பாடல் 389 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - முகாரி;
தாளம் - மிஸ்ர சாபு - 3 1/2
தகதிமி-2, தகிட-1 1/2
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தனனம் தனதன தனனம் தனதன தனனம் ...... தனதான |
விரகொடு வளைசங் கடமது தருவெம் பிணிகொடு விழிவெங் ...... கனல்போல வெறிகொடு சமனின் றுயிர்கொளு நெறியின் றெனவிதி வழிவந் ...... திடுபோதிற் கரவட மதுபொங் கிடுமன மொடுமங் கையருற வினர்கண் ...... புனல்பாயுங் கலகமும் வருமுன் குலவினை களையுங் கழல்தொழு மியல்தந் ...... தருள்வாயே பரவிடு மவர்சிந் தையர்விட முமிழும் படவர வணைகண் ...... டுயில்மாலம் பழமறை மொழிபங் கயனிமை யவர்தம் பயமற விடமுண் ...... டெருதேறி அரவொடு மதியம் பொதிசடை மிசைகங் கையுமுற அனலங் ...... கையில்மேவ அரிவையு மொருபங் கிடமுடை யவர்தங் கருணையில் மருவும் ...... பெருமாளே. |
சாமர்த்தியத்துடன் சூழ்ந்து துன்பத்தைத் தருகின்ற கொடிய பாசக் கயிற்றைக் கொண்டு, கண்கள் தீய நெருப்புப்போல கோபத்துடன் யமன் வந்து வாயிலில் நின்று, உயிரைக் கொள்ள வேண்டிய முறை நாள் இது என்று தெரிந்து, விதியின் ஏற்பாட்டின்படி நெருங்குகின்ற அச்சமயத்தில், வஞ்சகம் மிகுந்த மனத்துடன் மாதர்கள், சுற்றத்தார்கள் ஆகியோரின் கண்களில் நீர் பாய்கின்ற குழப்பம் வருவதற்கு முன்பாக, முந்தை ஊழ்வினைகளைத் தொலைக்கும் திருவடிகளைத் துதிக்கும் ஒழுக்கத்தைக் கொடுத்து அருள் புரிவாயாக. தன்னைத் துதிப்பவர்களுடைய மனத்தில் உறைபவரும், நஞ்சைக் கக்கும் பல பணாமுடிகளை உடைய பாம்பு (ஆதிசேஷன்) என்ற படுக்கையில் உறங்குபவரும் ஆகிய திருமால், அழகிய பழைய வேதத்தை ஓதுபவனும், தாமரையில் வீற்றிருப்பவனும் ஆகிய பிரமன், அங்கிருந்த தேவர்கள் அனைவரின் பயம் நீங்க ஆலகால விஷத்தை உட்கொண்டு, (நந்தியாகிய) ரிஷப வாகனத்தின் மேல் ஏறி, பாம்புடன், சந்திரனையும் தரித்த ஜடையின் மேல் கங்கையையும் பொருத்தி, நெருப்பு அழகிய கையில் விளங்க, பார்வதி தேவியை தம் உடலின் இடது பாகத்தில் அமைத்துக் கொண்டவராகிய சிவ பெருமான் (ஆகிய மும்மூர்த்திகளும்) வீற்றிருக்கும் திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 389 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - ஆகிய, தனதன, தனனம், மேல், பெருமாளே, அழகிய