பாடல் 371 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - .........
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான |
மகர மெறிகடல் விழியினு மொழியினு மதுப முரல்குழல் வகையினு நகையினும் வளமை யினுமுக நிலவினு மிலவினு ...... நிறமூசும் மதுர இதழினு மிடையினு நடையினு மகளிர் முகுளித முலையினு நிலையினும் வனச பரிபுர மலரினு முலரினு ...... மவர்நாமம் பகரு கினுமவர் பணிவிடை திரிகினு முருகி நெறிமுறை தவறினு மவரொடு பகடி யிடுகினு மமளியி லவர்தரு ...... மநுராகப் பரவை படியினும் வசமழி யினுமுத லருணை நகர்மிசை கருணையொ டருளிய பரம வொருவச னமுமிரு சரணமு ...... மறவேனே ககன சுரபதி வழிபட எழுகிரி கடக கிரியொடு மிதிபட வடகுல கனக கனகுவ டடியொடு முறிபட ...... முதுசூதங் கதறு சுழிகட லிடைகிழி படமிகு கலக நிசிசரர் பொடிபட நடவிய கலப மதகத துரகத ந்ருபகிரி ...... மயில்வாழ்வே தகன கரதல சிவசுத கணபதி சகச சரவண பரிமள சததள சயன வனசரர் கதிபெற முனிபெறு ...... புனமானின் தரள முகபட நெறிபட நிமிர்வன தருண புளகித ம்ருகமத தனகிரி தழுவ மயல்கொடு தனிமட லெழுதிய ...... பெருமாளே. |
மகர மீன்களை வீசி எறியும் கடல் போன்ற கண்ணிலும், அவர்களது பேச்சிலும், வண்டுகள் ஒலி செய்யும் கூந்தல் வகைகளிலும், சிரிப்பிலும், வளப்பத்திலும், சந்திரன் போன்ற முகத்திலும், இலவ மலரைக் காட்டிலும் செந்நிற ஒளி விளங்கும் இனிமை தரும் வாயிதழிலும், இடையிலும் நடையிலும், மாதர்களின் அரும்பிய மார்பிலும், (அவர்கள்) நிற்கும் நிலையிலும், தாமரை போன்றதும், சிலம்பு அணிந்ததுமான மலர் போன்ற அடிகளிலும், அந்த மாதர்களின் பெயர்களைச் சொல்லிச் செபித்தாலும், அவர்கள் இட்ட வேலைகளைச் செய்வதிலேயே ஈடுபட்டுத் திரிந்தாலும், (அவர் பொருட்டு) மனம் உருகி நீதி முறை தவறி நடந்தாலும், அவர்களோடு விகட மொழிகள் பேசினாலும், படுக்கையில அவர்கள் கொடுக்கும் காமப் பற்றாகிய கடலில் முழுகினாலும், என் வசம் அழிந்தாலும், முதன் முதலில், திருவண்ணாமலைப் பதியில் நீ கருணையோடு அளித்து அருளிய மேலான ஒப்பற்ற உபதேச மொழியையும், உனது இரண்டு திருவடிகளையும் மறக்க மாட்டேன். விண்ணுலகத்துத் தேவர் தலைவனாகிய இந்திரன் துதிக்க, (சூரனுக்குத் துணையாயிருந்த) ஏழு மலைகளும் வட்டமான சக்ரவாள கிரியுடன் மிதிபட, வடக்கே உள்ள சிறந்த பொன்மயமான பருத்த (மேரு) மலை அடியோடு பொடிபட, பழைய மாமரத்து உருவில் இருந்த சூரன் அலறி, சுழி எறியும் கடலில் கிழிந்து அறுபட, மிக்க கலக்கத்தைச் செய்து வந்த அசுரர்கள் பொடிபட நடத்திய, தோகை நிரம்பிய பச்சை நிறமான குதிரையாகிய மயில் ஏறும் அரசனே, இமய மலை மயிலாகிய பார்வதியின் செல்வக் குமரனே, நெருப்பை ஏந்திய திருக் கரத்தனாகிய சிவபெருமானுடைய மகனே, கணபதியின் சகோதரனே, சரவணனே, நறு மணம் கொண்ட நூற்றிதழ்த் தாமரையில் பள்ளி கொண்டவனே, வேடர்கள் நற் கதி அடைய, சிவ முனிவர் பெற்ற, தினைப் புனம் காத்த மான் போன்ற வள்ளி நாயகியின் முத்தாலாகிய மேலாடை வளைவுபட நிமிர்ந்து எழுவனவும், இளமை வாய்ந்தனவும், புளகாங்கிதம் கொண்டனவும், கஸ்தூரி அணிந்துள்ளனவுமான மார்பகங்களாகிய மலைகளைத் தழுவ மோகம் கொண்டு ஒப்பற்ற மடல்* எழுதிய பெருமாளே.
* மடல் எழுதுதல் - தலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில் மடலாக எழுதி அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல் ஒருவரது வசைக்கும் கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு பகலும் இரவுமாக நிற்பான். அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார் தலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர். முருகன் வள்ளியை ஊரறிய மடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த புராணத்தில் வருகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 371 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, மணம், பொடிபட, எழுதிய, தலைவியின், எழுதி, செய்து, மடல், கடலில், தழுவ, மிதிபட, பெருமாளே, எறியும், மாதர்களின், ஒப்பற்ற