பாடல் 375 - திருவருணை - திருப்புகழ்
ராகம் - .....;
தாளம் - ........
தனன தனதன தனன தனதன தனன தனதன தனன தனதன தனன தனதன தனன தனதன ...... தனதான |
கமரி மலர்குழல் சரிய புளகித கனக தனகிரி யசைய பொருவிழி கணைக ளெனநுதல் புரள துகிலதை ...... நெகிழ்மாதர் கரிய மணிபுர ளரிய கதிரொளி பரவ இணைகுழை யசைய நகைகதிர் கனக வளைகல நடைகள் பழகிகள் ...... மயில்போலத் திமிரு மதபுழு கொழுக தெருவினி லலைய விலைமுலை தெரிய மயல்கொடு திலத மணிமுக அழகு சுழலிக ...... ளிதழூறல் திரையி லமுதென கழைகள் பலசுளை யெனவு மவர்மயல் தழுவு மசடனை திருகு புலைகொலை கலிகள் சிதறிட ...... அருள்தாராய் குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர ...... எனதாளங் குரைசெய் முரசமொ டரிய விருதொலி டமட டமடம டமட டமவென குமுற திமிலைச லரிகி னரிமுத ...... லிவைபாட அமரர் முநிவரு மயனு மனைவரு மதுகை மலர்கொடு தொழுது பதமுற அசுரர் பரிகரி யிரத முடைபட ...... விடும்வேலா அகில புவனமொ டடைய வொளிபெற அழகு சரண்மயில் புறம தருளியொ ரருண கிரிகுற மகளை மருவிய ...... பெருமாளே. |
நிறைந்த வண்டுகள் மொய்க்கும் கூந்தல் அவிழ்ந்து சரிய, புளகிதம் கொண்ட பொன் மயமான மலையைப் போன்ற மார்பகங்கள் அசைய, போரிடுவது போன்ற கண்கள் அம்புகள் என்னும்படியாக விளங்க, நெற்றி புரள, ஆடையை நெகிழ விடுகின்ற விலைமாதர்கள், கழுத்தில் கரிய மணி மாலை புரள்வதால் அருமையான ஜோதி ஒளி பரவ, இரண்டு குண்டலங்களும் அசைய, ஒளி விளக்கமுள்ள பொன்னாலாகிய வளையல்கள் கலகல என ஒலிக்க, மயில் போல நடை பயிற்றுபவர்கள், பூசப்பட்ட சாரமான புனுகு சட்டம் ஒழுகும்படி வீதியில் அலைய, விற்கப்படும் மார்பு வெளித்தோன்ற காமப் பற்றுடன் நெற்றிப் பொட்டு அணிந்துள்ள முக அழகுடன் அங்குமிங்கும் திரிபவர்களாகிய விலைமாதர்களின் வாயிதழ் ஊறலை பாற்கடலில் எடுத்த அமுதே இது என்றும், கரும்புச் சாறு இது என்றும், பலாப்பழத்தின் சுளை இது என்றும் கருதி, அந்த விலைமாதர்களை மோகத்தில் தழுவுகின்ற முட்டாளாகிய எனது குற்றங்கள், இழிவான குணங்கள், கொலைக்கு ஈடான நீசபுத்தி முதலியவைகள் சிதறி விலக அருள் புரிவாயாக. குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர குமர குருபர என்னும் ஓசையுடன் தாளங்கள் ஒலி செய்கின்ற முரசு போன்ற போர்ப் பறையுடன் அருமையான வெற்றி ஒலிகள் டமடம டமட டம டமட இவ்வாறு பலத்து ஒலிக்க, திமிலைப் பறை, சல்லரி என்னும் ஜாலரா வகை, கின்னரி என்னும் யாழ்வகை முதலிய வாத்தியங்கள் இசைக்க, தேவர்களும், முனிவர்களும் பிரமனும் மற்றும் எல்லாரும் தேன் நிறைந்த பூக்களோடு வணங்கி தத்தம் பதவிகளைப் பெற, அசுரர்களின் குதிரை, யானை, தேர்ப்படைகள் உடைபட்டு ஒழியவும் வேலாயுதத்தைச் செலுத்தியவனே, எல்லா உலகங்களும் எங்கும் ஒளி பெறவும் அழகிய பாதங்களை மயிலின் மேல் இருத்தி, ஒப்பற்ற திருவண்ணாமலையில் குறப் பெண்ணாகிய வள்ளியைச் சேர்ந்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 375 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - குமர, குருபர, தனதன, என்றும், என்னும், அசைய, ஒலிக்க, நிறைந்த, அருமையான, டமடம, கரிய, புரள, அழகு, சரிய, யசைய, பெருமாளே