புந்திக் கசடனெ நாளுன ...... தடிசேர்வேன் நஞ்சைக் கண்டத் திடுபவ ராரொடு திங்கட் பிஞ்சக் கரவணி வேணியர் நம்பர்ச் செம்பொற் பெயரசு ரேசனை ...... யுகிராலே நந்தக் கொந்திச் சொரிகுடல் சோர்வர நந்திக் கம்பத் தெழுநர கேசரி நஞ்சக் குண்டைக் கொருவழி யேதென ...... மிகநாடி வெஞ்சச் சிம்புட் சொருபம தானவர் பங்கிற் பெண்கற் புடையபெ ணாயகி விந்தைச் செங்கைப் பொலிசுத வேடுவர் ...... புனமீதே வெண்டித் தங்கித் திரிகிழ வாவதி துங்கத் துங்கக் கிரியரு ணாபுரி வெங்கட் சிங்கத் தடிமயி லேறிய ...... பெருமாளே. |
(முதல் 11 வரிகள் வேசைகளை வர்ணிப்பது கூறப்படுகிறது). செம்மையான சொற்களின் தகுதியைப் பெற்றுள்ள குடம் போன்ற பருத்த மார்பகம் ஒப்பிடுங்கால் கும்ப கலசம், யானை, மலை என விளங்கியும், வெண்மை நிறம் கொண்ட பற்களின் வரிசை முத்துப் போல் விளங்கியும், துன்பத்தில் என் உயிரை எடுத்து, மணம் வீச வல்ல களை வாய்ந்தனவாய் உள்ள உன்னுடைய அங்கங்களின் அழகிய பொலிவுக்கு எதை நான் உவமையாகக் கூறுவது? திண்மையான பவளமும், தித்திப்பு உள்ள பழமும் உன் வாயிதழுக்கு நிகர் ஆகுமோ? மேகத்தை ஒக்கும் திரண்டு நிறைந்துள்ள கூந்தல் என்றெல்லாம் கூறி, நெருங்கிய தாமரையில் மகிழ்ந்து வீற்றிருக்கும் லக்ஷ்மியே, இளமை வாய்ந்த வஞ்சிக் கொடிக்கு ஒப்பான மயில் போன்றவளே, என்றெல்லாம் முறை பொருந்த வந்தனைப் பேச்சுக்கள் பேசி, இவ்வாறு விலைமாதர்களுடன் கொஞ்சியும், கெஞ்சிப் பேசியும், தினமும் அவர்களின் திருவடியைத் தொழுகின்ற மழுங்கின அறிவுடைய குற்றமுள்ளவனாகிய நான் உனது திருவடியை என்று சேர்வேன்? விஷத்தைக் கழுத்தில் தரிப்பவர், ஆத்தி மாலையோடு, இளம் பிறையையும், எலும்பையும், பாம்பையும் அணிந்துள்ள சடையினர் ஆகிய நம் சிவபெருமான், இரணியன் என்னும் பெயருள்ள அசுரனை நகத்தாலே அழிந்து போகும்படி குத்திக் கிழித்து, ரத்தம் சொரிந்து விழும் குடல் தளர்ச்சி உறும்படியாக தூணிலே தோன்றி வெளி வந்த நரசிம்ம மூர்த்தியின் வெறி நைந்து அடங்கிக் குறுகுவதற்கு வழி யாதென்று மிகவும் யோசித்து, கடுமை கொண்டவராய் சரபப் பட்சியின்* வடிவம் கொண்டவராகிய சிவபிரானின் இடப் பாகத்தில் இடம் கொண்டவளும், கற்பு நிறைந்த பெண்களின் நாயகியுமாகிய பார்வதியின் அழகிய செங்கையில் விளங்கும் குழந்தையே, வேடர்களின் தினைப் புனத்தில் களைப்பு உற்று தங்கித் திரிகின்ற கிழவனே, மிக உயர்ந்ததும், பரிசுத்தமானதுமான மலை உள்ள திருஅண்ணாமலை என்னும் ஊரில், விரும்பத்தக்க கண்களை உடைய சிங்காசனம் போன்ற மயிலின் மேல் ஏறிய பெருமாளே.
* இரணியனை வதைத்த நரசிம்மம் (திருமால்) உக்கிரம் கொண்டு உலகங்களை வருத்தத் தொடங்கினார். தேவர்கள் முறையிட, சிவபெருமான் வீரபத்திரரை ஏவ, அவர் சரபப்பட்சியின் உருவம் எடுத்து அந்த நரசிங்கத்தைக் கீறி, அதன் தோலையும், முகத்தையும் சிவன் முன் வைத்தார். அதனால் சிவபெருமானுக்கு, சிங்க உரியும், நாரசிங்காம்பரன் என்ற பெயரும் உண்டாயின - சிவ புராணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 424 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தத், உள்ள, தானன, தனதன, நான், சிவபெருமான், என்னும், அழகிய, என்றெல்லாம், விளங்கியும், வஞ்சிக், தங்கித், பெருமாளே, எடுத்து