பாடல் 374 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - .........
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான |
விடமு மமுதமு மிளிர்வன இணைவிழி வனச மலதழல் முழுகிய சரமென விரைசெய் ம்ருகமத அளகமு முகிலல ...... வொருஞான விழியின் வழிகெட இருள்வதொ ரிருளென மொழியு மமுதல வுயிர்கவர் வலையென விழையு மிளநகை தளவல களவென ...... வியனாபித் தடமு மடுவல படுகுழி யெனஇடை துடியு மலமத னுருவென வனமுலை சயில மலகொலை யமனென முலைமிசை ...... புரள்கோவை தரள மணியல யமன்விடு கயிறென மகளிர் மகளிரு மலபல வினைகொடு சமையு முருவென வுணர்வொடு புணர்வது ...... மொருநாளே அடவி வனிதையர் தனதிரு பரிபுர சரண மலரடி மலர்கொடு வழிபட அசல மிசைவிளை புனமதி லினிதுறை ...... தனிமானும் அமர ரரிவையு மிருபுடை யினும்வர முகர முகபட கவளத வளகர அசல மிசைவரு மபிநவ கலவியும் ...... விளையாடுங் கடக புளகித புயகிரி சமுகவி கடக கசரத துரகத நிசிசரர் கடக பயிரவ கயிரவ மலர்களும் ...... எரிதீயுங் கருக வொளிவிடு தனுபர கவுதம புநித முநிதொழ அருணையி லறம்வளர் கருணை யுமைதரு சரவண சுரபதி ...... பெருமாளே. |
விஷமும் அமுதமும் ஒன்று சேர்ந்து விளங்குகின்ற இரண்டு கண்களும் தாமரைகள் அல்ல, நெருப்பில் தோய்த்த அம்புகளாம் என்றும், நறு மணம் கமழும் கஸ்தூரி வாசனை கொண்ட கூந்தல் கரு மேகம் அல்ல, ஒப்பற்ற ஞான விழி நாடும் வழியை மறைக்கும் சூனியத்தைத் தரும் தனி இருளாம் என்றும், பேச்சும் அமுதம் அன்று, உயிரையே கவரும் வலை என்றும், விரும்பும் காமத்தை ஊட்டும் பற்கள் முல்லை அரும்பு அன்று, திருட்டுத்தனத்தைத் தம்மிடம் ஒளித்து வைத்துள்ளவை என்றும், வியப்பைத் தரும் தொப்புள் என்னும் இடமும் ஆற்றிடைப் பள்ளம் அன்று, (யானைகளைப் பிடிக்க அமைந்த) பெருங்குழியாம் என்றும், இடை உடுக்கை அன்று, மன்மதனின் உருவமாம் என்றும் (அதாவது அருவமானது), அழகிய மார்பகம் மலை அன்று, கொலை செய்யும் யமனே என்றும், மார்பிலே புரளுகின்ற கோத்த வடம் முத்து மாலை அன்று, யமன் விட்ட பாசக் கயிறே ஆகும் என்றும், இந்த விலைமாதர்கள் மாதர்களே அல்ல, பல வினைகள் சேர்ந்து அமைந்த உருவமே என்றும் காண வல்ல ஞான உணர்ச்சியோடு கலப்பதாகிய ஒரு நாள் எனக்குக் கிடைக்குமோ? வன தேவதைகள் உன்னுடைய இரண்டு சிலம்பணிந்த, அடைக்கலம் புகத் தக்க, தாமரைத் திருவடிகளை மலர் கொண்டு வழிபட, வள்ளிமலைக்கு அருகிலே விளைந்துள்ள தினைப் புனத்தில் இனிது அமர்ந்திருந்த ஒப்பற்ற மான் போன்ற வள்ளியும், தேவர்கள் வளர்த்த மகளாகிய தேவயானையும் இரண்டு பக்கங்களிலும் வர, பிளிறுவதும், முகத்தில் தொங்கும் அலங்காரத் துணி கொண்டதும், உணவு உண்டைகளை உட்கொள்வதும், வெண்ணிறம் கொண்டதும், துதிக்கை உடையதுமான மலை போன்ற யானையின்* மீது எழுந்தருளும் புதுமை வாய்ந்தவனே, (வள்ளி, தேவயானையுடன்) சேர்க்கை இன்பத்தில் விளையாடுகின்றனவும், கங்கணம் அணிந்தனவும், புளகிதம் கொண்டுள்ளனவுமாகிய புய மலைக் கூட்டத்தை உடைய அழகு வாய்ந்த உள்ளத்தவனே, அசுரர்களுடைய யானை, தேர், குதிரை, காலாட்படை ஆகியவைகளுக்கு பயங்கரத்தை ஊட்டுபவனே, செவ்வாம்பல் மலர்களும், எரிகின்ற தீயும் கருகும்படி சிவந்த ஒளியை வீசுகின்ற உடலை உடையவனே, மேலான கெளதமர் என்னும் பரிசுத்தமான முனிவர் தொழுது பூசிக்க, திருவண்ணாமலையில் அற நெறியை வளர்த்த கருணை நிறைந்த உமா தேவி பெற்றருளிய சரவண பவனே, தேவர்கள் தலைவனாகிய இந்திரனுக்குப் பெருமாளே.
* இது முருகவேளுக்கு உரிய பிணிமுகம் என்னும் யானை. பல தலங்களில் முருகனுக்கு பிணிமுக யானை வாகனமாக உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 374 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, என்றும், அன்று, இரண்டு, என்னும், யானை, அல்ல, அமைந்த, தேவர்கள், கொண்டதும், வளர்த்த, ஒப்பற்ற, சரவண, கருணை, பெருமாளே, சேர்ந்து, மலர்களும், வழிபட, தரும்