பாடல் 390 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - .......
தனதன தனன தனதன தனன தனதன தனதன ...... தந்ததான |
இடமடு சுறவை முடுகிய மகர மெறிகட லிடையெழு ...... திங்களாலே இருவினை மகளிர் மருவிய தெருவி லெரியென வருசிறு ...... தென்றலாலே தடநடு வுடைய கடிபடு கொடிய சரம்விடு தறுகண ...... நங்கனாலே சரிவளை கழல மயல்கொளு மரிவை தனிமல ரணையின ...... லங்கலாமோ வடகுல சயில நெடுவுட லசுரர் மணிமுடி சிதறஎ ...... றிந்தவேலா மறமக ளமுத புளகித களப வளரிள முலையைம ...... ணந்தமார்பா அடலணி விகட மரகத மயிலி லழகுட னருணையி ...... னின்றகோவே அருமறை விததி முறைமுறை பகரு மரியர பிரமர்கள் ...... தம்பிரானே. |
இருக்கும் இடத்திலிருந்தே வருத்தும் சுறா மீனை விரட்டி அடிக்கும் மகர மீன்கள் வாழ்வதும் அலைகளை வீசுவதுமான கடலில் எழுகின்ற சந்திரனாலும், நல் வினை தீ வினை இரண்டுக்கும் காரணமான மாதர்கள் வாழும் தெருவில் நெருப்பைப் போல வீசுகின்ற சிறிய தென்றல் காற்றினாலும், தடாகத்தின் நடுவே உள்ள நறு மணம் வீசுகின்ற கொடியதான தாமரை, நீலோத்பலம் ஆகிய மலர்ப் பாணங்களைச் செலுத்தும் இரக்கமற்ற மன்மதனாலும், சரிகின்ற வளையல்கள் கழன்று விழுமாறு காம மோகம் கொள்ளும் இந்தப் பெண் தனியாக மலர்ப் படுக்கையில் நொந்து போவது தகுமோ? வடக்கே உள்ள சிறந்த மேரு மலை போன்ற பெரிய உடலைக் கொண்ட அசுரர்களின் மணி முடிகள் சிதறிப் போகும்படி செலுத்திய வேலனே, வேடர் மகளான வள்ளியை, அமுதமும் புளகிதம் கொண்ட சந்தனக் கலவை பூசப்பட்ட வளர்ந்த இளமை வாய்ந்த மார்பினளான வள்ளியை, மணம் கொண்ட திருமார்பனே, வலிமையும், அலங்காரமும், வசீகரமும், பச்சை நிறமும் உள்ள மயிலில் அழகுடன் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அரசே, அரிய வேதங்களின் கூட்டம் முறைப்படி ஓதும் திருமால், சிவன், பிரமன் ஆகிய மூவர்க்கும் தம்பிரானே.
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில், முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், தென்றல், மன்மதன், மலர்க் கணைகள், இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 390 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, கொண்ட, உள்ள, மலர்ப், தம்பிரானே, வள்ளியை, ஆகிய, மணம், தென்றல், வினை, வீசுகின்ற