பாடல் 423 - திருவருணை - திருப்புகழ்

ராகம் -.....,
தாளம் -
தத்த தத்ததன தத்த தத்ததன தத்த தத்ததன தத்த தத்ததன தத்த தத்ததன தத்த தத்ததன ...... தந்ததான |
சுக்கி லச்சுரொணி தத்தி லுற்றநளி னத்தி லப்புவென ரத்த முற்றிசுக சுக்கி லக்குளிகை யொத்து கெர்ப்பகுகை ...... வந்துகோலத் தொப்பை யிட்டவயி றிற்பெ ருத்துமிக வட்ட மிட்டுடல வெப்ப முற்றுமதி சொற்ற பத்தின்மறி யக்ஷ ரத்தினுடை ...... விஞ்சையாலே கக்க நற்புவியி லுற்ற ரற்றிமுலை யைக்கொ டுக்கவமுர் தைப்பு சித்துவளர் கைக்க சத்தியொடு ழைத்து தத்துநடை ...... அந்தமேவிக் கற்று வெற்றறிவு பெற்று தொக்கைமயி லொத்த மக்கள்மய லிற்கு ளித்துநெறி கட்டி யிப்படிபி றப்பி லுற்றுடல ...... மங்குவேனோ தெற்க ரக்கர்பவி ஷைக்கு லைத்துவிட ணற்கு நத்தரச ளித்து முத்திகொடு சித்தி ரத்திருவு ரத்த சக்கிரிதன் ...... மருகோனே செக்க ரத்தின்மலை முப்பு ரத்திலெரி யிட்ட சத்திசிவ னுற்று நத்தமிகு சித்த னைத்தையும்வி ழித்த சத்தியுமை ...... தந்தபாலா தர்க்க மிட்டசுர ரைக்கெ லித்துமலை யுக்கெ ழுக்கடல்கொ ளுத்தி அட்டதிசை தட்ட முட்டையடை யக்கொ டிப்புகையின் ...... மண்டும்வேலா தத்தை வித்ருமநி றத்தி முத்தணிகு றத்தி கற்பகவ னத்தி சித்தமவை தக்கு நத்தஅரு ணைக்கி ரிக்குள்மகிழ் ...... தம்பிரானே. |
ஆணின் விந்துவும், பெண்ணின் ரத்தத்திலுள்ள இந்திரியமும் ஒன்றுபட்டு (சிசு உற்பத்தியாகி), தாமரை இலையில் நீர் போல ரத்தம் நிறைந்து, சுகத்தைத் தரும் சுக்கிலத்தாலாகிய ஒரு மந்திர சக்தி உள்ள மாத்திரை அளவைப் பூண்டு, கருப்பையில் தோன்றி, அழகிய தொப்பை இடுகின்ற வயிற்றில் வளர்ந்து, அந்த வயிற்றில் மிகவும் சுழன்று, உடலில் சூடு வரப் பெற்று, சொல்லப்பட்ட பத்தாவது மாதத்தில் கீழ் மேலாக விழச் செய்யவல்ல (பிரமனுடைய) எழுத்துக்களின் மந்திர சக்தியால், வெளியில் தள்ளிவிட, நல்ல இப் பூமியில் சேர்ந்து, குழந்தை அழுது (தாயின்) முலையைத் தர, முலைப்பால் அமுதை உண்டு, வளர்வதற்கு வலிமையின்மையால் முயன்று, தத்தித் தத்தி நடக்கும் நடையழகைப் பெற்று, நூல்களைப் படித்து பயனில்லாத அறிவைப் பெற்று, தோகை மயில் போன்ற பெண்களின் மோகத்தில் மூழ்கி, விதியினால் கட்டுண்டு இவ்வாறு பிறவியை அடைந்து, (இறுதியாக) உடல் அழிபட்டு இறந்து படுவேனோ? தெற்கில் இருந்த அரக்கர்களின் செருக்கை அழித்து, விபீஷணனுக்கு விரும்பத் தக்க (இலங்கை) அரசாட்சியைத் தந்து முக்தியைக் கொடுத்தவரும், மிக்க அழகிய லக்ஷ்மியை மார்பில் தரித்தவரும், சக்கரத்தை ஏந்தியவரும் ஆகிய திருமாலின் மருகனே, சம்மையான திருக்கரத்தில் மேரு மலையாகிய வில்லை ஏந்தி திரிபுரங்களில் தீ பற்றும்படிச் செய்த தேவி, சிவபெருமானின் அருகாமையில் இருந்து, மிகவும் விரும்பத்தக்க அஷ்ட சித்துக்கள்* முதலான யாவற்றையும் தரிசித்த (சித்துக்களுக்குப் பிறப்பிடமான) பார்வதி பெற்ற குழந்தையே, வாதிட்டு போருக்கு வந்த அசுரர்களை வென்று, மலைகளைப் பொடியாக்கி, ஏழு கடல்களையும் எரி இட்டு, எட்டுத் திசைகளும் தரைமட்டமாகி தவிடு பட, நெருப்பின் புகைக் கொடியுடன் விரைந்து உக்கிரத்துடன் நெருங்கும் வேலனே, கிளி போன்றவளும், பவள நிறம் உடையவளும், முத்து மாலை அணிந்தவளும் ஆகிய குறப் பெண் (வள்ளி), கற்பக மரக் காடு உள்ள பான்னுலகத்தவள் (தேவயானை) ஆகிய இருவர்களின் மனங்கள் பொருந்தி விரும்ப, திருவண்ணாமலைக்குள் மகிழும் தம்பிரானே.
* அஷ்டமாசித்திகள் பின்வருமாறு:அணிமா - அணுவிலும் சிறிய உருவினன் ஆதல்.மகிமா - மேருவினும் பெரிய உருவினன் ஆதல்.கரிமா - ஆயுதங்களுக்கும், ஆகாயத்துக்கும், காலத்துக்கும் அப்பால் ஆதல்.லகிமா - ஆகாயகமனம், அந்தரத்தில் இருத்தல்.பிராப்தி - பர காயங்களில் புகுதல் (கூடுவிட்டு கூடுபாய்தல்).பிராகாமியம் - எல்லாவற்றிலும் நிறைந்திருத்தல்.ஈசத்துவம் - எல்லாவற்றுக்கும் நாதனாக இருத்தல்.வசித்துவம் - எல்லா இடங்களிலும் இருந்து யாவற்றையும் வசப்படுத்தல்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 423 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்த, தத்ததன, பெற்று, ஆகிய, ஆதல், வயிற்றில், மிகவும், யாவற்றையும், இருத்தல், உருவினன், அழகிய, இருந்து, மந்திர, னத்தி, தத்தி, சுக்கி, ரத்த, தொப்பை, தம்பிரானே, றத்தி, உள்ள